நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, October 24, 2007

ஞாநி .... எனக்குத் தெரிந்த குறிப்புகள்


ஆட்சியிலிருக்கும் முதல்வருக்கு வயதாகிவிட்டதென்றும் எனவே அதை அவர் வேறு யாருக்காவது கொடுத்துவிட்டு வேறு கட்சிப் பணிகள் ஆற்றலாம் என்றும் ஞாநி எழுத, அதற்குப் பின்னால் இருப்பது சாதீயமே என்று பற்றவைக்கப்பட்ட திரி இன்னும் எண்ணெய் வற்றாமல் எரிந்துகொண்டிருப்பதும், சோவை, சுஜாதாவை விமர்சிக்கும்போதெல்லாம் அவர்களுக்கு ஆதரவளிக்க ஓடோடி வருபவர்கள் இப்போது ஞாநிக்கும் அதே அடிப்படையிலோ அல்லது கலைஞர் எதிர்ப்பு அடிப்படையிலோ பாதுகாப்புக்கவச எழுத்துக்களைப் பதித்து வருவதும் நிகழ்நாட்களின் முக்கியமாக்கப்பட்ட விசயங்கள்.

இணையத்தின் சிறப்பான கட்டற்ற கருத்து சுதந்திரம் ஞாநியின் சட்டைக்குள் பூணூல் நெளிவதாகக் கண்டுபிடித்திருக்கிறது. ஒரு வளர்ந்துவரும், செறிவான படைப்புகளை வழங்கும் வல்லமை வாய்க்கக்கூடியவர் என்று நான் நம்பும் ஒரு நண்பர்கூட ஞாநி என்று எழுதும்போது "அரைவேக்காட்டு ஞாநி" என்றே அடைமொழியிட்டு எழுதுகிறார் இப்போது.
அடுத்தவர்களுக்கு இப்படியெல்லாம் தெரியும் ஞாநி எனக்கு எப்படித் தெரிகிறார் என்று யோசித்துப் பார்த்தேன். அதில் தெறித்த குறிப்புகளாய் இவ்விடுகை.

விசாலமான வீதிகள், மழைவந்தால் கிளம்பி மணம்தூக்கும் மண்வாசனை, தெருவில் நடந்தாலும் தனியாய் இருக்கமுடிந்த குறைந்தபட்ச இரைச்சலற்ற வாழ்க்கை என்றிருந்த
கோவையிலிருந்து சென்னைக்குள் வந்துசேர்ந்தபோது தெருக்களில் எப்போதும் கசகசத்த கூட்டமும், மரங்களைப் பார்த்தாலும் காற்றைப் பார்க்கமுடியாத நெருக்கமும் ஒரு
விருப்பமில்லாத புறச்சூழலை ஏற்படுத்தின. ஆனால் அகச்சூழலுக்குள் என்னை மெல்ல வேறு பரிமாணத்திற்கு வார்த்த பெருமை சென்னைக்கே உண்டு.

முதன்முதலாய்ச் சேர்ந்துபோன ஒரு பெரிய புத்தகக்கடையில் நான் வழக்கம்போலவே கி.வா.ஜகந்நாதனை, கிருபானந்தவாரியாரை, வள்ளளாரை, இன்னும் ஈரமான மொழியில் முளைத்த சில கவிதை நூல்களை அள்ளியெடுத்துக்கொண்டு நிமிர்ந்தபோது அவற்றிற்கான பணம் செலுத்திவிட்டு அவன் வெளியில் நின்றிருந்தான். "நீ எதுவும் வாங்கவில்லையா?"

"வாங்குவேன், ஆனால் அவை இங்கு கிடைக்காது. அவற்றை நான் வழக்கமாய் வாங்குமொரு இடத்திற்குப் போகிறேன் வருகிறாயா?"

அப்போது சென்னையின் எல்லாத்தெருக்களும் எனக்கு ஒரே தெருவாகவே தெரிந்தன. எங்காவது ஒரு இடத்தில் தொலைந்துபோனால் திரும்பிவரத்தெரியாத புது ஊரில் எங்கோ
வளைந்து வளைந்து ஒரு சாலையில் வாகனம் சென்று இறுதியில் ஒரு பிளாஸ்டிக் கவரில் சில புத்தகங்களோடு திரும்ப வந்தான். துருவிப் பார்த்தால் உள்ளே "தீம்தரிகிட", "தலித்
முரசு", "கவிதாசரண்".

"என்ன இதெல்லாம்? நான் இதுவரை தெரிந்துகொள்ளவில்லையே?"

"அதனாலென்ன? இப்போது ஆர்வமிருந்தால் தெரிந்துகொள்ளேன். இவையெல்லாம் உனக்கு சமூகத்தின் இன்னொரு பக்கத்தைச் சொல்லும்"

சரி நேரமிருக்கும்போது படித்துப் பார்க்கவேண்டும் என்ற நினைத்துக்கொண்டேன். வாசிப்பது என்பது இருவருக்குமான பொது ரசனை என்றாலும் புத்தகங்கள் பொதுவானவையாக
இல்லாதிருந்ததால் அப்போது தனித்தனி அலமாரிகள்.

சிலநாட்கள் சென்றிருக்கும். பணியிடத்திலிருந்து ஒரு பயணம். தவிர்க்கமுடியாததாய் அலுவலகத்திலிருந்து எல்லோருடனும் போயாகிவிட்டது.

"இந்தப் பள்ளிக்கு எதற்கு வந்தோம்? என்ன விசேசம் இங்கு?"

"பெரியவர் வருகிறார். அவரைப் பார்க்கத்தான் இத்தனை கூட்டம். நாமும் அதற்கே வந்திருக்கிறோம்."

ஓ அந்தச் சாமியாரா? சாமியை விட்டு விலகியிருக்காத நாட்கள்தான் அவை. ஆனாலும் சாமியார்களைவிட்டு வெகுதூரத்தில். காரணம் சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படித்தபோதே ஒரு சாமியாரை வழியெல்லாம் பூத்தூவி அழைத்துவந்து பாதபூசை செய்தார்கள். உச்சிகுளிரிந்த நேரத்தில் "இந்தப்பள்ளியின் சிறந்த ஏழை மாணவர்கள் இருவருக்கு என் கல்லூரியில் இலவசமாகக் கல்வி தருவேன். வருடக் கடைசியில் அனுப்பி வையுங்கள் என்று சொல்லிவிட்டுப் போனார் சாமியார்". அவர் பேச்சை நம்பிக் கல்லூரிக்கு மாணவர்களை அழைத்துப்போய் "சாமி அப்படித்தான் சொல்லீட்டு வருவார், ஆனா அதையெல்லாம் அப்பவே மறந்துருவார். இந்தளவு நன்கொடையோடு வாருங்கள், சேர்த்துக்கொள்ளலாம்" என்ற பதிலைப் பெற்றுக்கொண்டு திரும்ப வந்த தலைமையாசிரியர் சொல்லியதே சாமியார்கள் மீதான கொஞ்சநஞ்ச மரியாதைகளையும் காற்றில் பறக்கவைத்திருந்தது. சில யோக வகுப்புகளை விரும்பிப் படிக்கப்போனாலும் குருஜிக்களுக்குத் தலை தரைதொட வணங்கி நிற்கும் பணிவும் வந்து தொலைக்கவில்லை.

இப்போது முதன்முதலாய் ஒரு பெரிய பீடாதிபதி வரும் இடத்தில் வந்து மாட்டியாகிவிட்டது. அத்தனை மாணவர்களும் எழுந்துநின்று பஜனை பாட, முக்காடிட்டு அவர்
வந்துகொண்டிருந்தார்.

"பெரியவர்னு அவரத்தான சொல்லுவாங்க. நீங்க இவரையா பெரியவர் வரார்னு சொன்னீங்க?"

"இவரும் பெரியவர்தான். சின்னப் பெரியவர்".

பூசைகள் நடந்தன. பொன்னாடைகள் குவிந்தன. பிரசாதம் வாங்கத் தவறினால் வாழ்வில் எல்லாம் தவறிவிடும் என்கிற பதைப்பில் வரிசையாய் மனிதர்கள். வரிசைக்குள் ஒருத்தியாய்
நானும் நின்றேன் அல்லது நிற்கச்சொன்னபோது மறுப்பேதும் சொல்லாமல் நின்றுகொண்டேன். ஒவ்வொருவராய் ஊன்றிக் கவனித்துக் கண்கள் மூடி ஏதோ உச்சரித்துச் சாமியார் பிரசாதங்கள் கொடுத்துக்கொண்டிருந்தார். யாருக்கு எப்படிக் கொடுத்தார்? கவனிக்கவில்லை. என் முறை வந்தபோது பிரசாதமாய் ஒரு ஆப்பிள் கைகளுக்கு வந்தது. அது வந்த விதம்தான் முக்கியமானது. சுமார் 50, 60 செமீ உயரத்துக்குத் தூக்கி அவரின் கைகள் அதற்கும் கீழே வந்தால் இங்கிருந்து ஏதோ ஒன்று போய் ஒட்டிக்கொண்டு அவரைக்
கொன்றுவிடுவது போன்ற பாவனையில் உயரத்திலிருந்து என் கைகளில் எறியப்பட்டது அப்பிரசாதம். ஒரு குறிப்பிட்ட மதம்சார்ந்த பெரிய மடாதிபதி என்று மக்களால் கருதப்படும் ஒரு துறவியை முதன்முதலாக நேரில் பார்த்தபோதே "மனிதரில் ஒருவரிடம் இப்படித் தீண்டாமை பார்த்தும், தீண்டினால் தனக்கு ஏதோ ஆகிவிடுவது போன்ற பயத்திலும் உள்ள ஒருவர் எப்படித் துறவியாவார்? கேவலம் ஒரு பயத்தைத் துறக்க முடியாத நபர் முற்றுந்துறந்த துறவியாதல் சாத்தியமா?" என்ற கேள்விகள்தான் தோன்றினவேயொழியக் கைகளில் எறியப்பட்ட ஆப்பிள் வாய்க்குப் போகாமல் கைகளிலேயே கனத்தபடி இருந்தது.

அன்றைய நாள் நிகழ்வுகளின் பகிர்வாய் நான் அவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது இச்சம்பவமே முக்கியமாய் இருந்தது. என் சோர்வைப் புரிந்துகொண்ட அவன் சொன்னது
இதுதான். "ஆண்பெண் சமத்துவம் என்றும், பாரதி வலியுறுத்திய பெண்ணுரிமை என்றும் வாசிக்கிற, பேசுகிற நீ என்றேனும் அடிமைத்தனத்தின் வேர்கள் முகிழ்க்கும் இடங்களை, அவை வறண்டுவிடாமல் நீருற்றப்படும் இடங்களை வாசித்தோ, பார்த்தோ அறிந்திருக்கிறாயா? அந்தச் சாமியாருக்கு உன்னிடம் தீண்டாமை பாவிக்கக் காரணம் நீ பெண்ணாயிருப்பதுதான். இது நம் மதத்தில் பெண் என்பதோடு முடிந்துவிடுகிற தீண்டாமையுமல்ல. சாதிகளின் பெயரால் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே எல்லாவற்றிற்கும் உகந்தவராய், மற்றவர்கள் கடவுள் ஆலயங்களுக்குப் போனாலும் அவர்களிடமே கையேந்தி நிற்பவராய் இருப்பதன் சூட்சுமங்கள், வரலாறுகள் பற்றி யோசித்திருக்கிறாயா? சாமியார் மேல் சலிப்புற்று இருக்கும் இந்நாள் நீ இவைகளைப் படிக்க ஆரம்பிக்கிற நாளாக இருக்கட்டுமே" .

அவன் அலமாரிக்குள்ளிருந்து "தீம்தரிகிட" வை எடுத்துக்கொண்டு அமர்ந்தேன். "சங்கராச்சாரி" என்று தலைப்பிலே நின்ற சொல்லே ஆச்சரியமளித்தது. எழுதியிருந்தவர் ஞாநி. அப்படித்தான் அவர் எனக்கு அறிமுகமானார். பிறகு சிலகாலம் நான் தொடர்ந்து வாசித்த அவரின் இதழோ, எழுத்துக்களோ சாதீயச் சிந்தனைகளை, மூடத்தனங்களை மூர்க்கத்தனமாக எதிர்க்கும் துணிச்சலான ஆயுதங்களாகவே இருந்தன. இதில் முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஒரு நேர்மையான சமூக அக்கறையுள்ள எழுத்தாளன் சாதி ஆதிக்கங்களை மட்டும் எதிர்ப்பவனல்ல. அதன் வடிவங்கள் எவ்வகையிலிருப்பினும் எதிர்ப்பவன். அப்படிப் பார்த்தாலும் ஞாநி அதற்குள் பொருந்தியே வருவார். ஏனென்றால் ஆண் பெண் சமத்துவ நிலைகளை வெறுமனே எழுத்தில் வடித்துக்கொட்டிவிட்டுத் தான் எழுத்துக்குத் தன் வாழ்வைத் தியாகம் செய்திருக்கக் குடும்பத்தைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட தியாகச்செம்மல் என் மனைவியே என்று சான்றிதழ்கள் தரும் வாய்ச்சொல் வீர எழுத்தாளர்களில் ஒருவராய் இன்றித் தான் பங்குபெற்ற பத்திரிக்கையில் தன் மனைவியையும் பங்குபெற வைத்தவர். பெண்கள் பிரச்சினைகள் குறித்து ஞாநியின் மனைவி எழுதிவந்த தொடரும், ஞாநியும், அவர் மனைவியும் மேற்கொண்ட வாழ்க்கை முறையும் அவர்களின் எழுத்துக்கும்
வாழ்க்கைக்குமான ஒற்றுமைக்குச் சாட்சி. பெரியாரைத் தொலைக்காட்சிக்குக் கொண்டுவந்தது, பாய்ஸ் படத்திற்காக சுஜாதாவைக் கடுமையாக விமர்சித்தது என்று மேலோட்டமாகப் பார்த்தாலே அவருக்குச் சாதீயப் பற்று இருக்கமுடியாது என்பதற்கான உதாரணங்களைக் காண முடியும்.

ஞாநியின்மீது இவ்வளவு விமர்சனங்களை அள்ளியிறைக்கிற இணையத்திலேயே ஞாநி எழுதியிருந்த கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. கர்நாடக இசைப்பாடகி எம் எஸ்
சுப்புலட்சுமி இறந்தபோது எங்கெங்கும் அவருக்குப் புகழ்மாலைகளே இறைந்துகிடக்க முற்றிலுமொரு வேறு கோனத்தில் அவர்மீது விமர்சனப்பார்வையை வைத்திருந்தார் ஞாநி. எம் எஸ் சுப்புலட்சுமி தன் கலைத்திறமைக்காகப் பாராட்டப்படவேண்டியவரே என்றாலும் அவரின் இன்னொரு பக்கத்தையும் பார்க்கவேண்டும். ஒரு உயர்சாதி ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு அந்த ஆணின் வாழ்வுமுறையோடு முற்றிலுமாய் ஒன்றி அச்சாதியின் கலாசாரங்களையே தனதாகவும் வரித்துக்கொண்டு அவற்றின் சாயல்களைத் தன் கலைத்திறமைகளிலும் கரைத்தபடி அவ்வட்டத்திற்குள்ளேயே வாழந்துமுடித்தவர்தான் அவரும் என்கிற பொருளில் எழுதியிருந்தார் ஞாநி. அக்கட்டுரையை அப்போது இணையத்தில் யார்யாரெல்லாம் கிழித்துக்கொண்டிருந்தார்களோ அவர்களின் மற்றநிலைப்பாடுகள், கருத்துக்கள் இவற்றையும் கணக்கிலெடுத்துப் பார்த்தபோதும் ஞாநி எந்தெந்த இடங்களைவிட்டு எவ்வளவுதூரத்தில் விலகி நிற்கிறார் என்றும் புரிந்துகொள்ள முடிந்தது.


அப்படியெல்லாம் சமூகத்தின் போக்கை எதிர்த்து நின்ற ஞாநிதான் இப்போது கலைஞருக்கு வயதாகிவிட்டது, அவர் முதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெறலாம் என்று எழுதியதற்காகச்
சாதீயத்தின் பேரால் விமர்சிக்கப்படுகிறார். இந்த விமர்சனங்களும், கண்டனக்கூட்டங்களும், தாக்குதல்களும் எங்களுக்குச் சொல்வது நிறைய. புனிதத்தன்மைகளாகப் போற்றி
வளர்க்கப்படும் மூடக்கருத்தாக்கங்களை எதிர்க்கவேண்டும் என்று குரல்கொடுப்பவர்களுக்கும்கூட சில புனிதத்தன்மைகள் வேறு வடிவங்களில் இருக்கின்றன. இப்போது அது அவர்களுக்குக் கலைஞர் வடிவத்திலே அமைந்துவிட்டது. அதுதான் ஞாநிமீது அடிப்படையற்ற தாக்குதல்களைச் செய்யவும் காரணமாகிறது. பகுத்தறிவு என்பது ஒன்றின்
புனிதத்தன்மையை உடைத்துவிட்டு இன்னொன்றைப் புனிதமாகவோ, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாகவோ பிடித்துக்கொள்வதில் இருக்கமுடியுமா? போகிறபோக்கைப் பார்த்தால்
அதுதான் நிகழும் போலிருக்கிறது.

எத்தனையோ பேருக்கு எத்தனையோ காரணங்களுக்காகக் கலைஞர் பிடித்திருப்பது மாதிரி
எனக்குச் சில காரணங்களுக்கு அவர் மீது மரியாதையும், சில காரியங்களுக்கு விமர்சனங்களும் சேர்ந்தே உண்டு. இந்நிலையில் அவரின் மூப்பு மற்றும் பதவி விலகல் பற்றி ஞாநி பேசியிருப்பது இவ்வளவு தாக்குதல்களுக்குரிய பிழையென்றும் தோன்றவில்லை. பொதுவாகவே நம் அரசியல் நடைமுறைகளில் இன்னும் மாற்றங்கள் வேண்டியே இருக்கின்றன. ஒரு கட்சியைச் சேர்ந்த ஒரு நபர் குறிப்பிட்ட முறைகளுக்கு மேல் மீண்டும் மீண்டும் ஒரு பதவியை வகிப்பதேகூட மாற்றப்படலாம். அதே கட்சி வந்தாலும்கூட அடுத்தமட்டத் தலைவர்களைப் பதவியில் நியமித்து, அவர்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்து புதிய மனிதர், புதிய செயல்முறைகள் என்று தொடர் மாற்றங்களைச் செய்யலாம். நல்ல தலைவர்கள் அடுத்த தலைவர்களை உருவாக்குவதிலும் வெற்றி பெறுவாரேயன்றித் தன் தலைமையிடம் எப்போதும் தவறிப்போகாமலே இருக்கவும், அது அடுத்துத் தன் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானதாக ஆகவேண்டும் என்று நினைத்தும் இருப்பதில்லை. ஆனால் ஒரு கட்சிக்கு அடுத்த தலைமை யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தப்படுவதுகூட ஒரு கட்சியாலோ அதன் தொண்டர்களாலோ செரித்துக்கொள்ளப்படாமல்போய், நடத்தியவர்களை எதிர்ப்பதாய் நினைத்து அது அப்பாவி மக்கள்மீதான வன்முறையாகக் கட்டவிழ்க்கப்படும் அரசியல் சூழல்கள் நம்முடையவை என்பது வருங்காலத் தலைமுறைக்கு எவ்வித நம்பிக்கைகளை அவர்களின் மனதில் விதைக்கும் எனத் தெரியவில்லை.

ஒரு கட்டுரைக்காகச் சாதி மறுப்பாளர் ஒருவர் அவரின் சாதியின் பெயரால் எள்ளப்படுவதும், அதைச் செய்பவர்கள் அதே சாதிமறுப்புக்கொள்கை கொண்டவர்கள் என்பதும் ஒரு ஆரோக்கியமான அறிவுச்சூழலை இங்கு காட்டவுமில்லை. தன் சொந்தசாதி தாழ்ந்துவிடக்கூடாதென்று சாதியரிப்பிலே ஒரு இடத்தில் வலிந்து ஆதரவளித்து எழுதுவது எவ்வளவு அருவெருப்பானதோ அதற்குச் சற்றும் குறைச்சலில்லாததாகவே தோன்றுகிறது பலகாரணங்களுக்காகத் தன் சொந்தசாதியையே எதிர்த்து நின்ற ஒருவருக்கும் அச்சாதி முத்திரையைச் சட்டென்று குத்திவிடுவதும்.

ஒரு தையல்காரர் எல்லோருக்கும் ஒரே அளவுகளில் துணி தைப்பதில்லை. அவரவருக்கான அளவுகளைச் சிரமேற்கொண்டு எடுத்துக்கொண்டும் அதிலிருந்து மாறிவிடாமலும்தான் தன் பணியாற்றுகிறார். ஆனால் நம் அறிவுஜீவிகள் சில பொதுக்கணக்குகளை வைத்திருக்கிறார்கள். அந்தக்கணக்குகளை அப்படியே எல்லோருக்கும் பொருத்தி ஒரு வடிவம் தயாரிக்கிறார்கள். அதற்குள் பொருந்திவராதவன் தங்களுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கே எதிரி என்றும் சொல்லிவிடுகிறார்கள். அந்தப் பொதுக்கணக்குகளில் தனக்கும், தன்னால் தாக்கப்படுபவனுக்குமுள்ள தனிப்பட்ட கசப்புகளோ, காழ்ப்புகளோகூட அடக்கம். சிலநேரங்களில் அறிவுஜீவிகளை வாசித்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருப்பதைவிட ஒரு தையல்காரரை நின்று கவனித்துக்கொண்டிருக்கலாம். இவர்களைவிட அவரிடம் நிறையத் தொழில்நேர்மை உண்டு.

Sunday, October 21, 2007

எழுதிக்கிழிப்பதோடு என் வேலை முடிவதில்லை

சில வாரயிறுதிகள் வாசிப்புக்கு உகந்தவையாய் அமைந்துவிடுவது மகிழ்ச்சியானது. அப்படி வாசிப்பவைகளிலும் யோசிக்கவைப்பவையாய், தொடர்ந்து அதன் அர்த்தங்களை உள்ளளவிலேனும் புரிந்துகொள்ளவும் வைப்பவையாய்க் கிடைப்பவை சிலவே.

அமைதியாய், ஆழமாய்த் தன் பாணியில், மொழியில் பேசிக்கொண்டிருக்கிறார் ஆதவன் தீட்சண்யா. இப்படிப்பட்டவர்களுக்கு எழுத்து ஒரு கிரீடம் இல்லை, இன்னொருவனைக் கிழிப்பதற்காகவே வைத்திருக்கும் ஆயுதமும் இல்லை. தான் பிறந்து, வாழும் சமூகத்துடனான இடைவிடாத போராட்டமே அது. ஒரு தனிமனிதனை எதிர்ப்பதற்கு அவனின் கடந்தகாலங்கள் எதையுமே பரிசீலிக்காமல் சாதியைச் சொல்லித் திட்டுவதும், சமூகத்தின் சாதி அடுக்குமுறைகளையும், அதன் நாற்றங்களையும் பேசினாலே அது தன் குறிப்பிட்ட சாதியை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் கூட்டம்தான் என்று சுயசாதி காக்கப் போராடுவதும் ஒரேமாதிரி இயல்பாக நடந்துவிடும் சூழல்களில் ஆதவன் தீட்சண்யா போன்றவர்களின் கருத்து வெளிப்பாடுகளைப் புரிந்துகொள்ள முடிகிற பொறுமையுடையவர்கள் வாசிக்கலாம்.

அவரின் சமீபத்திய மிக நீளமான செவ்வி அதுவென்றாலும் சிலவற்றை மட்டும் இங்கு பதிப்பிக்கிறேன். "கீற்று"க்கு நன்றி.

பெண்ணடிமைத்தனம், சாதி அடக்குமுறைகளைத் தக்க வைப்பதில் நமது சமூக, குடும்ப அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?

நம் சமூக அமைப்பில் நாம் என்னவாக வளர்க்கப்படுகிறோம்? ‘இந்தியன் என்ற உணர்வோடு’ என்றால் அது மிகவும் செயற்கையானது. வேறு ஏதாவது நாட்டுக்குச் சென்றால் ஒருவேளை இந்தியன் என்ற உணர்வு நமக்கு வரலாம். அதுவும் தங்கியுள்ள அந்த நாட்டை சேர்ந்தவர் அல்ல என்பதால் இந்தியன் என்று சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது தேவையை ஒட்டி உருவானது.

ஆனால் பிறப்பிலிருந்தே குறிப்பிட்ட சாதியின் நம்பிக்கைகளுக்கும், வளமைக்கும் ஏற்றவாறு தான் வளர்க்கப்படுகிறோம். இதிலும் பெண் கூடுதல் கவனத்தோடு வளர்க்கப்படுகிறாள். ஒவ்வொரு கணமும் சாதியாக வளர்க்கப்பட்டு சாதியாகத் தான் வாழ்கிறோம். முதலில் நான் இந்தியன் பிறகு தமிழன் என்பதெல்லாம் மிகமிக அயோக்கியத்தனமான வார்த்தைகள்.

நான் சைவம், நான் அசைவம் என்று உணவில் வேறுபடுவதில் தொடங்கி உடை, உணர்வுகள் அனைத்தையும் சாதிதான் தீர்மானிக்கிறது. நல்ல குடும்பம் என்கிற நம் வரையறையே அப்படித்தானே இருக்கிறது. ‘அப்பா, அம்மாவிற்கு பிடித்த பையனாக, அல்லது அவர்கள் சொல்கிறவனை திருமணம் செய்துகொண்டு குனிந்த தலை நிமிராத பெண்கள் இருந்தால் அது நல்ல குடும்பம். ஆச்சாரம் கெடாத குடும்பம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.’ அதாவது பல்கலைக்கழகம் எப்படி ஒரு மோசமான தயாரிப்பை வெளியே அனுப்புகிறதோ அப்படித்தான் குடும்பமும் அனுப்புகிறது.

சாதியை வலுவாக, மிக நுட்பமாக பாதுகாக்கக்கூடிய இடம்தான் குடும்பம். என் பையன் அமெரிக்கா போனாலும் இங்க வந்து நான் பார்க்கிற பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவான் என்று உறுதியாக சொல்ல முடிவது சாதியால் தானே? உண்பது, வாழ்வது, உணர்வது தொடங்கி நான் இன்று உண்டதை நாளை ஒருவன் அள்ளுவான் என்பது வரைக்கும் சாதிதானே தீர்மானிக்கிறது? ‘இறந்தபிறகு எரிப்பதா, புதைப்பதா? எந்த சாதிக்காரன் குழிவெட்டுவது?’ என்பதையும் அதே சாதிதான் தீர்மானிக்கிறது.

‘நான் ஒடுக்குகிற சாதியில் பிறந்திருக்கிறேன், நான் பெண்ணை ஒடுக்குகிற ஆணாக இருக்கிறேன். இதுகுறித்து நான் குற்றவுணர்ச்சி கொள்கிறேன்’ என்பது மாதிரியான எந்த எழுத்தும் இதுவரை வரவில்லை. சுஜாதா ‘சிவாஜி’ திரைப்படத்தில், ‘அங்கவை, சங்கவை இருவரும் கறுப்பு’ என்று எழுதுகிறார். அவர் பார்த்த பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள். எனவே கறுப்பாக இருப்பவர்களை அவரால் எளிதாக அவமானப்படுத்த முடிகிறது.

இதைச் சொல்கிற அதிகாரத்தை சுஜாதாவிற்கு அவரது ஜாதிதானே தந்தது? எங்கள் ஜாதிப்பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள் என்று அவர் சொன்னால் அதுவும் ஜாதித்திமிர் தானே? அவர் பார்வையில் பெண்கள் வெறும் தோல் சம்பந்தப்பட்டவர்கள் என்றுதானே அர்த்தம்?

திப்புசுல்தான் மலபார் கவர்னருக்கு எழுதிய கடிதம் ஒன்றை சமீபத்தில் வாசித்தேன். “உங்கள் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் மேலாடை அணியாமல் இருக்கிறார்கள் என்று படித்தேன். அதற்குக் காரணம் வறுமையா, வேறு ஏதாவதா? வறுமை எனில் அதைக் களைய வேண்டியது உங்கள் பொறுப்பு. மத நம்பிக்கை தான் காரணம் எனில் அந்த நம்பிக்கையின் வேர் பாதிக்காமல் பக்குவமாக எடுத்துச் சொல்லி ஆடை அணிய வைக்க வேண்டும்.”

மேலாடை அணியும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது நாடார், பறையர் போன்ற தாழ்த்தப்பட்ட பெண்களுக்குத் தான். ஒருவேளை தங்கள் மதப்பெண்களைப் போல இவர்களும் குப்பாயம் அணிய வேண்டும் என்றுகூட திப்புசுல்தான் விரும்பியிருக்கலாம். அது எல்லாமே இரண்டாம்பட்சம். ஆனால் இங்குள்ளவர்கள் வேறு ஒருவன் சுட்டிக்காட்டியும் திருந்தாதவர்களாய்த் தானே இருந்திருக்கிறார்கள் என்பதே முக்கியம்.

நூறு வருடங்களுக்கு முன்பு நாடார் பெண்ணுக்கு மேலாடை அணியும் உரிமை தேவைப்பட்டது. இன்றைக்கு அவளுக்கு வேறு உரிமைகள் தேவைப்படுகின்றன. கேரளாவில் ஈ.கே.நாயனார் முதல்வராயிருந்தபோது, நிதியை கிராமங்களுக்கு ஒதுக்கி அந்தந்த கிராம மக்களே தங்கள் தேவைகளை முடிவுசெய்து நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. மாநில அளவிலான இந்த திட்டத்துக்கு வழிகாட்டியவர் தோழர் இ.எம்.எஸ். ஒரு கிராமத்தில் ஆண்கள் அனைவரும் கூடிப்பேசி தெருவிளக்குகள் அமைத்தார்கள். அன்றிரவே அந்தக் கிராமத்து பெண்கள் அந்த விளக்குகளை உடைத்தெறிந்தார்கள்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரவில் வெளிச்சம் அதிகம் இருந்தால் பெண்களால் தங்களின் இயற்கைத் தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியாதென்பதால்தான் தெருவிளக்குகளை உடைத்துவிட்டதாக தெரிவித்தார்கள். இதைத் தெரிந்து கொண்ட இ.எம்.எஸ். அந்தக் கிராம சபைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘உங்கள் கிராமத்தில் முதலில் கட்டப்பட வேண்டியது கழிப்பிடம்தான். சபையில் ஆண்கள் மட்டுமே எல்லா முடிவுகளையும் எடுப்பதால் நம்மால் பெண்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. நாம் ஆண்களின் சபையாக சமூகத்தை வைத்திருக்கிறோம். எனவே அடுத்தக் கூட்டத்தில் இருந்து பெண்களையும் கலந்து பேசுங்கள். அவளால் தான் அவளது தேவைகளைப் பேச முடியும்’ என்று எழுதினார்.

குடும்பத்தை எடுத்துக்கொண்டால் அங்கும் கணவன் தான் முடிவெடுக்கிறான். பெண்ணுக்குப் பங்கில்லாத அந்த முடிவை குடும்பத்தின் முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தப் பெண்களின் நிலையைப்போல் தான் தலித்துகளின் நிலையும். இந்தியச் சமூகத்தில் இதுவரை முடிவெடுக்கும் இடத்தில் தலித்துகள் இருந்ததில்லை. அதிகாரத்திலும் அவர்கள் இல்லை. அப்படியானால் ஆதிக்க சக்திகள் எடுக்கும் முடிவுகள் தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதாகத் தானே இருக்கும்? நம் சமூகம் சாதியால் மட்டுமே பின்னப்பட்டிருக்கிறது என்பதைத் தான் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.


எழுத்தாளர்களில் சிலர் எழுதுவதையே பெரிய புரட்சி என்றும், ‘நான் உங்களுக்காக எழுதுகிறேன், உங்களுக்காக நான் என்னையே தியாகம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் என்னைப்பற்றி இந்த சமூகத்திற்கு எந்த அக்கறையும் இல்லை. குடிப்பதற்குக் கூட காசில்லை. வேறுநாட்டில் எழுத்தாளர்களை எப்படியெல்லாம் மதிக்கிறார்கள். தமிழ்நாட்டில் தான் இந்த நிலைமை’ என்றும் தொடர்ந்து புலம்பி வருகிறார்களே?

புலம்புபவர்கள் தங்கள் எழுத்தையே இலக்கியச் சேவையாக கருதினால் நான் ஒன்றும் செய்ய முடியாது. இந்த சமூகத்தில் எந்த ஒரு விஷயம் என்னை சுலபமாக கடந்து செல்ல அனுமதிக்கவில்லையோ அதைத்தான் அந்த இடத்தில் நின்று எதிர்கொண்டு ஒரு எழுத்தாளனாக நான் எழுதுகிறேன்.

தெருவில் ஒரு சண்டை நடக்கிறது. அந்தப் பக்கமாக செல்லும் ஒருவர் அதை விலக்கி விட்டு விட்டு செல்கிறார். அதை அவர் பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பதில்லை. அதே வேலையை ஒரு எழுத்தாளன் செய்தால் அதை அவன் எழுத வேறு செய்கிறான். அதற்காக எழுத்தாளனை கொண்டாட வேண்டும் என்றும் அவன் நினைத்தால் அது அவனுடைய தவறு தான். தங்களுக்கு ஏற்படும் மனக்கிளர்ச்சியை, அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்காகத் தான் எல்லோரும் எழுதுகிறார்கள். அப்படி எழுதுவதை எழுத்தாளன் தியாகம் என்று நினைத்தால், அதைப் படிக்கிற நானும் தியாகி தான் என்று வாசகர்களும் சொல்லலாமே. எழுதுவது என்பது தியாகம் சம்பந்தப்பட்ட விஷயமே கிடையாது.

சமூகத்தோடு தொடர்ந்து இணைவதும், முரண்படுவதுமாகத் தான் நாம் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதை நாம் எழுத்து வழியாகத் தெரிவிக்கிறோம். மற்றவர்கள் ஏதோ ஒரு மீடியம் வழியாகத் தெரிவிக்கிறார்கள். தன்னைப் பற்றிய பெருமையிலோ, கழிவிரக்கத்திலோ தம்பட்டம் அடிக்கும் செயல்தான் இது.

ஒரு புத்தகத்தையோ, நாடகத்தையோ படிக்கும் அல்லது பார்க்கும் வாசகனோ, நேயரோ அதனால் பாதிப்பு அடைந்தால் அவனது மனதில் சிறு கீறலோ, அசைவோ ஏற்பட்டால் அவன் வேண்டுமானால் எழுதியவனைப் பாராட்டலாம். அதை விடுத்து தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதற்காக, ஷீல்டு வாங்கி ஜோல்னாப் பையில் வைத்துக்கொண்டு அலைவது தேவையற்ற விஷயம். சமூக அக்கறையுள்ள படைப்பாளி இந்த சமூகத்தோடு உரையாடுவதற்காக எழுதுகிறான். அதைப் படித்துவிட்டுத்தான் உலகம் விடிகிறது என்று சொல்வதோ, தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அபத்தமான காரியம்.

வேதம் படிப்பதற்கு குறிப்பிட்ட சாதியில் பிறக்கவேண்டும் என்பதைப் போலவே இலக்கியம் படைப்பதற்கு தனி ஆளுமை வேண்டும், அறிவு வேண்டும், தேஜஸ் வேண்டும், இன்னும் என்னென்னமோ வேண்டும் என்று கூறுகிறார்கள். இதன்மூலம் எழுத்தாளர்களைப் புனிதப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. இதனால் எழுத்தாளனை இந்த சமூகம் கொண்டாடுவதற்குப் பதிலாக தன் எழுத்தின்மீது அதீத நம்பிக்கை கொண்டு எழுத்தாளன் தன்னைத் தானே கொண்டாடிக் கொண்டிருக்கிறான்.

கலைஞனைக் கொண்டாடாத சமூகம் உருப்படாது என்று சொன்னால் உழவனையோ, தொழிலாளியையோ கொண்டாடாத சமூகம் மட்டும் உருப்பட்டு விடுமா? நீ எழுதும் கவிதைகளைத் தூக்கி வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கும் எந்த அவசியமும் இந்த சமூகத்துக்குக் கிடையாது. இந்த சமூகத்தைப் பதிவு செய்கிறவனாக, உன் கருத்தைத் தெரிவிப்பவனாக இருக்கும் பட்சத்தில் உனக்கான அளவில் இந்த சமூகம் உன்னை கொண்டாடத் தான் செய்கிறது. உனக்கு குடிப்பதற்குக் காசில்லை என்பதெல்லாம் இந்த சமூகத்தின் பிரச்சனையும் கிடையாது.

இவர்களைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.


தலித் இலக்கியத்தை தலித்கள் தான் எழுத வேண்டும் என்ற கருத்தும், அதற்கு எதிராக ‘அவர்கள் மேல் அக்கறை கொண்ட யார் வேண்டுமானாலும் எழுதலாம்’ என்ற கருத்தும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதில் உங்களது நிலைப்பாடு என்ன?

தீண்டாமையின் கொடுமையை அனுபவிக்காதவர்களால் தீண்டாமை குறித்து எழுத முடியாது. ஒரு பெண்ணின் துயரங்களை எப்படி ஆணால் உணர முடியாதோ, அதேபோல் ஒரு தீண்டத்தகாதவனின் பிரச்சனைகளை தீண்டத்தக்க சாதியை சேர்ந்தவனால் ஒருபோதும் உணர முடியாது. சமீபத்தில் ஒரு பத்திரிகையில் கோபிச்செட்டிபாளையத்தின் முன்னாள் நகராட்சித் தலைவர் லட்சுமண ஐயரின் பேட்டி வெளியானது. இந்தியாவில் கையால் மலம் அள்ளும் முறையை முதன்முதலில் கோபி நகராட்சியில் ஒழித்தவர் இவர்தான்.

அந்த முறையை ஒழித்ததற்கான காரணம் குறித்து கேட்டபோது, சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றபோது அங்கே நாங்கள் கையால் மலம் அள்ள வேண்டியிருந்தது. அந்த ஒன்று போதாதா இதை ஒழிப்பதற்கு என்று குறிப்பிட்டிருந்தார். அப்படியானால் உன்னை அள்ள வைத்தால் தான், இந்த வேலை எவ்வளவு துயரமானது, அவமானகரமானது என்று புரிகிறது. அந்த அவமானங்களை சந்திக்காத ஒருவனால் அது குறித்து எப்படி எழுத முடியும். மற்றவர்கள் எழுதுவதை சாதி ஒழிப்பு எழுத்து, தலித் ஆதரவு எழுத்து என்றுதான் பார்க்க முடியும்.

வேடிக்கை பார்த்து எழுதுவது என்பது வேறு. அனுபவித்து எழுதுவது என்பது வேறு. அதாவது பாவனைக்கும் உண்மைக்குமான இடைவெளி அதில் இருக்கும்.

போராட்ட முடிவுகளைக் கூட ஆண்களே எடுப்பதாகப் பேசினீர்கள். சமூகம் சார்ந்த விஷயங்களில் பெண்களின் பங்கு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

அவர்கள் படிப்பு, வேலை என்று வெளியில் வரத் தொடங்கிவிட்டார்கள். சமூக நிகழ்வுகளில் அவர்கள் அதிகம் பங்கு பெறுவது இன்னும் நடைபெறவில்லை. 123 ஒப்பந்தம் மாதிரியான பிரச்சினை தொடர்பான கருத்தரங்குகளில் ஆண்கள் அதிகம் கலந்து கொள்கிறார்கள். அந்த ஆண் வீட்டுக்குப் போகும்போது இந்த ஒப்பந்தம் குறித்து என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே தெரியும் என்ற அகங்காரத்தில் செல்கிறான். அதனால் அவன் தன் மனைவியை இரண்டாம் பட்சமாகக் கருதுகிறான்.

ஆண்களின் தகவல் அறிவை நாம் அதிகரிப்பது அவனுடைய அதிகாரத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்து விடுகிறது. ஆண்களின் சபையாக சமூகத்தை மாற்றிக் கொண்டிருப்பதை அனுமதிக்கக் கூடாது. தலித்துகளுக்கு என்று கட்சி உருவாக்கப்பட்டு எங்களது ஓட்டுகளை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்ற நிலை வந்தபோது, மற்ற கட்சியினர் தலித் பிரச்சினைகளைப் பேச முன்வந்தார்கள். அதுபோல பெண்களுக்கென்று தனிக்கட்சி வரும்போது பிற கட்சிகளும் பெண்களின் பிரச்சனைகள் குறித்து பேச முன்வருவார்கள்.

ஒரு நாவலுக்கான விஷயத்தை ஒரு கவிதையாக எழுதுகிறீர்கள். மற்றவர்கள் கட்டுரையாக எழுதிக் கொண்டிருக்கும் உலகமயமாக்கல், சதாம் கொலை போன்ற சமகாலப் பிரச்சினைகளை, செய்திகளை நீங்கள் சிறுகதையாக எழுதுகிறீர்கள். ஒன்றை எழுத ஆரம்பிக்கும்போது, இது கதைக்கானது, இது கவிதைக்கானது என்பதை எப்படி தீர்மானிக்கிறீர்கள்?

இப்படித்தான் எழுதவேண்டும் என்று எதையும் திட்டமிட்டு எழுதுவதில்லை. நாம் பார்க்கிற, நமக்குள் தோன்றுகிற விஷயங்கள் ஒரு கட்டத்தில் எழுத்தாக வெளிவருகிறது. அது எந்த வடிவத்தில் வரவேண்டும் என்பதை அதுதான் தீர்மானிப்பதாக நான் நினைக்கிறேன். நான் எந்த மாதிரியான எழுத்தாளன், என்னுடைய பாடுபொருள் என்ன, கதைமாந்தர்கள் யார் என்று ஏற்கனவே ஒரு தீர்மானம் இருக்கிறது. அந்த நோக்கத்திற்கு இசைவாகத்தான் நமது மனம் இயங்கிக் கொண்டிருக்கும். முடிவற்ற அந்த இயக்கத்தின் ஒரு கட்டமாகத்தான் எழுதத் தொடங்குகிறோம்.

சமகால பிரச்சனைகளை கதைக்குள் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டீர்கள். சங்க இலக்கியத்தை வைத்துக்கொண்டு அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறைகள், இயற்கை, அரசு அமைப்பு, ஆண் பெண் உறவு என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். அவற்றைப் படிக்கும்போது, ‘இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த 2007ம் வருடத்தை பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவார்களே, இதை நாம் பதிவு செய்திருக்கிறோமா’ என்ற கேள்வி எனக்குள் வருகிறது.

வாழும் காலத்தை என்னவாக எதிர்கொண்டோம் என்ற கேள்வி மிக முக்கியமானது. சதாம் உசேன் கொல்லப்பட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கான பதிலை நான் நம் சந்ததியினருக்கு சொல்லிச் செல்ல வேண்டியிருக்கிறது. சதாம் உசேன் கொலை குறித்து இங்கு என்ன பதிவு இருக்கிறது? அஞ்சலிக் கவிதை, ‘வருந்துகிறோம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை போன்றவற்றை எழுதுவதில் எனக்கிருந்த அலுப்புதான் என்னை சதாம் உசேன் குறித்து சிறுகதை எழுதத் தூண்டியது.

அதேபோல் தான் உலகமயமாக்கலும். உலகமயமாக்கல் ஏதோ நேற்று தோன்றிய ஒரு விஷயமல்ல. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பதே உலகமயமாக்கல்தானே. தமிழ்நாட்டில் ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்படுவது முந்தைய உலகமயமாக்கலின் அடையாளம் தானே. உலகம் தனக்குள் பரிவர்த்தனைகளை நிகழ்த்திக் கொண்டு ஒரு சமூகமாய் இணங்கி வாழ கடந்த காலத்தில் செய்த இப்படியான முயற்சிகளுக்கு மாறானது இப்போது நாம் பேசுகிற உலகமயம்.

நான் வாழும் காலத்தில் இந்த உலகமயமாக்கலின் ஒரு புதிய வடிவத்தைப் பார்க்கிறேன். இரண்டாவது பத்தாண்டு சீர்த்திருத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அது சீர்திருத்தமா, சீரழிவா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அது சீர்திருத்தம் கிடையாது என்று எனக்குத் தெரிகிறது. மூன்றாம் உலகநாடுகளின் வளங்களை கொள்ளையடிக்க அந்தந்த நாட்டு அரசாங்கங்களையே உறிஞ்சுகுழல்களாகப் பயன்படுத்தும் இந்த ஏற்பாடு வெறும் அணா பைசா விசயம் அல்ல என்பது புரிகிறது. ஆனால் இந்தக் கொடுமையை தனிநபராக எதிர்க்கும் வல்லமை எனக்குக் கிடையாது. எனவே எனக்குத் தெரிந்த எழுத்தின் வழியாக என்னுடைய எதிர்ப்பை நான் பதிவு செய்யகிறேன்.

எழுத்தைத்தவிர இடதுசாரி இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள், மேடைப்பேச்சு என்று பல தளங்களில் இயங்கி வருகிறீர்கள். சாதியத்துக்கு எதிரான உங்களது செயல்பாட்டுக்கு எழுத்து மட்டுமே போதாது என்று கருதுகிறீர்களா?

தனது துயரங்களைப் புரிந்துகொள்கிற ஒரு சமூகச்சூழலை உருவாக்குவதும் ஒடுக்கப்பட்டவர் சார்பாக எழுதுகிறவர்களின் வேலையாகிறது. எனவே எழுதிக் கிழித்ததோடு என் வேலை முடிந்துவிட்டது என்று நான் தூங்கப் போய்விட முடியாது. என் எழுத்துக்களோடு மக்கள் சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளோடு ஊடாட்டம் கொள்ள வேண்டியிருக்கிறது. எழுத்து எப்படி தனிநபர் செயல்பாடோ அதைப்போன்றது தான் பேச்சும். பேச்சு என்பது அர்த்தமுள்ளதாய் இருக்க வேண்டியிருக்கிறது. எனவே சொற்பொழிவாக அல்லாமல் உரையாடலாகத் தான் அமைத்துக்கொள்கிறேன். சமூகத்தை மொன்னையாகப் பார்ப்பதிலிருந்து விலகுகிற, அதன்மீது கேள்விகளை எழுப்புகிற, பிரச்சனைகளை எப்படி அணுக வேண்டும் என்ற விமர்சனப்பார்வையை உருவாக்குவது தான் இந்த உரையாடலின் நோக்கம்.

Wednesday, October 17, 2007

மக்கள்குறைதீர்க்குமா இம்மன்றம்?



ஒரு சமூகத்தின் பிரச்சினைகள் என்பவை பலவகைப்பட்டவை. எல்லாப்பிரிவு மக்களுக்கும்
அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாவது, ஒரு நலமான வாழ்வுக்கு உரிய உரிமைகளை
எல்லோரும் சமத்துவமாக அடையவேண்டியது, அவற்றின் மூலமாக மானுடச் சிறப்பின்
மேன்மைகளை எட்டுவது எனச் சுருக்கமாக வகைப்படுத்தினால் உலகின் பல சமூகங்களின்
போராட்டங்களும் இவற்றின் அடிப்படையிலேயே அமையலாம். ஒவ்வொரு நாட்டு
அரசாங்கத்தின் கொள்கை, திட்ட, நடைமுறைகள் என்பவை தனக்குட்பட்ட சமூகத்தைத்
தன் நல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் வலிமையுடையதாக ஆக்குவதாகவே
இருக்கவேண்டும். காலணி ஆதிக்கத்திலிருந்து முயன்று விடுபட்ட இந்தியாவுக்குத் தன்
சொந்த உள்சமூகக் கட்டமைப்பு, விரிவாக்க வேலைகளைத் துரிதப்படுத்துவதில் 60
ஆண்டுகால சுதந்திரமான ஆட்சியில் இன்னும் தொடரும் தடைகள் உண்டு. வரலாற்றுக்
காரணிகளும், சாதீய அடக்குமுறைகளும் சிறிய, பெரிய அளவிலான போராட்டங்களை
அன்றாடம் வேண்டிநிற்பது ஒருபுறமென்றாலும் "அறியாமை" எனும் நோயே எந்தவொரு
முன்னேற்றத்தின் வடிவத்தையும் காணத்தடுக்கும் மிகப்பெரும் மறைப்பாக உள்ளது.

அறியாமை அகற்றுவதற்காய் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துவது
அரசாங்கத்தின் முயற்சிகளாய்த் தொடர்ந்த வண்ணம் உள்ளதென்றாலும் அப்படி ஏற்றப்பட்ட
அறிவின் ஒளி ஒரு தனிமனிதனைக் குறைந்தபட்சத் தன்னொழுங்கு உள்ள,
நேர்மையுடன்கூடிய ஒரு சமூகப் பிரதியாக உருவாக்குவதில் மகிழத்தக்கதொரு வெற்றியை
இன்னும் ஈட்டியிருக்கவில்லை. இந்தியாவுக்குச் சவாலாக உள்ள முக்கியமான
விடயங்களைப் பட்டியலிடச்சொன்னால் அதில் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம்வரை
ஊறிக்கிடக்கும் லஞ்சம் மேலெழும்பி நிற்கும். தருமத்தை, நீதிபோதனைகளை வழங்குவதில்
மாபெரும் இதிகாசங்களை, புராணங்களைக் கொண்டவர்கள் நாம் எனப் பீறிட்டுக் கிளம்பும்
பெருமை முழக்கங்களை ஒரு கையால் எழுதிக்கொண்டே, ஒரு காவல் நிலையத்தில்
உள்நுழைந்து நியாயம் பெறக்கூட அங்கு தொங்கும் பூட்டுக்களைப் பணத்தால்
திறக்கவேண்டியுள்ள நிலையை இன்னொரு கையால் மறைத்துக்கொள்ளும் நிகழ்வுகள்
நம்முடையவை.

இலக்குகளை நிர்ணயிக்கச் சொல்லிக்கொடுக்கும் கல்வி, அவற்றைச் சேர்வதற்குரிய
பாதைகள் முழுக்க அயோக்கியத்தனமான சுயநலங்களின் வேர்களில் இருந்து
அரும்பிவிடுவதிலிருந்து காப்பாற்றுவதில்லை. எனவேதான் மெத்தப்படித்த இரு
மருத்துவர்கள் பெற்று வளர்க்கும் ஒரு சிறுவனை மிக இளம் வயது அறுவை சிகிச்சையாளனாய் கின்னசில் இடம்பிடிக்கவைக்கத் தூண்டும் ஆவல் ஏதோ ஒரு ஏழைப் பெண்ணின் வயிறு கிழிக்க எந்த அடிப்படையுமில்லாமல் அவன் கைகளில் கத்தி கொடுக்கிறது. விதிகளின்படி அமைக்கப்படாத தனியார் பள்ளி பல குழந்தைகளின் உயிர்களைப் பணயம் வைக்கிறது. வறுமையின் காரனமாய்க் கடன்வாங்கிப் படிக்க வங்கிக்குப் போகும் ஒரு இளைஞனுக்கு அது "எந்த அதிகாரவரம்புடைய வங்கியில் அவனுக்குக் கிடைக்கும்?" என்று பார்த்துச்சொல்வதில் காட்டப்படும் தாமதங்களும் அலட்சியங்களும் அவன் தற்கொலை வரைக்கும் போகிறது.

பிறந்தால் பிறந்த குழந்தைக்குப் பிறப்புப் பதிவுச்சான்றிதழ் வாங்குவதிலிருந்து ஒரு நபர் இறந்தால் அவரின் வாரிசுகள் அவருக்கு இறப்புச்சான்றிதழ் வாங்குவதுவரை ஒரு காரியமாய் அரசுத்துறை நாடும்போது அங்கும் லஞ்சத்தின் அவலங்கள். இதை வாங்கும் படித்தவர்களுக்குத் தன் பெட்டி நிறைவது தவிர வேறு கனவில்லை. கொடுக்கும், கொடுக்கமுடியும் நடுத்தர மேல்வர்க்க மனிதர்களுக்குத் தன்னைப்போல் குறுக்குவழி வரவியலாதவருக்குத் தான் எவ்வித அநீதியிழைக்கிறோம் என்கிற எண்ணங்களுமில்லை. தொடரும் இச்சீரழிவு ஆட்டங்களில் பங்குபெற முடியாதவர்களாய், அப்படியே பங்குபெற்றாலும் செயிக்கமுடியாதவர்களாய் ஒரு பெரும்பிரிவு மக்களையும், அவர்களின் அன்றாட அல்லல்களையும் உள்ளடக்கித்தான் இயங்குகின்றன நம் அரசுகளும், அவற்றின் இயந்திரங்களும்.

நிகழ்கால நிலைகடப்பதில் இத்தொய்வுகள் இறுகியிருக்கின்றபோதிலும் அடுத்த நகர்வுகளை
அடையாளப்படுத்துவதிலும் ஒரு அரசாங்கம் தேங்கிவிடாமல் தொடரவேண்டியிருக்கிறது.
அப்படியொரு நகர்வாய்ச் சொல்லலாம் இந்திய அரசு ஏற்படுத்தியிருக்கும்
http://darpg-grievance.nic.in/ என்ற இவ்விணையத்தளத்தை. நெடுநாட்களாய்த்
தொடர்பற்றுப் போயிருந்த நண்பர் ஒருவரிடமிருந்து வந்த மின்னஞ்சல் என ஆவலுடன்
திறந்தபோது இச்செய்தியையும், சுட்டியையும் அனுப்பித் தன் மகிழ்வைப் பகிர்ந்திருந்தார்.
அரசுத்துறைசார்ந்த தம் பாதிப்புகளை நேரடியாக அரசின் பார்வைக்குக் கொண்டுவர
மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த forum உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த
முறையும் நோக்கமும் பாராட்டப்படவேண்டியவை. அன்றாட வயிற்றுப்பாட்டில்
ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஒண்டிக்குடித்தனக்காரன் தனக்கு மின்வாரியத்தால் ஏற்படும்
பாதிப்பொன்றுக்குப் பேர்தேடித் தெருத்தேடி ஒரு வழக்கறிஞர் அமர்த்திக்கொண்டு
நீதிமன்றப்படியேறி வாதாடிக்கொண்டிருப்பதிலிருந்து இங்கு தன் பிரச்சினையைப் பதிந்து
தீர்வுதேடிக்கொள்ளமுடிந்தால் அவனுக்கு மிகப்பெரிய நேரச் சேமிப்புக் கிடைக்க முடியும்.


இதன் இயங்குதன்மைகள் எளிமையானவையாகத் தெரிவதால் "என்வீடு எரியும்வரை எதற்குச் சத்தமிடவேண்டும்? பிறகு சாட்சி சொல்ல அலையவேண்டும்" என்ற பொதுவான மக்கள் மனோபாவத்தை அசைத்து 'என்ன சொல்லப்போகிறார்கள் எனக் கேட்டுத்தான் பார்ப்போமே" என்ற விழிப்புணர்வுக்குச் சிறிதாவது தூண்டலாம் இது. இதன்மூலம் எப்பிரச்சினையும் யார் பார்வைக்கும் எளிமையாக எடுத்துச்செல்லப்படலாம் என்கிறபட்சத்தில் துறைசார்ந்த பணியிடங்களில் அலட்சியங்கள் குறையலாம். தத்தம் கடமைகளில் அக்கறை வளரலாம். நண்பர் அனுப்பியிருந்த மடலில் ஒருவரின் சொந்த அனுபவத்தையும் குறிப்பிட்டிருந்தார். பாரிதாபாத்தில் வசிக்கும் ஒருவர் இம்மன்றத்தை அணுகியதாகவும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டியிருக்கும் செய்தி இது.

"பாரிதாபாத் முனிசபல் கார்ப்பரேசன் சிலகாலம் முன்பு குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளில்
புதுச் சாலைகள் அமைத்தது. அவை அப்பகுதிவாழ் மக்களுக்கு உதவியாகவும்,
நன்மையாகவும் மாறியிருந்தபோது இரண்டேவாரத்தில் பிஎஸ்என்எல் தன் கேபிள்
இழுப்புக்களுக்காக புத்தம்புதுச் சாலைகளைத் தோண்டி மீண்டும் குழிகளை உருவாக்கியது.
இது அப்பகுதிவாழ் மக்களுக்கு ஏற்படுத்திய அசௌகரியங்களைச் சொல்லி அங்கே
குடியிருக்கும் ஒருவர் இம்மன்றத்தில் பிரச்சினையைப் பதிந்தபோது விரைவிலேயே
பாரிதாபாத் முனிசபல் கார்ப்பரேசன் மற்றும் பி எஸ் என் எல் என இரு அமைப்புகளுக்கும்
விசாரணை நோட்டீஸ் அரசு மூலம் அனுப்பப்பட்டதோடு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு
ஆதாரமாக அதன் நகல்ஒன்று பிரச்சினையைப் பதிந்தவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டது."

இச்செய்தி உண்மையாக இருக்குமானால் இம்மன்றம் குறித்த எதிர்பார்ப்புகள்
அதிகரிக்கலாம். அறிவியலின் வளர்ச்சி என்பது அக்னி ஏவுகணை அனுப்பி
அண்டைநாட்டுக்குத் தன் பலத்தை நிரூபிப்பதோடு முடிந்துவிடக்கூடியதல்ல.
அறிவியலின்மூலமான ஆயுதங்களை மூளையோடு இதயமும் கொண்டு சிந்தித்துத் தன் மக்கள் நலன்காக்கும் அத்தனை உள்நாட்டுத் தேவைகளிலும் பயன்படுத்தி வெற்றிகாண்பதிலேயே அது நிறைவுபெறுகிறது. அப்படியொரு பயணமும், திட்டமும் என்றால் இம்மன்றத்தை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அதேசமயம் இடறுகிற இன்னொரு சிந்தனையும் வந்தே தீருகிறது. ஒரு கணினியும், அதில் இயங்குவதற்கான அறிவும், வசதியும் உள்ள மேல்தட்டு, நடுத்தட்டு மக்களுக்கே இது மீண்டும் பயன்படும் ஒன்றாகப் போகுமே தவிர அடித்தட்டு, கீழ்நிலை மக்களுக்கு நம்நாட்டில் பலதைப்போலவே இதன்பயன்பாடும் எட்டாக்கனியாகவேதான் போகுமில்லையா? இருக்கும் மன்றங்கள் எல்லாவற்றிலும் கைவிடப்பட்டவர்கள் இம்மன்றத்தாலும் கைவிடப்படுவார்கள் எனில் எங்கள் மன்றங்கள் காலகாலத்துக்கும் யாருக்காக? இக்கேள்வியொன்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இதில் நிறைகள் அதிகம் எனச் சொல்லலாம்.







Friday, October 12, 2007

ஊர்க்குளம்





காற்றலையும் அந்தரத்தில்
அசைத்தலும்நீக்கிச் சிறகுவிரித்தபடி நகருமொருபறவையின்
நிழலையும் பிரதிபலிக்கும் தெளிவுடன் திகழ்ந்தது அச்சிறுகுளம்

சிற்றாழம் இறங்குகையில் காலின்நகக்கிழிப்போ பற்களைப் பலிகேட்பதோ
வன்மம் உள்ளொளித்த மென்பாசிகளுக்குத் தன்னைக்கொடுத்திராத
கற்களின் சூழலில் இரத்தத் தெறிப்புகள் இல்லை தேரைகளின் முதுகுகளில்கூட

"ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை காணென்று கும்மியடி"
புத்தகம் விரித்து உருப்போட்டு நடந்தேகிய சிறுமனிதக் குரலுக்கு
தலையாட்டி மிதந்துகொண்டிருந்தன தாமரை மொட்டுக்கள்

விடுதலையின் நிறமென்பது அந்நீர்த்தெளிவின் நிறமேயென்றுகூட
கைகளைப் பறித்தாலும் சொற்களை ஊதிக் காற்றிலே எழுதுவேனெனும்
ஊர்க்கவிஞன் ஒருவன் உரத்துக் கூவியிருந்தான்

காலக்கருக்கலில் சில மேகங்களே கடந்திருக்கும்.
அச்சிறுகுளத்தில் நீரள்ளிப் பருகக் கோர்த்த கைகளுக்குள்
எத்திசையிலோ தனித்து மிதந்திருந்த பறிக்கப்பட்ட இருவெளிர்கண்கள்
வந்துவிழுந்ததான திகில் கதைகள் இப்போது

உரக்கப்பாடிய ஊர்க்கவிஞனின் மகன்தான் இன்று
இந்நீரின் வண்ணம்போலவே வாழ்வு
கருமையான தெளிவற்ற தன்மையில்
மிதப்பதாய்ச் சொல்கிறான்

மண் துளைகளடைக்கும் எலும்புகளுக்கே இடம்விட்டு
தாமரை வேர்களும் இறந்தன போலும்
இயலாமையைப் பாடிப்பறக்கின்றன வண்டுகள்

ஒரு ஊர்க்குளம் உருமாறிவருவதற்கு
என்ன விமர்சனங்கள் சொல்லிவிடமுடியும்?
இதற்கடியில் ஒரு சுடுகாடு இருந்திருக்கலாம்
அல்லது
நாளை இது முழுக்க ஒரு சுடுகாடும் ஆகலாம்
என்பதைத் தவிர?