நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, October 24, 2007

ஞாநி .... எனக்குத் தெரிந்த குறிப்புகள்


ஆட்சியிலிருக்கும் முதல்வருக்கு வயதாகிவிட்டதென்றும் எனவே அதை அவர் வேறு யாருக்காவது கொடுத்துவிட்டு வேறு கட்சிப் பணிகள் ஆற்றலாம் என்றும் ஞாநி எழுத, அதற்குப் பின்னால் இருப்பது சாதீயமே என்று பற்றவைக்கப்பட்ட திரி இன்னும் எண்ணெய் வற்றாமல் எரிந்துகொண்டிருப்பதும், சோவை, சுஜாதாவை விமர்சிக்கும்போதெல்லாம் அவர்களுக்கு ஆதரவளிக்க ஓடோடி வருபவர்கள் இப்போது ஞாநிக்கும் அதே அடிப்படையிலோ அல்லது கலைஞர் எதிர்ப்பு அடிப்படையிலோ பாதுகாப்புக்கவச எழுத்துக்களைப் பதித்து வருவதும் நிகழ்நாட்களின் முக்கியமாக்கப்பட்ட விசயங்கள்.

இணையத்தின் சிறப்பான கட்டற்ற கருத்து சுதந்திரம் ஞாநியின் சட்டைக்குள் பூணூல் நெளிவதாகக் கண்டுபிடித்திருக்கிறது. ஒரு வளர்ந்துவரும், செறிவான படைப்புகளை வழங்கும் வல்லமை வாய்க்கக்கூடியவர் என்று நான் நம்பும் ஒரு நண்பர்கூட ஞாநி என்று எழுதும்போது "அரைவேக்காட்டு ஞாநி" என்றே அடைமொழியிட்டு எழுதுகிறார் இப்போது.
அடுத்தவர்களுக்கு இப்படியெல்லாம் தெரியும் ஞாநி எனக்கு எப்படித் தெரிகிறார் என்று யோசித்துப் பார்த்தேன். அதில் தெறித்த குறிப்புகளாய் இவ்விடுகை.

விசாலமான வீதிகள், மழைவந்தால் கிளம்பி மணம்தூக்கும் மண்வாசனை, தெருவில் நடந்தாலும் தனியாய் இருக்கமுடிந்த குறைந்தபட்ச இரைச்சலற்ற வாழ்க்கை என்றிருந்த
கோவையிலிருந்து சென்னைக்குள் வந்துசேர்ந்தபோது தெருக்களில் எப்போதும் கசகசத்த கூட்டமும், மரங்களைப் பார்த்தாலும் காற்றைப் பார்க்கமுடியாத நெருக்கமும் ஒரு
விருப்பமில்லாத புறச்சூழலை ஏற்படுத்தின. ஆனால் அகச்சூழலுக்குள் என்னை மெல்ல வேறு பரிமாணத்திற்கு வார்த்த பெருமை சென்னைக்கே உண்டு.

முதன்முதலாய்ச் சேர்ந்துபோன ஒரு பெரிய புத்தகக்கடையில் நான் வழக்கம்போலவே கி.வா.ஜகந்நாதனை, கிருபானந்தவாரியாரை, வள்ளளாரை, இன்னும் ஈரமான மொழியில் முளைத்த சில கவிதை நூல்களை அள்ளியெடுத்துக்கொண்டு நிமிர்ந்தபோது அவற்றிற்கான பணம் செலுத்திவிட்டு அவன் வெளியில் நின்றிருந்தான். "நீ எதுவும் வாங்கவில்லையா?"

"வாங்குவேன், ஆனால் அவை இங்கு கிடைக்காது. அவற்றை நான் வழக்கமாய் வாங்குமொரு இடத்திற்குப் போகிறேன் வருகிறாயா?"

அப்போது சென்னையின் எல்லாத்தெருக்களும் எனக்கு ஒரே தெருவாகவே தெரிந்தன. எங்காவது ஒரு இடத்தில் தொலைந்துபோனால் திரும்பிவரத்தெரியாத புது ஊரில் எங்கோ
வளைந்து வளைந்து ஒரு சாலையில் வாகனம் சென்று இறுதியில் ஒரு பிளாஸ்டிக் கவரில் சில புத்தகங்களோடு திரும்ப வந்தான். துருவிப் பார்த்தால் உள்ளே "தீம்தரிகிட", "தலித்
முரசு", "கவிதாசரண்".

"என்ன இதெல்லாம்? நான் இதுவரை தெரிந்துகொள்ளவில்லையே?"

"அதனாலென்ன? இப்போது ஆர்வமிருந்தால் தெரிந்துகொள்ளேன். இவையெல்லாம் உனக்கு சமூகத்தின் இன்னொரு பக்கத்தைச் சொல்லும்"

சரி நேரமிருக்கும்போது படித்துப் பார்க்கவேண்டும் என்ற நினைத்துக்கொண்டேன். வாசிப்பது என்பது இருவருக்குமான பொது ரசனை என்றாலும் புத்தகங்கள் பொதுவானவையாக
இல்லாதிருந்ததால் அப்போது தனித்தனி அலமாரிகள்.

சிலநாட்கள் சென்றிருக்கும். பணியிடத்திலிருந்து ஒரு பயணம். தவிர்க்கமுடியாததாய் அலுவலகத்திலிருந்து எல்லோருடனும் போயாகிவிட்டது.

"இந்தப் பள்ளிக்கு எதற்கு வந்தோம்? என்ன விசேசம் இங்கு?"

"பெரியவர் வருகிறார். அவரைப் பார்க்கத்தான் இத்தனை கூட்டம். நாமும் அதற்கே வந்திருக்கிறோம்."

ஓ அந்தச் சாமியாரா? சாமியை விட்டு விலகியிருக்காத நாட்கள்தான் அவை. ஆனாலும் சாமியார்களைவிட்டு வெகுதூரத்தில். காரணம் சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படித்தபோதே ஒரு சாமியாரை வழியெல்லாம் பூத்தூவி அழைத்துவந்து பாதபூசை செய்தார்கள். உச்சிகுளிரிந்த நேரத்தில் "இந்தப்பள்ளியின் சிறந்த ஏழை மாணவர்கள் இருவருக்கு என் கல்லூரியில் இலவசமாகக் கல்வி தருவேன். வருடக் கடைசியில் அனுப்பி வையுங்கள் என்று சொல்லிவிட்டுப் போனார் சாமியார்". அவர் பேச்சை நம்பிக் கல்லூரிக்கு மாணவர்களை அழைத்துப்போய் "சாமி அப்படித்தான் சொல்லீட்டு வருவார், ஆனா அதையெல்லாம் அப்பவே மறந்துருவார். இந்தளவு நன்கொடையோடு வாருங்கள், சேர்த்துக்கொள்ளலாம்" என்ற பதிலைப் பெற்றுக்கொண்டு திரும்ப வந்த தலைமையாசிரியர் சொல்லியதே சாமியார்கள் மீதான கொஞ்சநஞ்ச மரியாதைகளையும் காற்றில் பறக்கவைத்திருந்தது. சில யோக வகுப்புகளை விரும்பிப் படிக்கப்போனாலும் குருஜிக்களுக்குத் தலை தரைதொட வணங்கி நிற்கும் பணிவும் வந்து தொலைக்கவில்லை.

இப்போது முதன்முதலாய் ஒரு பெரிய பீடாதிபதி வரும் இடத்தில் வந்து மாட்டியாகிவிட்டது. அத்தனை மாணவர்களும் எழுந்துநின்று பஜனை பாட, முக்காடிட்டு அவர்
வந்துகொண்டிருந்தார்.

"பெரியவர்னு அவரத்தான சொல்லுவாங்க. நீங்க இவரையா பெரியவர் வரார்னு சொன்னீங்க?"

"இவரும் பெரியவர்தான். சின்னப் பெரியவர்".

பூசைகள் நடந்தன. பொன்னாடைகள் குவிந்தன. பிரசாதம் வாங்கத் தவறினால் வாழ்வில் எல்லாம் தவறிவிடும் என்கிற பதைப்பில் வரிசையாய் மனிதர்கள். வரிசைக்குள் ஒருத்தியாய்
நானும் நின்றேன் அல்லது நிற்கச்சொன்னபோது மறுப்பேதும் சொல்லாமல் நின்றுகொண்டேன். ஒவ்வொருவராய் ஊன்றிக் கவனித்துக் கண்கள் மூடி ஏதோ உச்சரித்துச் சாமியார் பிரசாதங்கள் கொடுத்துக்கொண்டிருந்தார். யாருக்கு எப்படிக் கொடுத்தார்? கவனிக்கவில்லை. என் முறை வந்தபோது பிரசாதமாய் ஒரு ஆப்பிள் கைகளுக்கு வந்தது. அது வந்த விதம்தான் முக்கியமானது. சுமார் 50, 60 செமீ உயரத்துக்குத் தூக்கி அவரின் கைகள் அதற்கும் கீழே வந்தால் இங்கிருந்து ஏதோ ஒன்று போய் ஒட்டிக்கொண்டு அவரைக்
கொன்றுவிடுவது போன்ற பாவனையில் உயரத்திலிருந்து என் கைகளில் எறியப்பட்டது அப்பிரசாதம். ஒரு குறிப்பிட்ட மதம்சார்ந்த பெரிய மடாதிபதி என்று மக்களால் கருதப்படும் ஒரு துறவியை முதன்முதலாக நேரில் பார்த்தபோதே "மனிதரில் ஒருவரிடம் இப்படித் தீண்டாமை பார்த்தும், தீண்டினால் தனக்கு ஏதோ ஆகிவிடுவது போன்ற பயத்திலும் உள்ள ஒருவர் எப்படித் துறவியாவார்? கேவலம் ஒரு பயத்தைத் துறக்க முடியாத நபர் முற்றுந்துறந்த துறவியாதல் சாத்தியமா?" என்ற கேள்விகள்தான் தோன்றினவேயொழியக் கைகளில் எறியப்பட்ட ஆப்பிள் வாய்க்குப் போகாமல் கைகளிலேயே கனத்தபடி இருந்தது.

அன்றைய நாள் நிகழ்வுகளின் பகிர்வாய் நான் அவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது இச்சம்பவமே முக்கியமாய் இருந்தது. என் சோர்வைப் புரிந்துகொண்ட அவன் சொன்னது
இதுதான். "ஆண்பெண் சமத்துவம் என்றும், பாரதி வலியுறுத்திய பெண்ணுரிமை என்றும் வாசிக்கிற, பேசுகிற நீ என்றேனும் அடிமைத்தனத்தின் வேர்கள் முகிழ்க்கும் இடங்களை, அவை வறண்டுவிடாமல் நீருற்றப்படும் இடங்களை வாசித்தோ, பார்த்தோ அறிந்திருக்கிறாயா? அந்தச் சாமியாருக்கு உன்னிடம் தீண்டாமை பாவிக்கக் காரணம் நீ பெண்ணாயிருப்பதுதான். இது நம் மதத்தில் பெண் என்பதோடு முடிந்துவிடுகிற தீண்டாமையுமல்ல. சாதிகளின் பெயரால் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே எல்லாவற்றிற்கும் உகந்தவராய், மற்றவர்கள் கடவுள் ஆலயங்களுக்குப் போனாலும் அவர்களிடமே கையேந்தி நிற்பவராய் இருப்பதன் சூட்சுமங்கள், வரலாறுகள் பற்றி யோசித்திருக்கிறாயா? சாமியார் மேல் சலிப்புற்று இருக்கும் இந்நாள் நீ இவைகளைப் படிக்க ஆரம்பிக்கிற நாளாக இருக்கட்டுமே" .

அவன் அலமாரிக்குள்ளிருந்து "தீம்தரிகிட" வை எடுத்துக்கொண்டு அமர்ந்தேன். "சங்கராச்சாரி" என்று தலைப்பிலே நின்ற சொல்லே ஆச்சரியமளித்தது. எழுதியிருந்தவர் ஞாநி. அப்படித்தான் அவர் எனக்கு அறிமுகமானார். பிறகு சிலகாலம் நான் தொடர்ந்து வாசித்த அவரின் இதழோ, எழுத்துக்களோ சாதீயச் சிந்தனைகளை, மூடத்தனங்களை மூர்க்கத்தனமாக எதிர்க்கும் துணிச்சலான ஆயுதங்களாகவே இருந்தன. இதில் முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஒரு நேர்மையான சமூக அக்கறையுள்ள எழுத்தாளன் சாதி ஆதிக்கங்களை மட்டும் எதிர்ப்பவனல்ல. அதன் வடிவங்கள் எவ்வகையிலிருப்பினும் எதிர்ப்பவன். அப்படிப் பார்த்தாலும் ஞாநி அதற்குள் பொருந்தியே வருவார். ஏனென்றால் ஆண் பெண் சமத்துவ நிலைகளை வெறுமனே எழுத்தில் வடித்துக்கொட்டிவிட்டுத் தான் எழுத்துக்குத் தன் வாழ்வைத் தியாகம் செய்திருக்கக் குடும்பத்தைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட தியாகச்செம்மல் என் மனைவியே என்று சான்றிதழ்கள் தரும் வாய்ச்சொல் வீர எழுத்தாளர்களில் ஒருவராய் இன்றித் தான் பங்குபெற்ற பத்திரிக்கையில் தன் மனைவியையும் பங்குபெற வைத்தவர். பெண்கள் பிரச்சினைகள் குறித்து ஞாநியின் மனைவி எழுதிவந்த தொடரும், ஞாநியும், அவர் மனைவியும் மேற்கொண்ட வாழ்க்கை முறையும் அவர்களின் எழுத்துக்கும்
வாழ்க்கைக்குமான ஒற்றுமைக்குச் சாட்சி. பெரியாரைத் தொலைக்காட்சிக்குக் கொண்டுவந்தது, பாய்ஸ் படத்திற்காக சுஜாதாவைக் கடுமையாக விமர்சித்தது என்று மேலோட்டமாகப் பார்த்தாலே அவருக்குச் சாதீயப் பற்று இருக்கமுடியாது என்பதற்கான உதாரணங்களைக் காண முடியும்.

ஞாநியின்மீது இவ்வளவு விமர்சனங்களை அள்ளியிறைக்கிற இணையத்திலேயே ஞாநி எழுதியிருந்த கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. கர்நாடக இசைப்பாடகி எம் எஸ்
சுப்புலட்சுமி இறந்தபோது எங்கெங்கும் அவருக்குப் புகழ்மாலைகளே இறைந்துகிடக்க முற்றிலுமொரு வேறு கோனத்தில் அவர்மீது விமர்சனப்பார்வையை வைத்திருந்தார் ஞாநி. எம் எஸ் சுப்புலட்சுமி தன் கலைத்திறமைக்காகப் பாராட்டப்படவேண்டியவரே என்றாலும் அவரின் இன்னொரு பக்கத்தையும் பார்க்கவேண்டும். ஒரு உயர்சாதி ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு அந்த ஆணின் வாழ்வுமுறையோடு முற்றிலுமாய் ஒன்றி அச்சாதியின் கலாசாரங்களையே தனதாகவும் வரித்துக்கொண்டு அவற்றின் சாயல்களைத் தன் கலைத்திறமைகளிலும் கரைத்தபடி அவ்வட்டத்திற்குள்ளேயே வாழந்துமுடித்தவர்தான் அவரும் என்கிற பொருளில் எழுதியிருந்தார் ஞாநி. அக்கட்டுரையை அப்போது இணையத்தில் யார்யாரெல்லாம் கிழித்துக்கொண்டிருந்தார்களோ அவர்களின் மற்றநிலைப்பாடுகள், கருத்துக்கள் இவற்றையும் கணக்கிலெடுத்துப் பார்த்தபோதும் ஞாநி எந்தெந்த இடங்களைவிட்டு எவ்வளவுதூரத்தில் விலகி நிற்கிறார் என்றும் புரிந்துகொள்ள முடிந்தது.


அப்படியெல்லாம் சமூகத்தின் போக்கை எதிர்த்து நின்ற ஞாநிதான் இப்போது கலைஞருக்கு வயதாகிவிட்டது, அவர் முதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெறலாம் என்று எழுதியதற்காகச்
சாதீயத்தின் பேரால் விமர்சிக்கப்படுகிறார். இந்த விமர்சனங்களும், கண்டனக்கூட்டங்களும், தாக்குதல்களும் எங்களுக்குச் சொல்வது நிறைய. புனிதத்தன்மைகளாகப் போற்றி
வளர்க்கப்படும் மூடக்கருத்தாக்கங்களை எதிர்க்கவேண்டும் என்று குரல்கொடுப்பவர்களுக்கும்கூட சில புனிதத்தன்மைகள் வேறு வடிவங்களில் இருக்கின்றன. இப்போது அது அவர்களுக்குக் கலைஞர் வடிவத்திலே அமைந்துவிட்டது. அதுதான் ஞாநிமீது அடிப்படையற்ற தாக்குதல்களைச் செய்யவும் காரணமாகிறது. பகுத்தறிவு என்பது ஒன்றின்
புனிதத்தன்மையை உடைத்துவிட்டு இன்னொன்றைப் புனிதமாகவோ, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாகவோ பிடித்துக்கொள்வதில் இருக்கமுடியுமா? போகிறபோக்கைப் பார்த்தால்
அதுதான் நிகழும் போலிருக்கிறது.

எத்தனையோ பேருக்கு எத்தனையோ காரணங்களுக்காகக் கலைஞர் பிடித்திருப்பது மாதிரி
எனக்குச் சில காரணங்களுக்கு அவர் மீது மரியாதையும், சில காரியங்களுக்கு விமர்சனங்களும் சேர்ந்தே உண்டு. இந்நிலையில் அவரின் மூப்பு மற்றும் பதவி விலகல் பற்றி ஞாநி பேசியிருப்பது இவ்வளவு தாக்குதல்களுக்குரிய பிழையென்றும் தோன்றவில்லை. பொதுவாகவே நம் அரசியல் நடைமுறைகளில் இன்னும் மாற்றங்கள் வேண்டியே இருக்கின்றன. ஒரு கட்சியைச் சேர்ந்த ஒரு நபர் குறிப்பிட்ட முறைகளுக்கு மேல் மீண்டும் மீண்டும் ஒரு பதவியை வகிப்பதேகூட மாற்றப்படலாம். அதே கட்சி வந்தாலும்கூட அடுத்தமட்டத் தலைவர்களைப் பதவியில் நியமித்து, அவர்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்து புதிய மனிதர், புதிய செயல்முறைகள் என்று தொடர் மாற்றங்களைச் செய்யலாம். நல்ல தலைவர்கள் அடுத்த தலைவர்களை உருவாக்குவதிலும் வெற்றி பெறுவாரேயன்றித் தன் தலைமையிடம் எப்போதும் தவறிப்போகாமலே இருக்கவும், அது அடுத்துத் தன் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானதாக ஆகவேண்டும் என்று நினைத்தும் இருப்பதில்லை. ஆனால் ஒரு கட்சிக்கு அடுத்த தலைமை யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தப்படுவதுகூட ஒரு கட்சியாலோ அதன் தொண்டர்களாலோ செரித்துக்கொள்ளப்படாமல்போய், நடத்தியவர்களை எதிர்ப்பதாய் நினைத்து அது அப்பாவி மக்கள்மீதான வன்முறையாகக் கட்டவிழ்க்கப்படும் அரசியல் சூழல்கள் நம்முடையவை என்பது வருங்காலத் தலைமுறைக்கு எவ்வித நம்பிக்கைகளை அவர்களின் மனதில் விதைக்கும் எனத் தெரியவில்லை.

ஒரு கட்டுரைக்காகச் சாதி மறுப்பாளர் ஒருவர் அவரின் சாதியின் பெயரால் எள்ளப்படுவதும், அதைச் செய்பவர்கள் அதே சாதிமறுப்புக்கொள்கை கொண்டவர்கள் என்பதும் ஒரு ஆரோக்கியமான அறிவுச்சூழலை இங்கு காட்டவுமில்லை. தன் சொந்தசாதி தாழ்ந்துவிடக்கூடாதென்று சாதியரிப்பிலே ஒரு இடத்தில் வலிந்து ஆதரவளித்து எழுதுவது எவ்வளவு அருவெருப்பானதோ அதற்குச் சற்றும் குறைச்சலில்லாததாகவே தோன்றுகிறது பலகாரணங்களுக்காகத் தன் சொந்தசாதியையே எதிர்த்து நின்ற ஒருவருக்கும் அச்சாதி முத்திரையைச் சட்டென்று குத்திவிடுவதும்.

ஒரு தையல்காரர் எல்லோருக்கும் ஒரே அளவுகளில் துணி தைப்பதில்லை. அவரவருக்கான அளவுகளைச் சிரமேற்கொண்டு எடுத்துக்கொண்டும் அதிலிருந்து மாறிவிடாமலும்தான் தன் பணியாற்றுகிறார். ஆனால் நம் அறிவுஜீவிகள் சில பொதுக்கணக்குகளை வைத்திருக்கிறார்கள். அந்தக்கணக்குகளை அப்படியே எல்லோருக்கும் பொருத்தி ஒரு வடிவம் தயாரிக்கிறார்கள். அதற்குள் பொருந்திவராதவன் தங்களுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கே எதிரி என்றும் சொல்லிவிடுகிறார்கள். அந்தப் பொதுக்கணக்குகளில் தனக்கும், தன்னால் தாக்கப்படுபவனுக்குமுள்ள தனிப்பட்ட கசப்புகளோ, காழ்ப்புகளோகூட அடக்கம். சிலநேரங்களில் அறிவுஜீவிகளை வாசித்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருப்பதைவிட ஒரு தையல்காரரை நின்று கவனித்துக்கொண்டிருக்கலாம். இவர்களைவிட அவரிடம் நிறையத் தொழில்நேர்மை உண்டு.

60 Comments:

At 11:26 PM, October 24, 2007, Blogger TBCD said...

ஞாநி சொன்னைதை விட்டுவிட்டு பார்த்தாலும் கூட கலைஞரை சுற்றி ஒரு புனித பிம்பம் உருவாக்க முயற்சிகள் நடப்பது தெரியும்...தளைகளை தகர்தெறிவோம்..என்று சொல்லியவாரே வேறு ஒரு தளையிலே சிக்கிக் கொள்வது தான் மனித இயல்பு போலும்...ரூல்ஸ் ஆர் மேட் டு பி பிரொக்கன்னு சொல்லிக்கிட்டே..புது ரூல்ஸ் உருவாகுமே...அது போல....

 
At 12:04 AM, October 25, 2007, Blogger ROSAVASANTH said...

ஞாநி மீதானா தாக்குதலின் ஜனநாயகமற்ற தன்மை வன்மையாக கண்டிக்கப் படவேண்டியது. வேறு வேறு கட்டங்களில் ஞாநியை வெகுவாக பாராட்டிய யாரும், இந்த தருணத்தில் அவருக்காக பேசாமல் இருப்பது ஆரோக்கியமானதாக தெரியவில்லை. எனது கருத்துக்களை இங்கே கிடைத்த சந்தர்ப்பத்தில் எழுதியிருக்கிறேன்.

http://balaji_ammu.blogspot.com/2007/10/by.html#comment-8798211513806957058

 
At 12:47 AM, October 25, 2007, Blogger Jayaprakash Sampath said...

செல்வநாயகி, முதலிலே, *ஒரு வர்ச்சுவல் கைகுலுக்கல்*.

நேரம் கிடைக்கும் போது இன்னும் விரிவாக

 
At 1:05 AM, October 25, 2007, Blogger ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஞாநியை விமர்சிப்பவர்கள் அவரது கடந்தகால செயல்பாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டே விமர்சிக்க வேண்டும் என்பது எனது கருத்து. அவர் பார்ப்பனீய மறுப்பாளராகவே செயல்பட்டிருக்கிறார்.

விகடன் கட்டுரை ஏற்றுக் கொள்ள முடியாதது தான்; அதற்காக அவரை பார்ப்பன வெறியர் என்பது போல் சித்தரிப்பது தேவையற்றது.

 
At 2:03 AM, October 25, 2007, Blogger தருமி said...

//ஒரு கட்டுரைக்காகச் சாதி மறுப்பாளர் ஒருவர் அவரின் சாதியின் பெயரால் எள்ளப்படுவதும், அதைச் செய்பவர்கள் அதே சாதிமறுப்புக்கொள்கை கொண்டவர்கள் என்பதும் ஒரு ஆரோக்கியமான அறிவுச்சூழலை இங்கு காட்டவுமில்லை.//

நன்றாக ஆணி அறைந்திருக்கிறீர்கள்.

தமிழருக்கே என்பது போன்ற நம் தனிமனித ஆராதனை நம்மை விட்டு விலகுவதாயில்லை.

புஷ் சொன்ன Either you are with us or with them என்ற "பொன்"மொழிக்கேற்ப நம் மக்கள் அளவெடுப்பதும், ஒரே அளவில் தைப்பதும் இப்போதைக்கு மாறும் என்ற அறிகுறிகூட தெரியவில்லை.

நீங்களும் ரோசாவும் சொல்லும் மக்கள் யாரென்று எனக்குத் தெரியாத அளவுக்கு நான் ஒருவேளை பதிவுலகத்திற்குக் காலம் தாழ்த்தி வந்திருப்பேனோ..?

 
At 2:31 AM, October 25, 2007, Blogger கார்த்திக் பிரபு said...

im reading u first time, pinniteenga, nalla solladal, en karuthum ungal karuthum appdiye oththu pogiradhu

keep goin

 
At 2:31 AM, October 25, 2007, Blogger seethag said...

செல்வனாயகி,நான் ஞானிக்கு நேர்ந்ததை நினைத்து மிகுந்த வருத்தம் அடைகிரேன்.

எம்.எஸ். குறித்து எழுதியதில் எந்த தவறும் இல்லை.அத்தனை திற்மையுள்ள பெண்மணி ,ஒரு கலாச்சாரத்தை சேர்வதர்க்காக ஆணாதிக்கத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டிவந்ததே என்று நினைத்தால்பாவமாக தான் உள்ளது.

ஸமீபத்தில் இணயத்தில் படித்தது..

த்ராவிட கட்ச்சிகள் உருவ வழிப்பாட்டை தூக்கி எரிந்தாலும் அதை செய்ய வேண்டி தான் கட்டவுட்கள் வந்ததாக...கடவுள்கள் போய் கட்டவுட்கள் வந்தது போலும்

அதே போலதான் தலைவர்களுக்கு புனிதபிம்பம் என்பதும்.
காந்தி ஆனாலும், பாரதி ஆனாலும்...

 
At 7:26 AM, October 25, 2007, Blogger Gopalan Ramasubbu said...

அருமையான பதிவு :)

 
At 7:31 AM, October 25, 2007, Blogger -/சுடலை மாடன்/- said...

செல்வநாயகி,

நீங்கள் எழுதிய அதே காரணங்களால்தான் நானும் ஞாநி மேலான கண்டனங்களை எதிர்க்கிறேன். அவற்றின் பின்புலமான உளவியலையும் கோடிட்டு காட்டியிருக்கிறேன்.

//வேறு வேறு கட்டங்களில் ஞாநியை வெகுவாக பாராட்டிய யாரும், இந்த தருணத்தில் அவருக்காக பேசாமல் இருப்பது ஆரோக்கியமானதாக தெரியவில்லை. எனது கருத்துக்களை இங்கே கிடைத்த சந்தர்ப்பத்தில் எழுதியிருக்கிறேன். //

ரோசா வசந்த்,

பத்ரியின் பதிவில் நானும் என்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பதிவில் உங்கள் பின்னூட்டத்தை பார்த்து விட்டு, அங்கேயும் என்னுடைய பின்னூட்டத்தையும் மறுபதிவு செய்யலாமா என யோசித்தேன். பச்சை பார்ப்பனியம், கிராமத்து அனானி மற்றும் சமூக சேவை முகமூடி அணிந்து உலவும் அப்பதிவில் பின்னூட்டமிட வேண்டாம் என்று விட்டேன். பத்ரி பதிவில் இட்ட பின்னூட்டத்தை இங்கு மறுபதிவு செய்கிறேன்.

==
ஞாநியின் தொடரை நான் படிக்காததால் அவர் பல மாதங்களாக என்ன எழுதிவருகிறார் என்று தெரியாது. ஆனால் இந்தக் கட்டுரையை நண்பர் ஒருவர் (படங்கள் அல்லாமல்) அனுப்பியதைப் படித்த போது எனக்கு ஞாநி எழுதியதில் எந்தத்தவறும் தெரியவில்லை. கலைஞர் வேட்டி நனைத்தது போன்ற தகவல்களை எழுதியவிதத்தில் தான் எனக்கு உடன்பாடு இல்லை. இதைப் பற்றி தருமியின் பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது இந்த கண்டனக்கூட்டத்தைப் பற்றிப் படிக்கிற போது (நேரமின்மையால் மூன்று ஒலிப்பதிவுகளையே இதுவரை கேட்க முடிந்தது) நான் இங்கு எழுத வந்தது, "காயம் பட்ட சமூக உளவியலில் எவ்வாறு ஞாநி போன்ற ஒருவர் தவறாகத் தாக்கப் படுகிறார்” என்று.

'காயம் பட்ட சமூக உளவியல்' என்று குறிப்பிடுவதை அ. பிரபாகரன் இங்கு ஓரளவு சொல்லியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே கலைஞரின் அரசியல் மீது கடுமையான விமர்சனம் கொண்டிருப்பவன் நான். ஆனாலும் குடும்ப-கட்சி-மலின அரசியல்களுக்கு மத்தியிலும் திராவிட இயக்க கொள்கையடிப்படையிலான ஒருசில திட்டங்களுக்கு கலைஞரின் இந்த அரசு செயல்வடிவம் கொடுக்க முன்வந்துள்ளது. மைய அரசு நிறுவனங்களில் இடப்பங்கீடு, தமிழை முதல்மொழியாகக் கட்டாய பாடமாக்கியது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நீண்டநாளைய ஏக்கம், சேதுசமுத்திர திட்டம் என சிலவற்றை இங்கு குறிப்பிடலாம். இது திராவிட இயக்க செயல்பாடுகளை விமர்சித்து அவ்வியக்கங்களுக்கு வெளியே செயல்பட்டு வரும், ஆனால் திராவிட அரசியலை உள்வாங்கியுள்ள ஆர்வலர்கள்-போராளிகள்-அறிவுஜீவிகளிடம் கலைஞர் மீது ஒரு பற்றை ஏற்படுத்தியுள்ளது. கலைஞரிடம் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் அவரை பார்ப்பனிய அரசியலுக்கு எதிரான குறியீட்டுத்தலைவராகப் பார்க்கின்றனர். கூடவே, தள்ளாத வயதிலும், தளராமால் உழைக்கும் கலைஞரிடம் தம் சொந்த தகப்பனாரிடம் மட்டுமே ஏற்படும் ஒருவித மதிப்பும், பாசமும் உள்ளது.

ஆனால் கலைஞரது இந்த ஒவ்வொரு முனைப்புக்கும் முட்டுக்கட்டை போடும் பார்ப்பனிய சக்திகளின் சூழ்ச்சிகளின் மேல் கடுங்கோபமும் இருக்கின்றது. இதற்காக அவர்கள் மத்திய அரசு இயந்திரம், உச்ச நீதிமன்றம், ஊடகங்கள், மதநம்பிக்கை என எல்லாவிதமான ஆயுதங்களையும் அவர்கள் கலைஞருக்கு எதிராகப் பயன்படுத்தி வருகிறார்கள். காஞ்சி ஜெயேந்திரர், சோ இராமசாமி, சுப்பிரமணியசாமி, வெங்கடராமன், எம்.கே.நாராயணன், இராம், இராமன் போன்ற பல்வடிவ பார்ப்பனிய தீயசக்திகள் திரை மறைவில் கொடுக்கும் சாமர்த்திய தொல்லைகளும் ஏராளம். ஈழத்தமிழர்க்கு ஆதரவாக கலைஞர் சிறு அளவில் ஏதாவது முணகினால் கூட இந்தக் கூட்டத்திலிருந்து மிரட்டல் வந்துவிடும். முழுநாள் அடைப்புக்கெதிராக பார்ப்பனிய உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு திராவிட அரசியல் அனுதாபிகளைக் காயப்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், குறிப்பாக சேதுசமுத்திரத்திட்டத்தின் மூலம் இந்துத்துவ-பார்ப்பனிய இராமவெறி தூண்டப்படும் வேளையில், ஞாநி கலைஞரை இயங்கவியலாத ஒரு முதல்வராகச் சித்தரித்து வெளியேறச் சொல்வதனால் ஞாநியையும் பார்ப்பனிய சக்திகளுடன் பொருத்திப் பார்க்கிறது 'காயம் பட்ட சமூக உளவியல்'. அந்த உளவியலில் ஞாநியின் பார்ப்பனிய அரசியலுக்கெதிரான எத்தனையோ முந்தைய செயல்கள் மறக்கப் பட்டுவிட்டன. சில இடங்களில் ஞாநியின் கருத்துக்கள் அவர் எதோ உள்நோக்கில் செய்வதாக எனக்கும் இடிக்கத்தான் செய்திருக்கின்றன. இருந்தாலும் அவரது பெருவாரியான சரியான செயல்பாடுகளின் பின்னனியில் அவற்றை அவரது சறுக்கல்களாகவே எடுத்துக் கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

எனவே ஞாநியின் கருத்துக்கு எதிராக தங்கள் கருத்துக்களை விகடனுக்கே ஒட்டுமொத்தமாக எழுதி அனுப்பியிருக்கலாம். ஞாநிக்கு எதிரான பெரிய இக்கண்டனக் கூட்டம் தவறானது. பார்ப்பனியத்தை உதறி விட்டு வெளியே வந்தவர்களையும் திரும்பவும் பார்ப்பனியத்துக்குள்ளேயே தள்ளும் அபாயம்தான் தெரிகிறது. அதற்குப் பதிலாக பார்ப்பனிய உச்சநீதி மன்றத்துக்கெதிராக கண்டனக் கூட்டம் நடத்தி அருந்ததி ராய் போல ஓரிரு நாட்கள் சிறைக்குச் சென்றிருக்கலாம்.
==

நன்றி – சொ. சங்கரபாண்டி

 
At 8:25 AM, October 25, 2007, Blogger PPattian said...

அருமையான கருத்து.. அழகாக சொன்னீர்கள்.

//பகுத்தறிவு என்பது ஒன்றின்
புனிதத்தன்மையை உடைத்துவிட்டு இன்னொன்றைப் புனிதமாகவோ, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாகவோ பிடித்துக்கொள்வதில் இருக்கமுடியுமா?//

நல்ல கேள்வி..

//அறிவுஜீவிகளை வாசித்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருப்பதைவிட ஒரு தையல்காரரை நின்று கவனித்துக்கொண்டிருக்கலாம். இவர்களைவிட அவரிடம் நிறையத் தொழில்நேர்மை உண்டு.
//

:)

 
At 9:20 AM, October 25, 2007, Blogger enRenRum-anbudan.BALA said...

செல்வ நாயகி,

ஞாநி எந்த சாதி என்பது முக்கியமே இல்லை, அவர் மீது நடத்தப்படும் 'வார்த்தை' வன்முறையை, ஜனநாயகத் தன்மைக்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் விடப்பட்ட சவாலாகவே பார்க்க முடிகிறது. அவர் கூறியதை (அல்லது அவர் நிலைப்பாட்டை) விமர்சிப்பதை விடுத்து, அவரை கண்மூடித்தனமாகத்
தாக்குவது கண்டிக்கப்பட வேண்டியது.

மிகச் சிறப்பான ஒரு கட்டுரையை வாசிக்க அளித்ததற்கு பாராட்டுக்களும், நன்றியும்.

என்றென்றும் அன்புடன்
பாலா

 
At 11:34 AM, October 25, 2007, Blogger சீனு said...

நல்ல பதிவு.

 
At 1:27 PM, October 25, 2007, Blogger enRenRum-anbudan.BALA said...

சங்கர பாண்டி,

//நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பதிவில் உங்கள் பின்னூட்டத்தை பார்த்து விட்டு, அங்கேயும் என்னுடைய பின்னூட்டத்தையும் மறுபதிவு செய்யலாமா என யோசித்தேன். பச்சை பார்ப்பனியம், கிராமத்து அனானி மற்றும் சமூக சேவை முகமூடி அணிந்து உலவும் அப்பதிவில் பின்னூட்டமிட வேண்டாம் என்று விட்டேன்.
//
எதற்காக என்னைச் சிறுமைப்படுத்தி நீங்கள் பெயரெடுக்க இவ்வளவு ஆசை ? தேவையில்லாமல் எதற்கும் எதற்கும் முடிச்சு போடுகிறீர்கள் ??????

அந்த கி.அ.அ.அ. பதிவில் பார்ப்பனீயம் எப்படி வெளிப்படுகிறது என்று விளக்குங்களேன். சாதீயத்தை உயர்த்திப் பிடித்து நான் எதுவும் எழுதாதபோது, ஏன் இந்த தொடர் தாக்குதல் ? ஒருவரைப் பற்றி தனிப்பட்ட அளவில் ஏசுவதை விடுத்து, கருத்தளவில் தாங்கள் எதிர்ப்பதை வரவேற்கிறேன்.

வேறொரு சமயத்தில் சொல்ல எண்ணியதை, இங்கே சொல்கிறேன். உங்கள் "புரிதல்" தவறானது என்பதற்காகவே இந்த விளக்கம், அதுவும் நீங்கள் என்பதால் ! மேலும் கூற எதுவும் இல்லை!

நன்றி.

எ.அ.பாலா

 
At 2:06 PM, October 25, 2007, Blogger cheena (சீனா) said...

சுதந்திர இந்தியாவில் கருத்துச் சுதந்திரமும் உண்டு. பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களைப் பற்றி கருத்துக்களும் விமர்சனங்களும் அதிகம் வரும். ஞாநி சொன்னதை மறுக்கவும் மற்றவர்களுக்கு உரிமை உண்டு. சாதி என்ற அடிப்படையில் கருத்தை அலச நினைத்திருக்க வேண்டாம். திறந்த மனத்துடன் பதில் கருத்துகள் சொல்லி இருக்கலாம்.

 
At 5:36 PM, October 25, 2007, Blogger துளசி கோபால் said...

செல்வா,

அருமையான சீரான, நடுநிலையான பதிவு.

பாராட்டு(க்)கள்.

 
At 7:26 PM, October 25, 2007, Blogger கோவி.கண்ணன் said...

செல்வநாயகி அருமையாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

ஞானியின் கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்றாலும் அவர் மீது வீசப்பட்ட பார்பனிய சாயம் தவறு.பார்பனியத்தை வரையறை செய்வதில் எதிர்கருத்து உடையவர் எவரையும் திணிக்கலாம் அதுவே அப்படி எதிர்கருத்து கூறுபவர் ஒரு பார்பனராக பிறந்திருந்தால் அது இன்னும் எளிது என்பது போல் அவர் மீது விழுந்த சொல்லடிகள் நினைக்க வைத்துவிட்டது. உங்கள் கட்டுரையை நான் படிக்காமல் ஞானி பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதினேன். நீங்கள் குறிப்பிட்ட எம் எஸ் சுப்புலட்சுமி பற்றிய ஞானியின் கருத்தை நானும் குறிப்பிட்டு இருப்பது ஒரு தற்செயல்.
:)

 
At 8:06 PM, October 25, 2007, Blogger வவ்வால் said...

நான் இது வரையில் ஞானி பேசியது குறித்து எந்த பதிவிலும் கருத்து சொல்லவில்லை. அவர் மீது சாதிய பூச்சு செய்வதை தவறு என்று சொல்வதை அப்படியே எடுத்துக்கொண்டாலும் , இவர் யார் ஒரு கட்சியில் என்ன நடக்க வேண்டும் என்று கருத்து சொல்ல, இவர் குறைந்த பட்சம் அக்கட்சி உறுப்பினரா? சரி வாக்களிக்கும் வாக்காளன் என்றால், பிடிக்கவில்லை எனில் வாக்களிக்காமல் போக வேண்டியது தானே. கட்சியின் தலைமைய மாற்ற சொல்வது ஏன், அதிலும் மிக பெரிய முட்டாள் தனம் ஸ்டாலினுக்கு பதவியை தந்து விட்டு விலக வேண்டுமாம்.

கலைஞரோ யாரோ தலைவராக இருந்து விட்டு போகட்டும் , அடுத்தவருக்கு ஏன் முடி சூட்டுங்கள் என அரச பரம்பரையில் ராஜ குரு சொல்வது போல சொல்ல வேண்டும் ஞானி!

ஜனநாயக ரீதியிலான கட்சி முறை தானே, தற்போது கட்சிகளில் எல்லாம் வாரிசு அரசியல் தான் எனினும் , ஒரு பத்திரிக்கையாளராக இவரே எப்படி வாரிசு அரசியல் வர வேண்டும் , அது சரியானது என சொல்லலாம்.

கலைஞரால் பொதுக்குழுவைக்கூட்டி அவரது விருப்பத்திற்கு ஏற்ப ஸ்டாலினை அடுத்த வாரிசாக கொண்டு வர முடியும் என்றாலும், அதனை ஒரு பொது ஜனமான என்னால் கூட ஏற்றுக்கொள்ள முடியாது, தகுதியானவர்களுக்கே வாய்ப்பு வரவேண்டும், அரச பரம்பரை போல வாரிசுக்கு போக கூடாது பதவி.

ஏன் இதே ஞானியே வாரிசு அரசியலை விமரிசத்து இல்லையா? இன்னும் சொல்லப்போனால் வருங்காலத்தில்.ஸ்டாலினுக்கு தலைமை பதவியை கலைஞர் சூட்டினால் அப்போது அதனை வாரிசுகளின் ஏக போகம் எனக்கண்டித்து கட்டுரை கூட ஞானி எழுதுவார்!

குமுதம் பத்திரிக்கையில் விகடனுக்கு அடுத்த ஆசிரியராக யார் வர வேண்டும் என கட்டுரை வெளியிட்டால் ஏற்றுக்கொள்வாரா? கேட்டால் விகடன் படிக்கும் வாசகனாக சொன்னேன் என குமுதத்தில் எழுதுபவரும் சொல்லக்கூடுமே!

 
At 12:04 AM, October 26, 2007, Blogger தனசேகர் said...

நான் ஞானியைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை .. போன‌ வருடம் வரை விகடனில் அவருடைய எழுத்துக்களைப் படித்து .. ஒரு வித்தியாசமான எழுத்தாளர் , கொஞ்சம் தைரியமாக பேசுபவர் என்பதே என் கருத்து.

வலைப்பதிவில் நாம் எப்படி 100 சதவிகித சுதந்திரத்தை எதிர்பார்க்கிறோமோ .. அதேபோல .. அவருடைய கருத்தையும் சொல்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அதை வெளியி்ட விகடன் தயாராய் இருந்திருக்கிறது .. அதற்கு நாமும் எதிர்ப்பையோ , ஆதரவையோ நம் பதிவில் தருவோம். அதற்கு பலர் தெரிவிக்கும் எதிர்ப்பு போர் , சாதியத் தாக்குதல்கள் .. இவற்றையும் கூட கருத்து சுதந்திரம் என்றே எடுத்துக்கொள்ளலாமே .. பிரச்சினையே வராதல்லவா :)

//அதற்குள் பொருந்திவராதவன் தங்களுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கே எதிரி என்றும் சொல்லிவிடுகிறார்கள். அந்தப் பொதுக்கணக்குகளில் தனக்கும், தன்னால் தாக்கப்படுபவனுக்குமுள்ள தனிப்பட்ட கசப்புகளோ, காழ்ப்புகளோகூட அடக்கம//
100% உண்மை ... எல்லாம் நம்முடைய பார்வைதான் .. .

வாழ்த்துக்கள் !!!.. உங்களின் பேச்சு/பதிவு அவள் விகடனில் வந்ததற்கு ... நம்ம ஊருக்கு பெருமைங்க :)

 
At 9:00 AM, October 26, 2007, Blogger Kasi Arumugam said...

செல்வநாயகி,

இன்னுமொரு நேர்மையான, நம்பிக்கையூட்டும் இடுகை. முதலில் கிளம்பிய தூசி அடங்கிய பின்னரே தெளிவு கிடைக்க ஆரம்பித்தது போலிருக்கிறது.

//தன்சேகர்: வலைப்பதிவில் நாம் எப்படி 100 சதவிகித சுதந்திரத்தை எதிர்பார்க்கிறோமோ .//

நண்பரே, எதிர்பாருங்கள், பார்த்துக்கொண்டே இருங்கள். கிடைக்க வாழ்த்துகிறேன். வன்முறை ஆபாசம் ஏதுமில்லாத (இருக்க வாய்ப்பில்லாத) என் மறுமொழி ஒன்றே இங்கே ஒரு பிரபல பதிவரால் 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசிக்கொண்டேயிருப்போம்! காவலர்களுக்குக் கைதட்டுவோம்.

 
At 9:40 AM, October 26, 2007, Blogger மு. சுந்தரமூர்த்தி said...

//ஞாநி மீதானா தாக்குதலின் ஜனநாயகமற்ற தன்மை வன்மையாக கண்டிக்கப் படவேண்டியது. வேறு வேறு கட்டங்களில் ஞாநியை வெகுவாக பாராட்டிய யாரும், இந்த தருணத்தில் அவருக்காக பேசாமல் இருப்பது ஆரோக்கியமானதாக தெரியவில்லை.//

Vasanth,
Perhaps you had me also in mind while writing this as I supported Gnani's criticism on Ilaiyaraja publicly and privately in emails. I'll write in detail my views on this episode and the related issues on the week end. For now it would suffice to point out my reponse to a previous attack on Gnani

 
At 10:15 AM, October 26, 2007, Blogger செல்வநாயகி said...

மறுமொழிகளுக்கு நன்றி நண்பர்களே அனைவருக்கும். சில நண்பர்களின் கருத்துக்களில் எனக்குத்தோன்றும் மாறுபட்ட எண்ணங்களை எழுத விருப்பம்தான். ஆனால் இப்போது கைவசம் நேரப்பற்றாக்குறை. இயலுகிறபோது முயல்வேன்.

டோண்டுராகவன்,

உங்களின் பின்னூட்டம் படித்தேன். இடுகைபற்றிய கருத்துக்கள் எதுவுமில்லை அதில். சங்கரபாண்டிக்கும், என்றென்றும் அன்புடன் பாலாவுக்கும் இடையிலான முரண்பாடுகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதில் உங்களுக்குரிய நியாயத்தைப் பேச வந்திருக்கிறீர்கள். அதில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர மற்றவர்களின் கருத்துக்களை அனுமதித்துப் பின் அவை நீளும் திசையில் நடக்க ஆர்வமில்லை. எனவே பின்னூட்டம் பிரசுரிக்கப்படாமைக்கு மன்னிக்கவும்.

 
At 11:45 AM, October 26, 2007, Blogger ROSAVASANTH said...

சங்கரபாண்டி, சுமு, நான் உங்கள் இருவரை மட்டும் குறிப்பிட்டு சொல்லவில்லை எனினும் நீங்கள் பேச முன்வந்திருப்பது நல்ல விஷயம். நாம் ஆதரிக்கும் அரசியல் வெறுப்பியல் தன்மையை அடையும் போது (தீவிரமான தொனியில்) வாயை திறப்பதுவே, நமது அறிவு நேர்மைக்கு முக்கிய உதாரணமாக நான் நினைத்து வருகிறேன். இளயராஜா பற்றிய கட்டுரை மட்டுமில்லாது தொடர்ந்து ஞாநியின் பார்வையை நான் மறுத்து வருகிறேன்; அவரை எதிர்த்து வருகிறேன். அந்த கட்டங்களில் ஞாநிக்கு ஆதரவாக கருத்து கூறிய நீங்கள் பேசவேண்டும் என்று நான் நினைத்தது உண்மைதான். என்றாலும் நான் உங்களை குறிப்பிட்டு இங்கே எழுதவில்லை. ஞாநிக்கு ஆதரவாக கருத்து (சுகுணா பதிவில் கருத்து எழுதிய பின்பு லக்கிலுக்கின் பதிவில்) எழுத நான் நினைத்தும் பல நடைமுறை காரணங்களினால் அதை செய்யவில்லை. அது போல உங்களுக்கும் காரணங்கள் இருக்கலாம். அதானால் குற்றம் சொல்லும் தொனியில் யாரை பற்றியும் குறிப்பிட்டு எழுதும் நோக்கம் எனக்கு இல்லை.

`உடன்பிறப்புகள்', வரட்டு பார்பன எதிர்ப்பு என்கிற நிலைகளை தாண்டி வாணிமகாலில் ஒரு அருவருப்பான கோஷ்டிகானத்தை அ.மார்க்ஸ் போன்றவர்களும் அரங்கேற்றிய பின்னர், இது குறித்து நம் நிலைபாட்டை விளக்கும் வகையில் தெள்ளத் தெளிவாக கருத்து சொல்லியாக வேண்டும் என்று நினைக்கிறேன். கருத்து சொன்னதற்கு நன்றி.
(சங்கரபாண்டி, பத்ரி பதிவில் உங்கள் பின்னுட்டத்தை நான் பார்க்கவில்லை, இங்கே இட்டதற்கு நன்றி.)

 
At 12:58 PM, October 26, 2007, Blogger மு. சுந்தரமூர்த்தி said...

Selvanayaki,
I am bit amuzed that you have named your blog "நிறங்கள்" with a subtitle "வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !" but the template and text are entirely in black, white, and gray. :-). This makes the hyperlink in my comment invisible. My comment on a previous attack on Gnani by Arivumathi can be found here.
http://dravidatamils.blogspot.com/2007/08/1.html

 
At 3:18 PM, October 26, 2007, Blogger தென்றல் said...

//இவர் யார் ஒரு கட்சியில் என்ன நடக்க வேண்டும் என்று கருத்து சொல்ல, இவர் குறைந்த பட்சம் அக்கட்சி உறுப்பினரா? சரி வாக்களிக்கும் வாக்காளன் என்றால், பிடிக்கவில்லை எனில் வாக்களிக்காமல் போக வேண்டியது தானே. கட்சியின் தலைமைய மாற்ற சொல்வது ஏன், அதிலும் மிக பெரிய முட்டாள் தனம் ஸ்டாலினுக்கு பதவியை தந்து விட்டு விலக வேண்டுமாம். //

கட்சியில் அல்ல வவ்வால்.... ஆட்சியில்!

"இவர் யார் என்ன நடக்க வேண்டும்சொல்ல" ... ஏன் நீங்களும் நானும் ஒரு பொது ஜனமாக நம் கருத்தை சொல்லும்பொழுது அவருக்கும் அதே நியதிதானே.

ஞாநி வாரிசு அரசியல் ஆதரவாக ஏதும் கூறவில்லையே! நடந்ததை... நடக்கபோவதை கூறினார்.. தயாநிதி மாறன், கனிமொழி போன்றவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதை சொல்வதற்கு "அரச பரம்பரையில் ராஜ குரு " எல்லாம் தேவையில்லை... ஒரு சாதரண பொது ஜனத்துக்கே தெரிந்த உண்மை.

முன்னாள் ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மா, வாஜ்பாயி(, சோ)..... இவர்களைப்பற்றிலாம் கேள்விகேட்காதலால் இதுவும் கேட்கக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம் எனபது தெரியவில்லை.
நீங்கள் குறிப்பிட்ட விகடன், (துக்ளக், முரசொலி, தினகரன், The Hindu) லாம் சரியான உதாரணமாக தெரியவில்லை... அதலாம் அவர்களுடைய குடும்ப பத்திரிக்கை. விருப்பமில்லையென்றால் வாங்காதீர்கள். அதனால் பொது மக்களுக்கு ஏதும் பாதிப்பு இல்லை.

//ஆனால் கலைஞரது இந்த ஒவ்வொரு முனைப்புக்கும் முட்டுக்கட்டை போடும் பார்ப்பனிய சக்திகளின் சூழ்ச்சிகளின் மேல் கடுங்கோபமும் இருக்கின்றது. இதற்காக அவர்கள் மத்திய அரசு இயந்திரம், உச்ச நீதிமன்றம், ஊடகங்கள், மதநம்பிக்கை என எல்லாவிதமான ஆயுதங்களையும் அவர்கள் கலைஞருக்கு எதிராகப் பயன்படுத்தி வருகிறார்கள். காஞ்சி ஜெயேந்திரர், சோ இராமசாமி, சுப்பிரமணியசாமி, வெங்கடராமன், எம்.கே.நாராயணன், இராம், இராமன் போன்ற பல்வடிவ பார்ப்பனிய தீயசக்திகள் திரை மறைவில் கொடுக்கும் சாமர்த்திய தொல்லைகளும் ஏராளம்.//

மேலே குறிப்பிட்ட சுடலைமான் கருத்தும் நியாயமானதே... ஆனால், இதற்கு ஏன் (வருங்கால முதல்வர்) ஸ்டாலின் 'மூலம்' பதில் சொல்லவில்லை ? அவருடைய நிலைப்பாடும், கருத்தும் பொது ஜனமான நமக்கு தெரிய ஒரு வாய்ப்பாக இருந்திருக்குமே!!

ஞாநி சொன்ன 'நேரம்/சூழ்நிலை' தவறானதாக இருக்கலாம். ஆனால் அவருடைய கருத்துக்கு வந்த எதிர்வினையும், கண்டனக்கூட்டத்தில் பலரும் 'சாதிய ரீதியில்' பேசியதும்தான் வியப்பளிக்கிறது.

 
At 11:14 PM, October 26, 2007, Blogger gnani said...

‘‘ஆண் பெண் சமத்துவ நிலைகளை வெறுமனே எழுத்தில் வடித்துக்கொட்டிவிட்டுத் தான் எழுத்துக்குத் தன் வாழ்வைத் தியாகம் செய்திருக்கக் குடும்பத்தைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட தியாகச்செம்மல் என் மனைவியே என்று சான்றிதழ்கள் தரும் வாய்ச்சொல் வீர எழுத்தாளர்களில் ஒருவராய் இன்றித் தான் பங்குபெற்ற பத்திரிக்கையில் தன் மனைவியையும் பங்குபெற வைத்தவர். பெண்கள் பிரச்சினைகள் குறித்து ஞாநியின் மனைவி எழுதிவந்த தொடரும், ஞாநியும், அவர் மனைவியும் மேற்கொண்ட வாழ்க்கை முறையும் அவர்களின் எழுத்துக்கும் வாழ்க்கைக்குமான ஒற்றுமைக்குச் சாட்சி.’’

செல்வநாயகி அவர்களுக்கு. மேற்கண்ட தங்கள் குறிப்பு தொடர்பாக சில தகவல்பிழைகளை தெளிவுபடுத்தவே இந்தக் கடிதம். நானும் எழுத்தாளர் ‘மா’ என்கிற பத்மாவும் 1982ல் முதன்முதலில் தீம்தரிகிட வெளியான் சந்தர்ப்பத்தில் காதலிக்கத் தொடங்கி 1983ல் திருமணம் செய்துகொண்டபோதே, கணவன் மனைவி என்ற திருமண உறவு எங்கள் நட்புக்குக் குறுக்கே வருமானால், மண உறவை முறித்துவிட்டு எங்கள் நட்பைத்தொடர்வதே முதன்மையானது என்ற புரிதலுடன் எங்களை கணவன் மனைவியாக ஒரு பொது நிகழ்ச்சியில் அறிவித்துக் கொண்டோம். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு எங்கள் மண உறவை முறித்துக் கொண்டதை பின்னர் ஒரு பொது நிகழ்ச்சியில் அறிவித்தோம். தொடர்ந்து நல்ல இனிய நண்பர்களாகத் தனித்தனியே வாழ்ந்து வருகிறோம். நீங்கள் குறிப்பிடும் தீம்தரிகிட கட்டுரைகளை ‘மா’ எழுதிய காலத்திலும் இன்றும் அவர் என் சிநேகிதி. தங்கள் பதிவுக் கருத்துக்களுக்கு நன்றி. ஞாநி

 
At 3:06 PM, October 27, 2007, Blogger செல்வநாயகி said...

///ஆதரிக்கும் அரசியல் வெறுப்பியல் தன்மையை அடையும் போது (தீவிரமான தொனியில்) வாயை திறப்பதுவே, நமது அறிவு நேர்மைக்கு முக்கிய உதாரணமாக நான் நினைத்து வருகிறேன்////


முக்கியமான வரிகள் ரோசாவசந்த். இதன் நீட்சியாக நான் வேறுசில விசயங்களுக்கும் இதைப் பொருத்திப் பார்த்துக்கொண்டேன்.

அவ்வகையில் சாதீய எழுத்துக்களின் தீவிர எதிர்ப்பாளர்களாக நான் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து இணையத்தில் அறிந்து வந்திருக்கிற நீங்கள், சங்கரபாண்டி, சுந்தரமூர்த்தி போன்றோர் தெரிவிக்கும் ஞாநி தாக்குதல் மேலான கண்டனங்கள் எனக்கு மகிழ்ச்சியும்கூட.

இருந்தாலும் சங்கரபாண்டி முன்வைக்கும் "காயம்பட்ட சமூக உளவியல்" எனும் கருத்தாக்கத்தின் மீதான தொடர் எண்ணங்கள் எனக்கு மாறுபட்டகோணங்களில் உண்டு. பிறிதொரு சமயத்தில் சொல்ல முயல்வேன்.

தென்றல்,
நன்றி நீங்கள் வவ்வாலின் கருத்துக்களுக்குத் தெரிவித்திருக்கும் மறுப்புக்கு.

தனசேகர்,
///உங்களின் பேச்சு/பதிவு அவள் விகடனில் வந்ததற்கு ... நம்ம ஊருக்கு பெருமைங்க :)///

ஒரு இடைவெளிக்குப்பிறகு உங்களை மீண்டும் இங்கு சந்திக்கிறேன். எப்போதும்போலான உங்கள் அன்புக்கு நன்றி. ஆனால் நீங்கள் சொல்லுமளவெல்லாம் இதைப் பெரிதாகக் கருதத் தேவையில்லை. ஒரு சாதாரண நிகழ்வே:)) நம்மிலும் பெரியோர் (செயல்களில், சிந்தனைகளில்) உலகில் எங்கெங்கோ எதையாவது செய்தவண்ணம் உள்ளார்கள் மௌனமாகவும், மற்றவருக்காகவும்.

சுந்தரமூர்த்தி,
///I am bit amuzed that you have named your blog "நிறங்கள்" with a subtitle "வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !" but the template and text are entirely in black, white, and gray. :-). ////

ஆமாம். இது வேறுசில நண்பர்களும் சுட்டிக்காட்டினார்கள். இன்னும்சில நலம் விரும்பிகள் சில நல்ல டெம்பளேட்டுகளை அனுப்பி மாற்றவும் சொன்னார்கள். என் சோம்பேறித்தனம் கருப்பு, வெள்ளை, சாம்பலில் நின்றபடியே வாழ்வின் நிறங்களைத் தரிசித்துக்கொண்டிருக்கிறது:))

 
At 3:21 PM, October 27, 2007, Blogger செல்வநாயகி said...

வணக்கம் ஞாநி.

நீங்களும், எழுத்தாளர் மாவும் தனித்தனியாக வாழ எடுத்துக்கொண்ட புரிதல்களைச் சற்று அறிந்திருந்தேன். ஆனால் இவ்வளவு விவரமாக அறிந்திருக்கவில்லை. எனவே தகவல் பிழைகளும், நான் அவ்விடத்தில் பாவித்திருக்கிற சில சொற்களில் சில பிழைகளும் நேர்ந்திருக்கலாம். வந்து சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

 
At 1:53 AM, October 28, 2007, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

I appreciate youir views expressed in this blog post.

If you look at the root of the views expressed in the meeting you will find it in Periyar. A.Marxs and Arivumathis are repeating the same in different words and different contexts. Only the persons who are attacked vary and for them it is a stick to beat persons they want to target irrespective of their ideologies.Perhaps what Gnani wrote gave them an excuse to extend that attack to Gnani as well. By this they proved their loyalty to Karunanidhi and also used the time tested tool gifted by
Periyar. For all these so called rationalists and leftists as long you agree with them it is fine. When you disagree your caste matters most, not your views.
This tendency can be found in blogs as well. I wont be surprised if in another context those who support/defend Gnani in blogs resort to the same discourse used by A.Marx and others.

Gnani can be criticised for his views but what has been put forth
in the meeting is not criticism.
It is an expression of hatred against a person invoking the caste
in which he is born. You will find the same in the interview of Adahavan Theecthaniya in Keetru.
Nagarjunan and Gnanai are criticised because criticising them on the basis of their caste is easy and fashionable today.
So for me this meeting is a part of a larger problem.

 
At 6:19 PM, October 28, 2007, Blogger நந்தகுமார் பழனிசாமி said...

///// "When you disagree your caste matters most, not your views."///// என்பது ஞாநி விசயத்தில் பொருந்தி வருவதாக இருப்பதால், அதை ஒட்டி

////"If you look at the root of the views expressed in the meeting you will find it in Periyar."////
என்று பெரியாரில் ஆரம்பித்து ,

////"Perhaps what Gnani wrote gave them an excuse to extend that attack to Gnani as well. By this they proved their loyalty to Karunanidhi and also used the time tested tool gifted by Periyar."/////

என்று பெரியாரில் முடித்திருப்பது எனக்கு, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் ஒரு முயற்சியாகத் தெரிகிறது. கருணாநிதி, அவரது குடும்பம் மற்றும் கனிமொழி மீதான ஞாநியின் பார்வைகளும், விமர்சனங்களும் தான் அவர் மீது சமீக காலமாக வரும் தாக்குதலுக்கு அடிப்படை. இது அதிகார அரசியல் சார்ந்ததாகவும், திமுகவின் சனநாயகமற்ற தன்மையை ஞாநி நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளிப்படுத்துவது சகியாமல், அவரைத்தாக்குவதற்குச் சாதியைப் பயன்படுத்தும் திமுக ஆதரவாளர்களின் மலிவான உத்தியாகவும் இருக்கிறது. இதற்குள் பெரியாரை இழுத்து வந்து திணிப்பது அந்த மலிவான உத்திக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல.

////I wont be surprised if in another context those who support/defend Gnani in blogs resort to the same discourse used by A.Marx and others.////

ஞாநி என்கிற சாதி மறுப்பாளருக்குக் கொடுக்கப் படும் தார்மீக ஆதரவை, பின்னாளில் கொச்சைப் படுத்தி, பயன்படுத்திக் கொள்ள வசதியாக
எழுதப்படுகின்ற அறிவுசீவித்தனம் இது. ஞாநிமீது தொடுக்கப்படும் தாக்குதலை எதிர்ப்பவர்கள், பார்ப்பனீயக் கருத்தாக்கங்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களையும் எதிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா ரவி? அதற்கான வாய்ப்பு இணையத்தில் இல்லை.

 
At 7:47 PM, October 28, 2007, Blogger மு. சுந்தரமூர்த்தி said...

//You will find the same in the interview of Adahavan Theecthaniya in Keetru.
Nagarjunan and Gnanai are criticised because criticising them on the basis of their caste//.

Ravi,
You are clubbing two different issues here either intentionally or otherwise. Adhavan's response was to drive home the point on accumulated advantage vs. disadvantage by contrasting examples. While Nagarajunan is able to claim and feel proud of the ancestory his family that is educated, the descendants of Moovalur Ramamirdhathammal think their ancestory is not something to be proud of and feel it necessary to erase it.

I cannot believe that you can twist this very clearly made point of Adhavan as a criticism of Nagarjunan based on his caste.

I urge others to read the interview in www.keetru.com and decide for themselves instead of taking Ravi's interpretation at its face value. Unfortunately, www.keetru.com site is erratic these days and I cannot provide the specific link to the interview.

 
At 9:35 PM, October 28, 2007, Blogger செல்வநாயகி said...

ரவிஸ்ரீனிவாஸ்,

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. ஆனால் இதை நீங்கள் "பெரியார்" கருத்தியலோடு முடிச்சுப்போட்டுப் பார்ப்பது தேவையில்லாதது. ஒரு கருத்தியலைக் கடைப்பிடிப்பதாகச் சொல்லும் தனிமனிதர்களின் தவறுகளுக்கும், ஒரு கருத்தியலே தவறென்று சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. பெரியார் கருத்தியல் என்பது இங்கு பலர் சொல்வதுபோல் ஒரே குறியீடாகக் கலைஞரைக் கொண்டது எனவோ, கலைஞர் ஆதரவைச் சார்ந்தது எனவோ நான் நினைப்பதில்லை. அப்படிப்பார்த்தால் மேற்குறிப்பிட்டவர்களேகூட எவ்வகை ஆதிக்கங்களை எங்கு எதிர்க்கிறார்கள்? எந்தெந்த இடங்களில் கண்டும்காணாமல் இருக்கிறார்கள் என்று அவர்களின் செயல்களை ஆழ்ந்து நோக்கினால் அங்கெல்லாம் பெரியார் பற்றைவிட தத்தமது சொந்த அரசியல்கள் ஒட்டிக்கொண்டிருப்பதும் தெரியும்.

இப்படியிருக்க உங்களைப் போன்றவர்கள்(ளும்) பெரியாரை இத்தாக்குதல்களோடு முடிச்சிட்டு எழுதுவதன் மூலம் "பெரியார் இப்படிக் குறிப்பிட்ட சாதிக்காரனை அழிப்பதைத்தான் தன் வேலையாகச் செய்தாரன்றி வேறென்ன செய்தார்?" என்று தன் சுயசாதி சார்பில் கேட்டு அவரின் அத்தனை பங்களிப்புகளையும் அலட்சியப்படுத்திவிடமுடியும் என நினைப்போரின் அவலமான போக்கிற்கே வலுசேர்ப்பதாய் அமைகிறது.

ஆதவன் தீட்சன்யாவின் "கீற்று" செவ்வியை வேறு இதனோடு ஒப்பிட்டிருக்கிறீர்கள். நான் இதற்கு முந்தைய இடுகையிலே அச்செவ்வியின் சில பகுதிகளை எடுத்துப்போட்டேன். அதில் நீங்கள் சொல்லும் நாகர்ஜுனன் மீதான ஆதவனின் விமர்சனத்தையும் எடுத்துப்போடவே நினைத்தேன். நீளம் கருதிச் செய்யவில்லை. ஆனால் நாகார்ஜுனனின் தீராநதிச் செவ்வியைப் படித்துவிட்டு ஆதவனின் விமர்சனமும் படித்தால் ஆதவனின் விமர்சனம் 100 சதவீதம் சரியானது என்றே தோன்றுகிறது.

"என் குடும்பம் அக்காலத்திலேயே கல்விக்கடலாக விளங்கியது, எனவே அந்தக்கடலில் அவதரித்த எனக்கும் அறிவுக்கண்கள் அகலத்திறந்தது ஆச்சரியமில்லை, அப்படித் திறக்காது போயிருந்தால்தான் ஆச்சரியம்" என்று தன் பாரம்பரியம் பற்றிச் சொல்கிறார் நாகார்ஜுனன்.

இப்படி அறிவைக் கரைத்துக்குடிப்பதற்கு ஒரு சாதி, மற்றவர்களுக்கு மலம் அள்ளுவதற்கு ஒருசாதி எனப் பிரிக்கப்பட்டது நம் அயோக்கிய சமூகம்.

"அந்த நாகார்ஜுனன்களின் பாரம்பரிய அடிப்படைகூட ஒரு சாதிக்கு அமைந்திருந்த சௌகரியங்களைச் சொல்கிறது, அப்படி அமையாதுபோன அவமானங்களைச் சொல்லக்கூட முடியாமல் இன்னொரு பகுதியும் சமூகத்தில் இருக்கிறது (ராமாமிர்தம் அம்மையார் பற்றிய நூலின்மீதான குறிப்புகள்)" என்று ஒரு நியாயமான விமர்சனத்தை ஆதவன் தீட்சண்யாக்கள் வைப்பதைக்கூட உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது போவது ஏனோ?

நாகார்ஜுனன் போன்றோருக்கு வாய்த்த வசதியெதுவும் வாய்க்காத இடத்திலிருந்து போராடி வந்திருந்தாலும் ஆதவன் தீட்சண்யா நாகார்ஜுனனைவிடவும் தெளிவாகப் பேசுகிறார் என்பதே என் கருத்து. மொழியளவில்கூட இதை உணரமுடிந்தது எனக்கு:))

மேலும் ஆதவனின் சமீபத்திய செவ்வி மட்டுமின்றி இதற்கு முந்திய செவ்வி ஒன்றும் கீற்றிலேயே இருக்கும். தேடிப்படித்துப் பாருங்கள் ரவி. அதில் அவர் முன்வைத்திருக்கும் கருத்துக்களை அறியவரும்போது அவர்மீதான உங்களின் குறை மதிப்பீடு மாறலாம் .


//// For all these so called rationalists and leftists as long you agree with them it is fine. When you disagree your caste matters most, not your views.
This tendency can be found in blogs as well./////
ரவி, பதிவுலகின் அரசியலை நீங்கள் ஒரு பக்கச்சார்போடு மட்டும் பார்க்க வேண்டியதில்லை. சாதியெதிர்ப்போ, சாதியாதரவோ, இல்லை வேறெந்த ஆதரவோ, எதிர்ப்போ இங்கு பலநேரங்களில் தேவைப்படுவது 'ஆமாஞ்சாமிகளே'. அப்படியில்லாது போகிறவர்களுக்கு அங்கங்கிருந்து அம்புகள் வந்தே தீரும். அம்புகளின் நிறங்கள்தான் வேறே தவிர அடிப்படை ஒன்றுதான். இதில் எல்லா அரசியல்களையும், அம்புகளையும் ஒரேமாதிரி அலசும் மனநிலை வாய்க்கிற நாளில், அப்படி மனநிலை வாய்க்கிறவர்கள் விரிவாகப் பேசலாம்:)) நன்றி.

 
At 8:41 AM, October 29, 2007, Blogger Bala said...

செல்வநாயகி , பதிவுக்கு பாராட்டுகள் ...
சாதிய எதிர்பாளர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் திராவிட கட்சிகளை
சேர்ந்தவர்கள் ஞாநியை ஏன் சாதியின் பெயரில் எதிர்க்க வேண்டும்?
இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சமுகத்தை எதிர்பதுதான் சாதிய எதிர்ப்பு .
ஒரு எழுத்தாளன் மாநிலத்தின் முதல்வர் பற்றிய தன் கருத்துக்களை மக்கள் முன்பு வைக்கும் பொழுது மக்கள் போராட்டம் நடத்தலாம் கண்டனம் தெரிவிக்கலாம் ஆனால் இங்கே அவரின் மகள் நடத்தி இருக்கிறார்.

 
At 10:18 AM, October 29, 2007, Blogger லக்ஷ்மி said...

செல்வநாயகி, தொடர்ந்து தங்களது எழுத்துக்கள் எதன் மீதும் சார்பின்றி உச்சபட்ச நேர்மையோடு வெளிவருவதில் மிக்க மகிழ்ச்சி. இந்த இடத்தில் ஞானியின் சார்பின்மைக்கு இன்னொரு உதாரணத்தையும் காட்ட விரும்புகிறேன் - கார்கில் போரின் போது ஒட்டுமொத்தம் ஊடகங்களும் தேசப்பற்று ஜூரத்தில் அனத்தியபடியிருக்க, ஞானி காஷ்மீர் மண்ணுக்குச் சென்று அங்கே வாழும் மக்களிடம் பேட்டி கண்டு எடுத்து வந்தார் - பாகிஸ்தான், இந்தியா இரு நாடுகளுக்கும் எங்கள் மண்ணின் மீது உரிமையில்லை. இருதேசத்துப் படைகளும் உடனடியாக எங்கள் மண்ணை விட்டு வெளியேறட்டும் என்று யாசின் மாலிக் (என்று நினைக்கிறேன், கருத்துச் சொன்னவரது பெயரும் அவர் இயக்கத்தின் பெயரும் நினைவில்லை) சொன்னதை இதே விகடனில் பிரசுரித்தவர்தான் ஞானி. அதற்கான மரியாதைகளையும் இந்துத்துவ இயக்கங்களிடமிருந்து பெற்றவர். அப்போதும் விகடன் இப்போது போலவே அவரைக் கை கழுவிதான் விட்டது. பேட்டியின் இன்னொரு பகுதி அடுத்த இதழில் வருமென்று அறிவிக்கப் பட்டிருக்க, விகடன் அதை நிறுத்தியது. அப்போது ஞானியின் சட்டைக்குள்ளிருந்த பூணுல் யார் கண்ணிலும் படவில்லை போலிருக்கிறது.

என்ன செய்வது, நமக்குப் பிடித்தவிதத்தில் பேசும் வரை மட்டுமே ஒருவரை நமக்கும் பிடிக்கிறது. பிடித்த விதத்திலென்பதை விடவும் தேவையான விதத்தில் என்று சொல்வதே பொருந்தும் என நினைக்கிறேன்.

 
At 10:35 AM, October 29, 2007, Blogger Osai Chella said...

ha ha.. good article... but... you have all the right to plant (say) one thousand trees but u dont have any right to CUT a single (public)tree! Same with Gnani.. that one article really showed his crooked mind and written in a bad taste , and decorated with cheap graphic images! May be gnaani has become too OLD to write on a refreshing subject than someone's age!

 
At 10:56 AM, October 29, 2007, Blogger selventhiran said...

செல்வநாயகி அவர்களுக்கு,
ஞாநியின் கட்டுரை தொடர்பாக இணையத்தில் அவரவர் தகுதிக்கும் புரிதல்களுக்கும் ஏற்ப விதவிதமான பதிவுகள் நாளுக்கு நாள் வந்துகொண்டிருக்கின்றன. அவையனைத்திலும் சிறந்ததாயும், நேர்மையாகவும் இருக்கிறது தங்கள் பதிவு.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்

 
At 2:48 AM, November 04, 2007, Blogger நாகார்ஜுனன் said...

Dear Selvanayaki, Sundaramoorthy, Ravi Srinivas and other friends,

I've just been reading all your blog comments. And I am not fully updated on the controversy surrounding Jnani's article and the Chennai October meeting where he has been criticised.

Jnani, Ravi and almost all the persons who spoke at the Chennai meeting have been my close friends and associates at one time or another and now too. Yet, I continue to have serious differences with them over several issues and contexts. And I have a feeling that this will be one of them.

Since my name and Theeranadhi interview are being cited here, I have to urge all those interested to read my interview fully, especially those parts which Dheetchanya's interview conveniently and simplistically leaves out; also those parts on the limitations of identity-politics.

I have made it amply clear (in Tamil itself) that the excess of identity (one's own and others') is a continuous process which makes us human and more than human.

The Keetru website has been kind enough to publish my feedback below Dheetchanya's interview. I request you to read my comments there as well.

Thanks.
Nagarjunan
London

 
At 5:19 PM, November 04, 2007, Blogger வவ்வால் said...

தென்றல்,

கட்சியில் என்பது ஆட்சியில் என்று தான் வந்து இருக்க வேண்டும், சரி ஆட்சியில் வாரிசு முறையில் வருவது சரியா? அது தான் எனது கேள்வி.

//ஞாநி வாரிசு அரசியல் ஆதரவாக ஏதும் கூறவில்லையே! நடந்ததை... நடக்கபோவதை கூறினார்.. தயாநிதி மாறன், கனிமொழி போன்றவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.//

முன்னர் ஒரு தவறு நடந்தது , எனவே இப்போதும் அத்தவறு நடக்க பரிந்துரைப்பது போல இருக்கு ஞானியின் பேச்சு.

ஏன் தி.மு.கவில் வேறு யாருக்கும் அடுத்த தலைவராக, முதல்வராக வர தகுதி இல்லையா? அப்படி வர வேண்டும் என்று ஒரு வார்த்தை கூட இவர் உதிர்க்காத போது அது வாரிசு அரசியலை வரவேற்பது தானே!

ஒரு பத்திரிக்கையாளராக பாமர பொது ஜனம் போலவே கருத்து சொல்வாரா,ஒரு சில அமைச்சர்கள் கோயிலில் தீ மிதிப்பது, அலகு குத்துவது ,மண் சோறு சாப்பிடுவது என்று செய்து தலைமையை மகிழ்வித்தார்கள் எனவே அப்படி செய்வது அமைச்சர்களின் இலக்கணம் என்று சொல்வாரா?

சொல்வதற்கு ராஜ குருவாக இருக்க வேண்டாம் எனில் , இவரும் ஒரு பத்திரிக்கையாளராக இருக்க வேண்டாம், தெரு முக்கு டீக்கடையில் டீக்குடித்த படியே பேசிவிட்டு போகலாம். எழுதும் கட்டுரைக்கு சன்மானம் வாங்கிக்கொண்டு எழுதும் தொழில்முறை பத்திரிக்கையாளர் என்பதால் இதனை ஒரு பொது ஜனக்கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது.

என்னைக்கேட்டால் இது ஒரு திட்டமிட்ட நாடகமாக கூட இருக்கலாம், கலைஞருக்கு பின்னர் ஸ்டாலின் வரலாமா என்பதை அறிய ஒரு நடுநிலை ஊடகத்தின் வாயிலாக பிரச்சினையை கிளப்பி எதிர் விளைவு என்னவென்று கலைஞரே , ஞானி துணையுடன் ஆழம் பார்த்திருக்கலாம்.

அல்லது தினகரனில் முன்னர் எப்படி ஸ்டாலினுக்கு அடுத்த முதல்வராக வர வாய்ப்பு என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டு மதுரைக்கார அண்ணாச்சியின் கோபத்தை தூண்டினார்களோ அது போல இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

யோசித்து பாருங்கள் ,விகடனில் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வராக வரனும்னு எழுதிய கட்டுரைக்கு எதுவும் சொல்லாம கலைஞர் இருக்கார்னா உங்க நிலைமை என்ன ஆகும்னு நாளு பேர் அழகிரியிடம் சொல்ல ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று(மதுரையில் விகடன் அலுவலகம் இல்லை இருந்திருந்தால் தினகரன் கதி தான்)

தி.மு.க வின் சார்பில் கண்டனக்கூட்டம் எல்லாம் நடத்தக்காரணமே இதை கண்டுக்காமல் விட்டு விட்டால் இரண்டு மகன்களிடையே கருத்து வேறுபாடு வரக்கூடும் என்ற காரணமும் மறைந்திருக்கிறது.

கண்டிப்பாக விகடன் கட்டுரை ஆழம் பார்க்கும் நோக்கில் வந்த ஒன்று , யார் இதன் சூத்திரதாரி என்பது தான் மர்மம்.

 
At 6:25 PM, November 06, 2007, Blogger செல்வநாயகி said...

நாகார்ஜுனன்,

உங்கள் பெயர் குறிப்பிடப்பட்டமையைத் தொடர்ந்தமைக்கும், அதற்கான உங்கள் விளக்கத்தைப் பதிவு செய்ய வந்தமைக்கும் நன்றி. நான் இருநாட்களாக வலைப்பதிவுப்பக்கம் வரவியலாததால் இத்தாமதமான பின்னூட்டம் என்னிடமிருந்து, மன்னிக்கவும்.

என் பதிவில் உங்கள் செவ்வியைக் குறிப்பிட்டுப் பேசவேண்டிய சூழலை நண்பர் ரவிஸ்ரீனிவாசின் மறுமொழியே எனக்கு ஏற்படுத்தியது. ஞாநியைக் கலைஞர் பற்றிய கட்டுரைக்காகச் சாதி சொல்லிச் சமீபத்தில் விமர்சித்தவர்களின் அதே வரிசையில் ஆதவன் தீட்சண்யா உங்கள் மேல் வைத்த விமர்சனத்தையும் பொருத்தி 'எல்லோருக்குமே இதே வேலைதான்" என்கிற ரீதியில் எழுதப்பட்டிருந்தது அவரின் மறுமொழி.

ஆனால் உங்களின் செவ்வியையும், ஆதவனின் செவ்வியையும் ஒரேசமயத்தில் வாசித்திருந்த எனக்கு என் வாசகப் புரிதலில் ஆதவன் முன்வைத்த கோணம், சொன்ன செய்திகள் வேறு.

ராமாமிர்தம் அம்மையாரின் வாரிசுகள் தம் முன்னோர் பற்றிய குறிப்புகள் வெளியிடப்படுதலை விரும்பாமையையும், அந்த விருப்பமின்மையின் பின்னான சாதி, சமூகச் சூழலையும் உங்களால் சொல்லமுடிந்த உங்களின் முன்னோர் பெற்றிருந்த அறிவு, கலைத் திறமைகளையும் அதற்கு வாய்ப்பாக அமைக்கப்பட்ட சமூகத்தின் சாதியடுக்கையும் ஒப்பிட்டு எழுதியிருந்தார் ஆதவன்.

பூப்பதற்கும், காய்ப்பதற்கும் ஏதுவான உச்சிகளில் இயல்பிலேயே இருக்கமுடிந்தவர்கள் தங்களைத் தாங்கிய கிளைகளைச் சிலாகித்துச் சொல்ல இயலுவதற்கும், யாருக்கும் தெரியாமல் மண்ணுக்கடியில் வேராய் மட்டுமே இருந்து அதன் வேதனைகளையும் வெளிச்சொல்ல இயலாது இன்னொரு பிரிவு அதே சமூகத்தில் வாழப் பணிக்கப்பட்டதையும் ஒப்பிட்டதாகவே நான் ஆதவனின் விமர்சனத்தை இப்போதும் புரிந்துகொள்கிறேன்.

அதுமட்டுமல்ல. "பார்ப்பனீயத்தை எதிர்ப்பது என்பது பார்ப்பனர்கள் எல்லோரையும் அவர்களின் பிறப்பைக் காரணமாக வைத்தே எதிர்ப்பதல்ல. சிறந்ததொரு சமூகப்பங்களிப்புச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குரிய அங்கீகாரம் கொடுக்கப்படவேண்டுமென்றும், சீனிவாச அய்யங்கார் போன்றவர்கள் இயக்கங்களில் ஆற்றிய பணி புறக்கணிக்கப்படமுடியாதவை" என்றும் (முன்பொரு செவ்வியில்) சொல்லும் ஆதவன் தீட்சன்யா போன்றவர்களையும் அவர் இப்போது வைத்திருக்கும் ஒரு ஒப்பீட்டு விமர்சனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு "அவரெல்லாம் இப்படிப் பார்ப்பனர்களைத் திட்டுவதையே வேலையாகச் செய்பவர்தான்" என்ற தவறான பார்வையை ரவிஸ்ரீனிவாஸ் இங்கே வைத்ததும் மறுப்புக்குரியதென்பதால் என் எண்ணத்தை உங்கள் பெயர் சுட்டி எழுதினேன்.

சாதியின் தோள்மீது நின்றுதான் நாகார்ஜுனனும் பேசிக்கொண்டிருக்கிறார் என்று ஆதவன் சொன்னதற்கும், தன் சாதிப்புத்தியால்தான் ஞாநி கலைஞரை இப்படி விமர்சித்துவிட்டார் என்று மற்றவர்கள் சொல்வதற்கும் முடிச்சிட்டுப் பார்க்க என்னால் இயலவில்லை. மிகப்பெரும் வேறுபாட்டையும் உணரமுடிகிறது.

மற்றபடி உங்கள் செவ்வியை நான் மூன்றுமுறை படித்தேன்:)) உங்கள் இயங்குதளங்கள், குறிப்பாக இந்தியாவின் அணுசக்திக்கான முதலீடு, அதன்மீதான உங்கள் விமர்சனம், அத்துறையிலிருந்து நீங்கள் விலகியதன் பின்னான காரணங்கள், உங்கள் போராட்டங்கள் என்று பல பார்வைகளை வழங்கியது அச்செவ்வி. . அதேசமயம் இடதுசாரி இயக்கங்களிலும் மேல்மட்டத்தில் முன்வைக்கப்படும் அறிவுச்செறிவான விடயங்கள் கீழே வரவர இறுகிப்போய்விடுகின்றன என்ற உங்கள் குற்றச்சாட்டும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பெரிதாக என்ன செய்கிறது என்கிற உங்களின் பார்வையும் எனக்கு வேறுசில கேள்விகளை ஏற்படுத்தியது. மேற்குறிப்பிட்ட இயக்கங்களிலேயே நீங்கள் சொல்லும் கீழ்மட்டத்தின் போராட்டங்களையும், மக்களைச் சந்திக்கும்போது அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைக¨ளையும் அவற்றைக் களத்திலே நின்று செய்கிறவர்கள் முன்வைக்கும்போது அக்கேள்விகளுக்கான விடைகளைப் பெறமுடியுமாயிருக்கும்.

 
At 7:12 PM, November 06, 2007, Blogger anbuselvaraj said...

Though I have reservations on Gnani.Hats of Selvanayaki.

 
At 11:45 PM, November 06, 2007, Blogger -/சுடலை மாடன்/- said...

செல்வநாயகி,

நாகார்ஜுனனின் நேர்காணலை நாராயணனின் பதிவில் படித்த உடனே ஒரு பின்னூட்டம் எழுத ஆரம்பித்து நேரமில்லாமல் விட்டு விட்டேன்.

அவர் சொல்லியிருந்த கூடங்குளம் அணுசக்தித் திட்ட எதிர்ப்பியக்கம் என்பது எந்தவொரு வெற்றியையும் அளிக்காமல் தோல்வியில் கலைந்து போன ஒரு அறிவுஜீவி இயக்கம் என்று தான் நான் புரிந்து கொண்டது. அந்த இயக்கத்தின் பெரும்பாலான கூட்டங்களில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன் என்ற அடிப்படையில் அதைச் சொல்ல விரும்பினேன்.

நான் இன்னும் ஆதவன் தீட்சண்யாவின் கட்டுரையைப் படிக்கவில்லை. அதையும் படித்து விட்டு வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

நீங்கள் இரவி ஸ்ரீனிவாசுக்கும், நாகார்ஜுனனுக்கும் கொடுத்த அருமையான பதில் உங்கள் சிந்தனையை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கிறது என்று மட்டும் இப்பொழுது சொல்லிக் கொள்கிறேன்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

 
At 12:33 AM, November 08, 2007, Blogger நாகார்ஜுனன் said...

அன்புள்ள செல்வநாயகி

செவ்வியைப் மீண்டும் படித்ததற்கும் பதில் எழுதியதற்கும் நன்றி.

தீட்சண்யாவின் செவ்விகளுக்கு விளக்கமளித்திருக்கிறீர்கள். நன்றி. அதேவேளை தீட்சண்யாவின் செவ்விக்குக்கீழே என் கடிதம் இருக்கிறது. அதைப் படித்தீர்களா என்ற தெளிவு கிடைக்கவில்லை.

"என்னால்" சொல்ல முடிந்த அளவுக்கு "அவர்களால்" சொல்ல முடிவதில்லை என்ற நிலை தொடர்வதில் வருத்தமும் கோபமும் எய்தியவன் நான். இந்த இரண்டாவது நானின் உருவாக்கத்தின் அடிப்படை அறம் இதுவும் இதுபோன்ற இன்னபிறவும் - என் வாழ்க்கையில், அந்தச் செவ்வியில், ஊடுபாவாக இருக்கின்றன. அதற்கான சான்றுகள் பலவும் உண்டு. இதைத்தான் அவர் வேண்டுமென்றே காண மறுக்கிறார்.

செவ்வியிலிருந்து தீட்சண்யா எந்தெந்த வாக்கியங்களை மாத்திரம் எடுக்கிறார், எதையெல்லாம் விடுகிறார், "என்னை"ப்பற்றி சாராம்சப்படுத்தி எந்த முடிவுக்கு வருகிறார் என்று தெளிவாகச் சுட்டியிருக்கிறேன். அதை நீங்கள் காணவில்லையா தெரியவில்லை.

தன்னிலை உருவாக்கத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிற இப்போக்கு, நிலவும் பொதுப்புத்திக்கேற்ற ஒரு எளிமைப்படுத்தலாகும் – இது ஒருசில குறிப்பிட்ட நோக்கங்களுக்குப் பயன்படலாம் என்பதையும் கூறுகிறேன். படியுங்கள்.


அன்புடன்
நாகார்ஜுனன்

 
At 12:47 AM, November 08, 2007, Blogger நாகார்ஜுனன் said...

ஏற்கனவே அனுப்பியதில் ஒரு எழுத்துப்பிழை இருப்பதால் இதை வாசியுங்கள். நன்றி.


அன்புள்ள செல்வநாயகி

செவ்வியை மீண்டும் படித்ததற்கும் பதில் எழுதியதற்கும் நன்றி.

தீட்சண்யாவின் செவ்விகளுக்கு விளக்கமளித்திருக்கிறீர்கள். நன்றி. அதேவேளை தீட்சண்யாவின் செவ்விக்குக்கீழே என் கடிதம் இருக்கிறது. அதைப் படித்தீர்களா என்ற தெளிவு கிடைக்கவில்லை.

"என்னால்" சொல்ல முடிந்த அளவுக்கு "அவர்களால்" சொல்ல முடிவதில்லை என்ற நிலை தொடர்வதில் வருத்தமும் கோபமும் எய்தியவன் நான். இந்த இரண்டாவது நானின் உருவாக்கத்தின் அடிப்படை அறம் இதுவும் இதுபோன்ற இன்னபிறவும் - என் வாழ்க்கையில், அந்தச் செவ்வியில், ஊடுபாவாக இருக்கின்றன. அதற்கான சான்றுகள் பலவும் உண்டு. இதைத்தான் அவர் வேண்டுமென்றே காண மறுக்கிறார்.

செவ்வியிலிருந்து தீட்சண்யா எந்தெந்த வாக்கியங்களை மாத்திரம் எடுக்கிறார், எதையெல்லாம் விடுகிறார், "என்னை"ப்பற்றி சாராம்சப்படுத்தி எந்த முடிவுக்கு வருகிறார் என்று தெளிவாகச் சுட்டியிருக்கிறேன். அதை நீங்கள் காணவில்லையா தெரியவில்லை.

தன்னிலை உருவாக்கத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிற இப்போக்கு, நிலவும் பொதுப்புத்திக்கேற்ற ஒரு எளிமைப்படுத்தலாகும் – இது ஒருசில குறிப்பிட்ட நோக்கங்களுக்குப் பயன்படலாம் என்பதையும் கூறுகிறேன். படியுங்கள்.


அன்புடன்
நாகார்ஜுனன்

 
At 11:28 PM, November 22, 2007, Blogger தருமி said...

இந்த வார ஆ.வி.யில் உங்கள் பக்கம் வரவேற்பறையில் வந்துள்ளது.
வாழ்த்துக்கள்.

 
At 12:22 AM, November 23, 2007, Blogger பாலராஜன்கீதா said...

இன்று 23 நவம்பர் 2007 வந்துள்ள நவம்பர் 28 2007 தேதியிட்ட ஆனந்தவிகடன் வரவேற்பறை பக்கத்தில் வந்துள்ள செய்தி
= = = = = = = = = = = = = = = = = =
நிறங்கள் www.selvanayaki.blogspot.com

செல்வநாயகியின் வலைப்பூ அமைதியாகச் சலசலக்கும் நீரோடையைப் போன்ற மொழி நடையைக் கொண்டுள்ளது. பெண்ணியம், காதல் கவிதைகள், சினிமா விமர்சனம், அரசியல் அலசல் எனப் பல தளங்களின் பகிர்வுகள். பணி நிமித்தமாகவும் திருமணம் முடிந்தும் அமெரிக்கா செல்லும் பெண்கள் குறித்த கட்டுரை புதியதோர் உலகத்தை அறிமுகம் செய்கின்றன. மாலன், நாகார்ஜுனன், ரவிஸ்ரீனிவாஸ் போன்றவர்கள் பின்னூட்டங்களில் பங்கெடுக்கும்போது அறிவார்த்தமான, ஆக்கபூர்வமான விவாதங்களாக உள்ளன. வழியெங்கும் சிதறிக் கிடக்கும் வாழ்வின் நிறங்களைத் தொடுத்து உருவாக்கிய வலைப்பூ!

= = = = = = = = = = = = = = = = = =

ஆனால் இதில் மாலன், நாகார்ஜுனன், ரவிஸ்ரீனிவாஸ் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பற்றி என்ன எழுதுவது ? ரஜினி ஒரு படத்தில் சொல்வாரே "மாப்பிள்ளை போட்டிருக்கிற சட்டை பற்றி நான் ஒன்றும் சொல்லமாட்டேன்" அதுதான் நினைவிற்கு வருகிறது ;-)

 
At 11:34 AM, November 30, 2007, Blogger jangiri said...

hello..vanakkam.
naanum oru crossbelt.but unga katchi.gnani rasigan.indhavaram a.v. padichingala??? ellaa arasiyalvadhigalum naakka pidungittu saaganum...

 
At 6:13 AM, December 05, 2007, Blogger Karthikeyan G said...

Great!!! Got the recognition in vikatan B'coz of this ...
:))
Really gnani is doing good for u..

 
At 1:00 AM, December 11, 2007, Blogger ✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஞானி அவ்வாறு எப்படி எழுதப் போகும்,அவர் பார்பனராக இருப்பதால் எழுதுகிறார்,அதை விகடன் எப்படி வெளியிடப் போகும் என்றெல்லாம்(விதண்ட)வாதம் செய்யும் அன்பர்களுக்கு,
மு.க.அவர்கள் எவ்வளவு பெரியவரானாலும்,எவ்வளவு சிறந்தவரானாலும்(இதற்கான கருத்துக்களுக்குள் நான் நுழையவில்லை,அதில் என் தீர்மானங்கள் எப்படியிருப்பினும்) ஒரு மாநிலத்திமன் மக்களுக்கு தங்கள் முதல்வர் எப்படி இருக்கிறார்,அவ்விதம் செயல்படுகிறார்,அவர் உடல்நலம் எப்படி இருக்கிறது,அவரின் பணிச்சுமைக்கு ஒத்துழைக்கும் ஆரோக்கியம் அவருக்கு இருக்கிறதா என்பதையெல்லாம் விமர்சிக்கவும்,அத்தகைய விமர்சனங்களை சந்திக்கவும் உரிமைக்கும்,கடமைக்கும் உள்ளானவர்கள்.
தமிழக அரசு ஒன்றும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் போன்ற தனியார் நிறுவனம் அல்ல;இவற்றை விமர்சனம் செய்ததாலேயே'நல்லவேளை,விகடன் அலுவலகம் மதுரையில் இல்லை' என்றெல்லாம் தெரிவிக்கும் கருத்துக்கள்,நாம் வாழும் சமூக,அரசியல் சூழலையே கேள்விக்குறிக்குள்ளாக்குவதோடு,அரசாண்மை(Governance) பற்றிய நம் மக்களின்,படித்த மக்களின் முட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
நாளை திமுக பதவியில் இல்லாத நிலை வரும்போது,முக அவர்கள் இதே நிலையில் முரசொலி அலுவலகத்துக்கோ,கலைஞர் டிவி அலுவலகத்துக்கோ தினமும் சென்று 10 மணி நேரம் உழைத்தால்,அதைப் பற்றி ஞானி கண்டிப்பாக எழுதமாட்டார்,அப்போது எழுதினால் இந்த வன்மையான கண்டனங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையும்,புரிந்துகொள்ளப்பட வேண்டியவையும் !
It's about the healthy practices across the globe,on how a head of state should be,should function etc..
நம் மக்கள்(ஓரளவு படித்தவர்கள் கூட) இவ்வளவு அடிமை மனோபாவ கட்சிஅரசியலில் மூழ்கி இருப்பதுதான் நாட்டின் சாபக்கேடு !

 
At 10:03 AM, December 13, 2007, Anonymous Anonymous said...

அருமையான பதிவு செல்வ நாயகி,

But Gnani again refered karunanidhi in Av ( same issue in your Blog refered ) -
he refered kalanger to compare devagowda instead jayalaitha and devagowda.
I think Gnani is SICK n Un-stable these days
otherwise, அருமையான கருத்து.. அழகாக சொன்னீர்கள்.

your friend
S.Ravi

 
At 10:34 AM, December 17, 2007, Blogger PARANDIMUKKU... said...

மிக அழகான பதிவுகள்...
தனது கட்சிக்காரர்களால் ஒரு நவீன கடவுளாகவே பார்க்கப்படும் கலைஞரைப்பற்றி அவர் ஞானி ஆவதர்க்கு முன்னால் எழுத்தாளர் ஞாநி இப்படி எழுதினால் சீடர்களுக்கு எப்படி கிரகித்துக்கொள்ள முடியும்....

நியாயங்கள் என்பது இம்மண்ணில் அழிந்துவரும் ஒரு பொருளாகிவிட்டது..

நம்மிடம் எழுத்துதான் ஆயுதம்.
அவர்களிடம் எழுத்தை தவிர எல்லா ஆயுதங்களும் இப்போது வந்துவிட்டன..

செல்வ நாயகிக்கும் ஞாநிக்கும் ஒரு சூப்பர் சல்யூட்....

என்றும் பிரியமுடன்..

BARAKA.
parandimukku.blogspot.com

 
At 11:23 PM, December 19, 2007, Blogger Sethu Raman said...

enna aachu oct.24 appuram oru blogm illaiye!!!

 
At 2:50 AM, January 06, 2008, Blogger Jazeela said...

இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டமிது. புத்தாண்டு வாழ்த்துகள். என்ன ஆச்சு உங்களை ரொம்ப நாளா காணோம்? புதிய பெயரில் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா என்ன? அப்படியேதும் இருப்பின் சொல்லுங்க. இம்புட்டு தூரம் வந்து ஏமாற்றமா திரும்பி போறேன் :-(

 
At 11:02 AM, January 06, 2008, Blogger செல்வநாயகி said...

ஜெசிலா,

அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி. சமீபத்தில் மேற்கொண்டிருக்கும் சில புதிய விசயங்களால் எழுத நேரமிருப்பதில்லை. ஆனாலும் சில நாட்களில் சில பதிவுகளைப் படித்துக்கொண்டும், எப்போதாவது பின்னூட்டமிட்டுக் கொண்டும்தான் இருக்கிறேன். நேரம் கிடைக்கையில் மீண்டும் எழுதுவேன், உங்களைப் போன்றவர்களைச் சந்திப்பதற்காகவேனும்.

 
At 3:02 PM, January 07, 2008, Blogger jangiri said...

sorry..belated happy new year.

pudhu padhivu illadhathal reply thara mudiyalai.

 
At 9:14 AM, January 28, 2008, Anonymous Anonymous said...

செல்வநாயகி,
என்ன ஆச்சு உங்களை ரொம்ப நாளா காணோம்?

Everybody waiting to see your Latest writingsssss.

Visiting your site daily but இம்புட்டு தூரம் வந்து ஏமாற்றமா திரும்பி போறேன்

S.Ravi
Kuwait

 
At 9:54 AM, January 28, 2008, Blogger செல்வநாயகி said...

ரவி,

நேரப்பிரச்சினை. விரைவில் வருவேன் என நம்புகிறேன்:)) உங்கள் அன்புக்கு நன்றி.

 
At 3:44 AM, February 18, 2008, Blogger tamilachi said...

hi...........my friend........this is my first mail to you...
do you know....my name MISS.G.SELVANAYAKI.EN PEYARUM UNGAL PEYARUM ORE MATHIRI IRUKUM KARANATHIL VILAINDA AARVATHINAL MATTUMEA INDA VALAITHALATHIRKUL NULAINDEAN.........UNGALAI PATRI KEALVI PATTA POTHELLAM UNGAL PEYARILEYEA NANUM IRUPATHAI NINAITHU MAGHILCHIYUM ADAINTHIRUKIREAN........ANAL IPPOTHU INDA KATTURAIYAI PADHITHA PIRAGU THAN NAN EVVALAVU UNMAYANA NEARMAYANA VIMARSANAM THARUM PAKKATHIRKUL NULAINTHIRUKIREAN ENBATHU PURIKIRATHU..
NANRIGAL..VIKADANIL NAN ANDA KATTURAIYAI PADHITHA PODEA PALA KEALVIGAL ENNUL ELLUNTHANA.AVATRUKANA VIDAI IPPOTHU ENNAKU UNGAL MOOLAM KIDAITHIRUKIRATU..THODARATTUM INDA AROKIYAMANA SOOLAL.....
VALTHUKALUDAN,
MISS.G.SELVANAYAKI

 
At 8:40 AM, February 18, 2008, Blogger செல்வநாயகி said...

G. செல்வநாயகி,

உங்கள் வருகைக்கு நன்றி:))

 
At 8:17 AM, May 23, 2008, Blogger மகேஷ் said...

well analysed and written!!

 
At 8:30 AM, January 29, 2009, Blogger Muthusamy Palaniappan said...

உரிமைகளைப் பெற்றுத்தருவதில் பங்கெடுத்துக்கொண்ட முக்கியமான போராளியுமான மார்ட்டின் லூதர் கிங் தினம் ஜவவரி (is this spelled right in Tamil?) 21...

Thank You!

 
At 4:20 AM, March 20, 2010, Blogger இரசிகை said...

nallaayirunchu.........

 

Post a Comment

<< Home