நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Tuesday, February 14, 2006

நீயும் நானும்

தங்கை வளர்க்கும்
செல்லப்பூனையின் கால் தடங்கள்
எங்கெங்கு பதிந்ததெனத் தெரியாமல்
வீடெங்கும் வியாபித்துக் கிடக்கின்றன
நீயும் மனதில் அப்படியே


தெருமுனையில் நின்றுகொண்டிருந்த
பெண்ணின் இடுப்பிலிருந்த குழந்தை
பொக்கைவாய் காட்டிச் சிரித்ததற்கு
இணையான பிறிதொன்றைச்
சொல்லமுடியவில்லை
உன் அன்புக்கும் அப்படியே


நடமாட்டம் குறைந்த மலைப்பாதையில்
ஆரவாரமற்றோடும் சிற்றோடை
சீரான தாளகதியில் மெல்ல நகர்வதுபோல்
நீ எனைப் பின்தொடர்ந்த நிகழ்வுகளும்அழகானவை


பாறைகளின் இடுக்கில்முளைத்த செடியொன்று
வளர்ந்து பூத்திருப்பதைப் பார்க்கையில்
என் வாழ்விற்குள் வந்த
உன்னை நினைத்துக் கொள்கிறேன்.


நான் காதலர்தினம் கொண்டாடுவதில்லையெனினும்
பரிசுப்பொருட்களாலும் வாழ்த்து அட்டைகளாலும்
தங்களைப் பரிமாறிக்கொள்கிற
காதலர்களைக் கடக்க நேர்கையில்
ஞாபகம் வந்து தொலைக்கிறது
சொற்களைத் தவிர்த்த கவிதையொன்றால்
என்னிடம் நீ பகிர்ந்துகொண்ட காதல்

6 Comments:

At 5:29 AM, February 15, 2006, Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

அன்பின் செல்வா,

எப்போதோ துவங்கியிருக்கவேண்டிய வலைப்பதிவு. இப்போதுதான் நேரம் வந்தது. மகிழ்ச்சி. நிறைய எழுதுங்கள். படிக்கக் காத்திருக்கிறேன். முன்பு தோழியரில் எழுதியவற்றைக் கூட மீள்பதிவு செய்யுங்கள். எத்தனை முறை படித்தாலும் அலுக்காத கவித்துவ வரிகள் கொண்ட பத்திகளாயிற்றே. மீண்டும் படிக்கலாம்.

அன்புடன்,
ஜெ

 
At 5:20 PM, February 15, 2006, Blogger செல்வநாயகி said...

ஜெ, தமிழ்மணத்தில் உங்களையெல்லாம் அடிக்கடி சந்தித்துக்கொள்வதற்காகவேனும் ஏதாவது எழுதிக்கொண்டிருக்கத் தோன்றுகிறது. நன்றி.

 
At 5:31 AM, February 16, 2006, Blogger சுந்தரவடிவேல் said...

மீண்டும் வருக!

 
At 5:57 PM, February 22, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி சரவணன், சுந்தரவடிவேல்.

 
At 9:01 AM, July 31, 2006, Blogger வீரமணி said...

nalla kavithikal.
thodrunthu ealuthungal..


g.veeramani

 
At 1:23 PM, July 31, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி வீரமணி.

 

Post a Comment

<< Home