நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Thursday, August 20, 2009

கண்ணுல பட்டாக் கரிக்குமா? புருவத்துல பட்டாக் கரிக்குமா?.......அய்யங் கதை 3



அய்யங் கதை எழுத ஆரம்பிச்சதில இருந்து நெறையா இல்லைன்னாலும் கொஞ்சமாவது நம்மூருப் பக்கத்துச் சொலவடைகள் மூளைல எங்கயோ ஒரு ஆழத்துல இருந்து வெளிய வரத்தான் செய்யுது. இன்னிக்கு நெனச்சுக்கிட்டது "கண்ணுல பட்டாக் கரிக்குமா? புருவத்துல பட்டாக் கரிக்குமா? ங்கற பழமை ஒன்னப் பத்தி. அது வேற ஒன்னுமில்ல, உங்களுக்கொரு நல்லதுன்னாலோ, கெட்டதுன்னாலோ ஆனந்த உணர்ச்சி அல்லது கவலை உணர்ச்சியில தண்ணி உடறது எதுன்னு பாத்தாக் கண்ணு தான? அதுக்குக் கொஞ்சந்தே மேல இருந்தாலுமே புருவத்துக்கு என்ன உணர்ச்சி இருக்கப்போவது? உங்கமேல உசிர வெச்சிருக்கற ஒறவுக கண்ணு மாதிரி, மத்ததெல்லாம் புருவம்போலத்தான்னு வைங்க. உங்களுக்கு ஒன்னச் செய்யறதுல கண்ணை அடிச்சுக்க முடியாது புருவம்.

நம்ம பேப்பி கல்யாணமாகிப் புருசனுடைய‌ அம்மாயாத்தாவ‌ப் பாத்துட்டுப் பொண்ணும் மாப்பளையுமா தன்னோட அம்மாயாத்தாலையும் பாக்கப் போனா. அப்பிடிப் போய்ட்டு வந்தன்னைக்கு இந்தப் பழமைய நெனச்சுக்கிட்டா "கண்ணுல பட்டாக் கரிக்குமா புருவத்துல பட்டாக் கரிக்குமா?" ன்னு. பேப்பின்ன ஒடனே அதே பேபி அதுக்கு ஒரு கல்யாணம்ங்கறா, ஒருவேளை வெளையாட்டுக் கல்யாணம்னு நெனச்சிக்காதீங்க. பசங்களுக்கு "ராசு" மாதிரி நம்ம பக்கத்துல பொட்டப் புள்ளைகளுக்குச் செல்லப் பேருதான் இந்த "பேப்பி" கொழந்தையா இருந்தப்பச் செல்லமா நம்மாத்தா எல்லாம் இப்படி இங்கிலீசுல கூப்பட ஆரம்பிச்சுப் பல புள்ளைகளுக்கு வெச்ச பேரு மறந்து இதே நெலச்சும் போயிரும். ஒரே ஊட்டுல ரெண்டு மூனு பொட்டப் புள்ளைக பொறந்தாலுங்கூட வஞ்சனை எதுவும் இல்லாம பெரிய பேப்பி, நடுப் பேப்பி, சின்னப் பேப்பி ன்னு அதே செல்ல வரிசைல கூப்புட்டுக்குவாங்க. அப்பிடிப் பாத்தா எங்கூருல இப்பக் கூட ஒரு அம்பது அம்பத்தஞ்சு வயசுலெல்லாம் "பேப்பி" மாருக இருக்கறாங்கன்னு வைங்க. இன்னிக்குக் கதையில வர்ற பேப்பிக்கு ஒரு 25 வயசுதான் ஆச்சு.


அவளுக்கு ரெண்டு வயசா இருக்கறப்ப அவங்கம்மா தன்னோட தாய் தகப்பங்கிட்டத் தூக்கீட்டு வந்தவதான் அப்பறம் பேப்பி இங்கயேதான் வளந்தா. யாரும் அனுப்பலைன்னு சொல்லலை. பேப்பியோட அம்மாவுக்கு கட்டிக்கொடுத்த ஊட்டுல சோகிரீயம் (சௌகரியம்)இல்லை. சுமாரான எடத்துல இருந்து ஒசத்திக்குக் குடுத்தாங்க, கொஞ்ச நாள்ல பணக்காரத் திமிரக் காட்ட ஆரம்பிச்சிட்டாங்க "அது கொண்டாருலை, இது கொண்டாருலை உங்க அப்பன் ஊட்டுல இருந்து" ன்னு சொல்லிக்காட்டிக்கிட்டு. பொறுத்துப் பொறுத்துப் பாத்துட்டு பேப்பியோட அம்மாயாத்தா தன் மக கிட்டச் சொல்லீருச்சு "சரி, எசையிலன்னா வந்துரு" ன்னு. அப்பிடி வந்த பேப்பிக்கு நெனவு தெரியறதுக்கு முந்தியே அவளோட அப்பிச்சி "கிளிய வளத்துக் கொரங்கு கையில கொடுத்த மாதிரி மக பொழப்பு இப்பிடி ஆயிப்போச்சே!" ங்கற கவலையிலயே போய்ச் சேந்திருச்சு. கவலைன்னா சும்மா இல்லை, பக்கவாதமாட்ட வந்து பாக்காத ஆசுபத்திரி இல்லை, காட்டாத கைவைத்தியருக இல்லை, எல்லாம் பாத்தும் கெடையிலயே ஒரு வருசம் படுத்திருந்துட்டுக் கண்ணை மூடிருச்சு. பட்ட மரமா பிஞ்சத் தூக்கீட்டு வந்த மகளையும், கல்யாணமாகாத ரெண்டு பசகளையும், கெடையில கெடந்த அய்யனையும் பாத்துக்கிட்டு, அய்யனைப் பாக்க வந்த சனத்துக்கெல்லாம் சோறு தண்ணியும் ஆக்கிப் போட்டுக்கிட்டு கையில‌ இருந்த காசெல்லாம் தீந்து கடனும் வாங்கிக்கிட்டு ஆத்தா பட்ட சீராழுவுக்கு (சீரழிந்த வாழ்வு)அளவுமில்லை, மதியுமில்லை.


அப்பிடிச் சீராழ்ஞ்சுமே கடைசில எல்லாம் ஆத்தா தலையில போட்டுட்டு அய்யன் எதையுங் கண்ணுல பாக்காமப் போயே போய்ட்டாரு. ஆத்தா பொம்பளைன்னாலும் படு சாமார்த்தியம். ஏன் பொம்பளைன்னா சாமார்த்தியம் இருக்கக் கூடாதுன்னு இருக்குதா? நம்மூருல இப்பிடித்தான் பேசிக்குவாங்க ஆத்தாவப் பாத்து. வேறென்ன ஆண்டாண்டு காலப் பழக்கந்தான். அய்யன எடுத்துக் குடுத்துட்டுப் பதனாறாவது நாள்லயே பொழைக்கற வழி சொல்லிக் குடுத்துது ஆத்தா பசங்களுக்கு. "இந்தாங்கடா உங்கய்யனே போனப்பறம் நாங் கழுத்துல போடாதது எங் கையில எதுக்குக் கெடக்குது? கொண்டுபோய் வித்துட்டு வந்து கெணத்த இன்னங் கொஞ்சம் ஆழமா வெட்டுங்கடா ஆளக் கூட்டியாந்து, தென்ன மரத்த உசிரு போகாமக் காப்பாத்தோனும், இல்லைன்னா கஞ்சிக்கும் வழியில்லாமப் போயிரும்" அப்பிடீன்னு தாலியக் கழட்டிக் குடுத்தனுப்புச்சு பசங்ககிட்ட.


கையில பேப்பியோட நின்ன மகளப் பாத்து "அழுதழுது பெத்தாலும் அவதாம் பெக்கோனுங்கற மாதிரி நம்ம பொழப்ப நாமளேதான் கரையேத்தனும், எதுக்கு அழுதுக்கிட்டுக் கெடக்கறே? வேணும்னு இருந்தா உம் புருசன் வந்து உன்னையும் புள்ளையும் கூட்டிக்கிட்டுப் போவான், இல்லைனா ரெண்டு பசங்களோட மூனாவதா நீயுங் காட்டுல பாடுபட்டு உம் புள்ளையும் வளத்து, உங்கப்பன் நம்மளுக்கெல்லாம் காட்டை வெச்சுட்டுத்தான செத்திருக்குது?" ன்னு தைரியம் சொன்னதும் ஆத்தாதான்.


எது நின்னாலும், நிக்காட்டியும் சூரியன் உதிக்கறதும், மறையறதும் நிக்கவா போகுது? அதுக்குப் பொறவு கையுங் காலும் மொளச்ச மாதிரி ஓடுன காலத்துக்கு ஈடுகுடுத்து ஆத்தா பொழப்பும் ஓடுச்சு. சும்மா சொல்லக் கூடாது மகனுக ரெண்டுபேரும் ஊனக் குடுத்து, உசிரக் குடுத்து ராப்பகலாப் பாடுபட்டாங்க. மகளும் அப்பிடித்தான். பொற‌ந்தவன் ரெண்டு பேரும் காடாக் கெடந்த மண்ணை உழுது உழுது தோட்டமாக்குனாங்கன்னா மக ஆளுகளச் சேத்துக்கிட்டு வெறும் கல்லாக் கெடந்த குட்டைகள போட்டது வெளையற பூமியாக்குனா.(தோட்டத்துக்குள்ள உத்திகளால சூழப்பட்ட ஒரு சிறு பரப்பளவக் குட்டைன்னு சொல்வாங்க, இது தண்ணி நிக்கற கொளம் அல்ல. ஆனா மழை கனமாப் பேஞ்சா இந்தக் குட்டைகள்லயும் தண்ணி தேங்கி நிக்கும். உத்தின்னா என்னன்னா கொஞ்சம் ஏரியாட்டமாப் போடப்பட்ட பெரிய வரப்பு)


எல்லாருக்கும் வேளைக்குச் சோறாக்கிப் போடறதும், ஆடு, மாடு, எருமைன்னு வாயில்லாச் சீவனுகளோட வயித்த நெறைக்கறதும் கூடவே பேப்பிக்கு வயிறு, மனசு ரெண்டையும் நெறைக்கறுதும் ஆத்தாதான். படிக்கர நேரம்போக மத்த எல்லா நேரத்துலயும் பேப்பி ஆத்தா பொறவாலதான் குட்டி போட்ட பூனையாட்டச் சுத்திக்கிட்டிருப்பா. அவசோட்டுப் புள்ளைக மேலகூட அவளுக்கு ஒரு பெரிய சினேகம் வளந்ததில்லை. ஏன்னா அவளுக்கு ஆத்தா எல்லாமாவும் இருந்தது. ஆத்தா சொல்ற கதையே பேப்பிக்கு இப்படித்தான் ஆரம்பிக்கும், "நீ நல்லா நடந்து பழகியிருந்தே, அப்பிச்சி அப்பத்தான் கெடையில உழுந்துது, எந்திரிச்சு நடக்க முடியாத அப்பிச்சிக்குப் பொவைல (புகையிலை) கொண்டுபோய் நாங்குடுக்கறதப் பாத்துக்கிட்டே இருந்துட்டு, நீயும் அதேமாதிரி எடுத்துக்கிட்டுப் போயி அப்பிச்சிகிட்ட ஆஆன்னு சொல்லி வாயில போட்டுட்டு வருவே, அப்பிச்சி செத்தப்பக்கூட எனக்கு அத்தன‌ அழுவாச்சி வல்ல‌, ஆனா அப்பிச்சி செத்த பொறவும் நெறையா நாளு நீ அதேமாதிரி அவியளப் படுக்க வெச்சிருந்த தெக்குவாசூட்டுக்குள்ள பொவையிலையக் கொண்டுக்கிட்டு போயி ஆஆன்னு சொல்லிக்கிட்டு இருப்பே, அதப் பாத்தாத்தான் எனக்கு கண்ணுல தண்ணி நிக்காது, என்ன பண்றது உங்கிட்டப் பொவையிலை வாங்கிப் போட்டுக்கறதுக்கு இன்னங் கொஞ்ச நாளைக்கு உங்கப்பிச்சிக்குக் குடுத்து வெக்கல" அப்பிடீன்னு ஆத்தா எப்ப்டியும் பேப்பிகிட்ட அவ சின்னப் புள்ளையா இருந்த காலத்துல ஏன் அவ காலேஜு போர வரைக்குமே மாசத்துல ஒருக்காச் சொல்லீரும். ஒரு பத்துப் பதனஞ்சு வயசுவரைக்கும் ஆத்தா சொல்லிக்கிட்டு அழுதுதுன்னா கூடவே பேப்பியும் அழுதுருவா.அப்பிச்சிங்கற ஒறவு அப்பிடி உழுந்ததுதான் பேப்பி நெஞ்சுக்குள்ள, வெற ஒன்னும் தெரியாது.


ஆனா ஆத்தாங்கறது பேப்பிக்கு ஒரு தோழி ஒறவு மாதிரி சொகமானது. அப்பவெல்லாம் ஊருகள்ல குமினி ன்னு ஒன்னு இருக்கும். பாக்கறதுக்கு வெள்ளைச் சோளத்தைவிடக் கொஞ்சம் பெருசா பளபளன்னு மேல ஒரு கறுப்பு நெற வட்டமும், கீழ்ப் பகுதி பெருசா செவப்பு நெறத்துலயும் இருக்கும். காடு தோட்டத்துல வேலிகள்ல படந்து கெடக்குற கொடி ஒன்னுல புடுச்சிருக்கற காய்ல இருந்து கெடைக்கும் இது. மழை கிழை பேஞ்சு நல்ல செழுசெழுப்பமா இருக்கற காலத்துல நெறையா வரும். காய் காஞ்சு வெடிச்சு அதுக்குள்ள இருக்கற குமினியெல்லாம் வேலியோரத்துல கீழ உழுந்தும் கெடக்கும். பாக்கறதுக்கு அழகான இந்தக் குமினிகளைப் பொறுக்கிச் சேத்தி வைக்கறதுல பேப்பிக்கு ரொம்ப இஷ்டம். அவளோட அம்மாக்காரிதான் சத்தம் போட்டுக்கிட்டே கெடப்பா. குமினிய அரைச்சுக் குடிச்சா செத்துப் போயரோனும்னோ என்னமோ கதையிருந்துதுன்னு நெனைக்கறேன். பேப்பிகிட்ட அதைத் தூக்கிப் போடச் சொல்லிக் கிட்டே இருப்பா.ஆனா ஆத்தா "வாயில மட்டும் போட்றாத மொட்டுக் குட்டி, வெளையாடீட்டுத் தொட்டில(தேங்காத் தொட்டி) போட்டு வெச்சிரு" ன்னு சொல்லும்.பேப்பிகூடச் சேந்து சின்னப் புள்ளையாட்டமா அதும் குமினி பொறுக்கிப் பேத்திக்குக் குடுக்கும். பேப்பிக்கு தன்னோட அம்மா எதிரியானதும், ஆத்தா தோழியானதும் இப்படித்தான்னு வைங்க.


அதுமட்டுமில்லாம பக்கத்தால டவுனுல எதோ சர்க்கஸ் ஓடுதுன்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்கன்னா சின்னப் புள்ளையான பேப்பிக்குப் போக ஆசையா இருக்கும். போனா ஆனை, சிங்கமெல்லாம் பாக்கலாம்னு. பின்ன மிருகக்காட்சி சாலைக்கெல்லாமா கூட்டிக்கிட்டுப் போகப்போறாங்க அவளை? ஆனா பேப்பியோட அம்மா ஊருக்குள்ள சில குடும்பங்களோட சேந்துக்கிட்டு சர்க்கஸ் பாக்கப் போனாலும் ராத்திரில பேப்பி தூங்குன பொறவு கெளம்பிப் போயிரும். அம்மாவுக்குப் புள்ளை தூக்கத்த கெடுக்கக் கூடாதுன்னு. ஆனா மவளுக்கு "அம்மா ஏன் இப்படி ஏமாத்தறா? ன்னு. ஆனை, சிங்கம் பாக்க முடியாத வெசனத்தை பேப்பி ஆத்தாகூடக் காட்டுக்குள்ள சுத்தி மொசலு (முயல்) அழகுவண்ணாங்குருவி(அழகுவண்ணக் குருவி), நாய், நரியெல்லாம் பாத்து ஆத்திக்குவா. இதையெல்லாம்விட மழைபேஞ்ச காத்தால ஆத்தாகூடக் கேளாம் புடுங்கப் போறது (காளான்) பேப்பிக்கு உலக மகா சந்தோசம். கொடை கொடையா விரிஞ்ச கேளான், மொட்டு மொட்டுக் கேளான் எல்லாங் கொண்டாந்து தண்ணிய ஊத்திக் கழுவீட்டு உப்பு, மொளவடியோட‌ பெரிய வாக்கணக் கரண்டியில போட்டு எண்ணெய நெறையா ஊத்தி வறுத்துக் குடுக்கும்பாரு ஆத்தா, பேப்பிய அன்னைக்குக் கையிலயே புடிக்க முடியாது. வறுத்த கேளானுல இருந்து வடிஞ்சு போற எண்ணையையுங்கூடச் சொட்டுச் சொட்டாத் தொட்டு நக்கீட்டு மறுபடியும் மழை வராதான்னு பாத்துக்கிட்டிருப்பா பேப்பி. வேற எதுக்கு? அப்பறமும் ஆத்தாகூடக் கேளாம் புடுங்கப் போறதுக்குத்தான்.


இப்படித் திங்கற விசயத்தோட பேப்பிக்கு ஆத்தாவோட வேலை முடியாது. அதுக்குத் தகுந்தளவு அறிவையும் ஊட்டுச்சு. புஸ்தகம் பாத்துப் படிச்சுக் காட்டி, வெரலப் புடுச்சு எழுதியுட்டாத்தான் படிப்புச் சொல்லிக்குடுக்கறதா என்ன? வாயில சொல்லியே மூளைய வேலைவாங்கும் ஆத்தா. அப்பப்ப விடுகதை சொல்லும். பேப்பியோட மாமனுக ரெண்டுபேரும் பாடுபட்டுட்டு வந்துட்டு ரேடியோவுல சலுப்புத்தீரப் பொழுதோட பாட்டுக் கீட்டு கேட்டுகிட்டு இருப்பாங்க. பேபியோட அம்மாவுக்குச் சட்டிபானை வேலை சரியா இருக்கும். ஆத்தா வெளிவாசல்ல குளுகுளுன்னு காத்து வருதுன்னு கட்டலப் போட்டுப் படுத்திருக்கும். அம்மாவுக்குப் பயுந்துக்கிட்டு தூங்கப் போரவளாட்ட நடிச்சிட்டு பேப்பி அழுங்காம வெளிவாசலுக்கு ஆத்தாகிட்டப் போயிருவா. நெலாவும் இருந்ததுன்னா அன்னைக்குக் கேக்கவே வேண்டாம். பேப்பியோட பெரியப்பிச்சி ஊட்டுப் பேரனுகளும் ஆத்தாகிட்ட வந்துருவாங்க. ஆரம்பிக்கும் ஆத்தாவோட விடுகதை வகுப்பு. பேத்தியும், பேரனுகளுமா தமிழ்ப் புசஸ்தவுத்துல படிச்ச "பச்சை நிறமா இருக்கும், பால் வடிந்துகொண்டிருக்கும்" னு எதோ தமக்குத் தெரிஞ்சதை எடுத்து ஆத்தாகிட்ட உடுவாங்க. எந்தப் படிப்பு வாசனையும் இல்லாட்டியும் எல்லாத்தையும் சுலபமாக் கண்டுபுடிச்சிரும் ஆத்தா. அப்பறமா அதோட மொறை வந்தா படுத்துக்கிட்டு இருந்தது எந்திரிச்சுக் குடுமைய நீவி நல்லாப் போட்டுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே ஆரம்பிக்கும்.

எங்கே சொல்லுங்க பாக்கலாம்? "சலசலங்குது ஒரு குருவி, சங்கிலி போடுது ஒரு குருவி, கொத்திக் குடுக்குது ஒரு குருவி, கொறிச்சுத் திங்குது ஒரு குருவி" இதே என்னோட கதை, விடுவியுங்க பாக்கலாம்?" னு கேக்கற ஆத்தாதான் பதிலையும் சொல்லவேண்டி வரும் சில நேரங்கள்ல. "எண்ணெய் சலசலன்னு கொதிக்கும், சங்கிலியாட்டச் சுத்திப் புழியுவோம். ஒரு கைல எடுத்து வாய்க்குக் குடுப்போம், பல்லு கொறிச்சுக் கொறிச்சுத் திங்கும், முறுக்குத்தான் அது" ஆத்தா விளக்கத்தோட சொல்லும். "ஊளை மூக்காஞ் சந்தைக்குப் போறான் அது நொங்கு", "கெண‌த்து நெறையாத் தண்ணி இருக்குது, குருவி குடிக்கத் தண்ணியில்லை அது எளநீ (இளநீர்)," "எத்தனை அடி போட்டாலும் ஒரு சொட்டுக் கண்ணீரு உடமாட்டா அது ஒல்லு(ஒரலு)" இப்படி ஆத்தா சொல்ர விடுகதைக்குப் பேப்பி எப்பவுமே ரசிகையாப் போனா. வளரவளர எல்லாமுக்குமே விடை சொல்லவும் பழகீட்டா.


பேப்பிய கடைசிவரைக்கும் ஆத்தாதான் வளத்துச்சு. அவ பெரியவளானபோதுங்கூட ஊருக்குள்ள எல்லாரும் "மாமனுக ஒருத்தனக்கே கட்டி வெச்சிருங்க உங்களுக்கும் பேத்தியே மருமவளா வந்தாக் கொறை இருக்காது"ன்னு சொன்னாங்க‌.ஆத்தாவுக்குக் கோவம் வந்து "எல்லா பேசறீங்க பாரு நாயம்! பெத்த புள்ளையாட்ட வளத்தீட்டு அவனுக எப்பிடிக் கட்டிக்குவாங்க? வேற நல்ல நாயம் இருந்தாப் பேசுங்க" ன்னு வார்த்தை பேசியுட்டுருச்சு.
பேப்பியோட மாமனுகளுக்கும் கல்யாணம் நடந்துது. அத்தைமாருக வந்தகையோட பண்ணையம் பாச்சல் எல்லாம் பங்குபோட்டுப் பிரிச்சாச்சு. இத்தனை நாளும் ஒன்னும்பின்னா இருந்தது போதும், இனி நங்கை கொழுந்திக்குள்ள எதுக்கு இருக்கோணும்னு காலேசுல சேந்த பேப்பியக் கூட்டிக்கிட்டு மகளும் தனியாப் போய்ட்டா. "நானும் அம்மாளும் மட்டுந்தான இருக்கப்போறோம்? நீங்க வந்து எங்ககூட இருங்காத்தா" ன்னு கூப்பிட்டா பேத்தி. ஆனா மருமவளுகளுக்குக் கெட்ட பேரு வரும்னு ஆத்தா வரலை. அப்பப்ப மருமகளுக மேல குத்தங் குறை சொன்னாலும் மகனுகள உட்டு நகராது. பேப்பிய வளத்துன மாதிரி மகனுக பேத்திகளையும் வளத்துச்சு.

படிச்சு ஒரு வேலையும் கெடைச்சு பேப்பி தலைதூக்கினபொறகு மாமங்காரங்க அவளுக்கு மாப்பளை பாக்க ஆரம்பிச்சாங்க. ஆனா பேப்பி அவ தொணைய அவளே தேடிக்கிட்டா. பெரியவங்களே பண்ணி வைங்கன்னு கேட்டப்ப சின்ன மாமன் "சொத்து ஒன்னுமே பெருசா இல்லையாட்ட இருக்குது, அங்க கட்டிக்குடுத்து என்ன பண்றது?" ன்னாரு. "ஏன்டா உங்களுக்கெல்லாம் ஒரு குடி கெட்டுங்கூடப் புத்தி வராதா? இன்னமு ஏன்டா சொத்து சொத்துனு அலையறீங்க? நம்ம புள்ளைய மனங் கோணாமப் பாத்துக்குவாங்களான்னு மட்டும் பாருங்க" ஆத்தா ஒரு ஏறு ஏறுன பொறவு பேப்பி கல்யாணம் நல்லாவே நடந்துது.

கல்யாணம் ஆகி ஒரு மாசம் போயிருக்கும். ரெண்டுபேரும் ஊருப்பக்கம் போய்ட்டு அம்மாயாத்தாக்களையும் பாத்துட்டு வரலாம்னு போயிருந்தாங்க. பேப்பி புருசனோட அம்மாயாத்தா வாஞ்சையாத்தான் பேசுச்சு. ஆனாலுங்கூட பேப்பிக்கு என்ன வேணும்னு கேட்டதைவிட "எனக்கு அந்தத் தயிரக் கொஞ்சம் சூடு பண்ணிக்குடாத்தா, அப்பிடியே ஊத்திக்கிட்டா சளி புடுச்சுக்கும், காப்பியில எனக்குப் பாலு இன்னங் கொஞ்சம் ஊத்தோனுமாத்தா, கரையேன்னு (கருப்பா) கெடக்குது காபி, பால் பத்தலை" னு பேப்பிகிட்டத்தான் நெறையா வேலை வாங்கீட்டு இருந்துது. பையன் மூலமா எந்தப் பொண்ணு ஊட்டுக்கு வந்தாலும் அது மருமவளா இருந்தாலுஞ்சரி, பேரம் பொண்டாட்டிகளா இருந்தாலுஞ்சரி அவங்களைக் கொஞ்சம் ஏவி வேலை வாங்கற தோரணை நம்ம ஆத்தாக்களுக்கும் இருக்கத்தான் செய்யுதுனு வைங்க.


அப்பறமா பேப்பியோட ஆத்தாவையும் பாக்கப் போனாங்க. வருவாங்கன்னு தெரிஞ்சு வாசல்லயே உக்காந்துக்கிட்டு இருந்துது ஆத்தா. பைக்க உட்டு எறங்குனதீமு பேத்தியப் பாத்துக் கேட்ட கேள்வி, "ஏத்தா மத்தியானமே வருவீங்கனு பாத்துக்கிட்டு இருந்தேன், அத்தையச் சாப்பாட்டுக்கு வடைபாயாசங்கூட வெக்கச் சொல்லீருந்தேன், இன்னாரமாயிப்போச்சா?" "ஆமாங்காத்தா லேட்டாயிருச்சு"னு சொல்லீட்டு உள்ள போயி எல்லாருகிட்டயும் பேசிக்கிட்டிருந்தாங்க. ஆத்தா மட்டும் எங்கயோ எந்திரிச்சுப் போச்சு. போயிட்டு வரும்போது ரெண்டு சின்னச் சின்னத் தட்டத்துல என்னத்தையோ எடுத்துக்கிட்டு வந்து பேப்பிகிட்டக் குடுத்துது. பாத்தாக் கேளான் வறுவல். புருசங்கிட்ட ஒன்னக் குடுத்துட்டு நெஞ்சு முழுக்கா ஈரத்தோட அதைச் சாப்பிட்டா அவ. ஆத்தாவோட சின்ன மவன் கேட்டாரு, "இதை எப்பம்மா புடுங்கியாந்து வறுத்து எங்கயம்மா வெச்சிருந்தே? மத்தியானம் சாப்புடும்போது எங்கண்ணுலக் கூடத் தட்டுப்படலியே?". "இப்பவெல்லாம் மின்னையாட்ட (முன்புபோல)எங்கீடா மொளைக்குது? அந்த ஒத்தப் பனைமரத்துக்கிட்ட ரெண்டே கேளாந்தாங் கெடச்சுது. பேப்பிவாரான்னு வெச்சிருந்தேன், காட்டுனா உனக்கு நாக்கடங்காது, புள்ளைக்கிருக்காது. நாளைக்கு எங்கயாவது புடுங்கீட்டு வா தின்னாப் போவுது" மவன் வாயை ஒரே அடக்கா அடக்கீருச்சு ஆத்தா. புருசங்கார ஆத்தாவையும், தன்னோட ஆத்தாவையும் மனசுக்குள்ள வெச்சுப் பாத்து "கண்ணுல பட்டாக் கரிக்குமா? புருவத்துல பட்டாக் கரிக்குமா?" ன்னு நெனச்சுக்கிட்டா பேப்பி.

24 Comments:

At 1:54 AM, August 20, 2009, Blogger பழமைபேசி said...

அய்யந் தொடர்ல மூனாவது இடுகையாட்டம் இருக்குது, சித்த படிச்சுட்டு[ப் போலாமுன்னு வந்தா, இது பெரிய, பேப்பி புராணமாட்ட இருக்குதூ...

பழமயிகளைக் படிக்க நல்லாத்தான் இருக்குது, எதுக்கும் மறுக்கா வந்து படிச்சுப் போடோணும்... வாறனுங்...

 
At 2:21 AM, August 20, 2009, Blogger சந்தனமுல்லை said...

அற்புதம்..செல்வநாயகி!! நீங்க நேர்லே என்கிட்டே சொல்லிக்கிட்டு இருக்கிற மாதிரியே இருந்துது...வெகு அழகான நடை..!! கடைசிலேதான் உண்மையான அர்த்தம் புரிஞ்சது...இப்போ என் கண் கரிக்குது!! ரொம்ப நல்லா இருக்குங்க...பேப்பியும் ஆத்தாவும் மனசில் நிற்கிறார்கள்!!

 
At 5:09 AM, August 20, 2009, Blogger பதி said...

அருமையா வந்திருக்குதுங்க செல்வநாயகி...

//பசங்களுக்கு "ராசு" மாதிரி நம்ம பக்கத்துல பொட்டப் புள்ளைகளுக்குச் செல்லப் பேருதான் இந்த "பேப்பி" //

எங்க ஊருப் பக்கம், பாப்பா இல்லாட்டி கண்ணா...

பெரிய கண்ணா/பாப்பா, சின்ன கண்ணா/பாப்பா !!!!!

பேரன்,பேத்தி எடுத்த பாப்பாங்க !!!!

//ஆனா ஆத்தாங்கறது பேப்பிக்கு ஒரு தோழி ஒறவு மாதிரி சொகமானது.//

அம்மத்தான்னு இல்லை வந்திருக்கனும்???? ஆத்தா, அப்பாவோட அம்மா தானே???

//"ஏன்டா உங்களுக்கெல்லாம் ஒரு குடி கெட்டுங்கூடப் புத்தி வராதா? இன்னமு ஏன்டா சொத்து சொத்துனு அலையறீங்க? //

கொஞ்சம் புரட்சிகரமான ஆத்தாவாத் தான் இருக்குது.. இன்னமும் எங்க ஊருப் பக்கம் சில பெருசகளால தான் பல கல்யாணங்கள் தடை படுது.

//பையன் மூலமா எந்தப் பொண்ணு ஊட்டுக்கு வந்தாலும் அது மருமவளா இருந்தாலுஞ்சரி, பேரம் பொண்டாட்டிகளா இருந்தாலுஞ்சரி அவங்களைக் கொஞ்சம் ஏவி வேலை வாங்கற தோரணை நம்ம ஆத்தாக்களுக்கும் இருக்கத்தான் செய்யுதுனு வைங்க.//

இப்ப கொஞ்சமா மாறி இருக்காங்க.. ஆனாலும் பரவாயில்லைனு சொல்ல முடியாது...

 
At 8:26 AM, August 20, 2009, Blogger Karthikeyan G said...

Too good.. thanks!!

 
At 12:26 PM, August 20, 2009, Blogger Deepa said...

அற்புதம்.
ஆத்தா பிரமிக்க வைக்கிறார்கள்.
நான் கல்லூரி படித்தது கோவையில் தான். அந்த ஞாபகங்களையும் கிளறி விட்டது உங்கள் வழக்கு!

 
At 1:26 PM, August 20, 2009, Blogger Indy said...

மிகவும் நன்று.

 
At 4:08 PM, August 20, 2009, Blogger செல்வநாயகி said...

பழமைபேசி,

நீங்க சொன்னாப்ல இது கொஞ்சம் பெரிசாத்தான் போச்சு. ஆத்தா கதை முடியவே மாட்டேன்னுட்டுது:))

முல்லை,

உங்களின் வாழ்வியல் சூழல் வேறென்றாலும், கொங்குக் கதைகளை ஒவ்வொருமுறையும் ரசிச்சுப் பாராட்டறது எனக்குமே எழுத ஒரு தூண்டுதலைக் கொடுக்குது.

பதி,

///எங்க ஊருப் பக்கம், பாப்பா இல்லாட்டி கண்ணா...///


ஒரு இலக்கண‌ப் பிழை விட்டுட்டனாட்ட இருக்குங்க. செல்லப் பேரு "பேப்பி" ங்கறதுக்குப் பதிலா செல்லப் பேர்கள்ல ஒன்னு "பேப்பி" ன்னு வந்துருக்கணும். கண்ணா, பாப்பா எல்லாம் நம்மூருலயும் உண்டுங்க. இங்கிலீசு மோக ஊடுகள்ல உருவாகறதுதான் இந்த பேப்பிக போல:))

///அம்மத்தான்னு இல்லை வந்திருக்கனும்???? ஆத்தா, அப்பாவோட அம்மா தானே???///

அப்பா வழி ஆத்தாலச் சரியாக் கூப்படோணும்னா "அப்பத்தா" நம்மூருப் பக்கம். அம்மா வழி ஆத்தாவுக்கு "அம்மத்தா", "அம்மிச்சி"
"அம்மாச்சி" ங்கூட உண்டு. சில ஊடுகள்ல ரெண்டு ஆத்தாலையுமே கூப்புடும்போது பொதுவா ஆத்தான்னும் கூப்புடுவாங்க. பேப்பி அப்பிடிக் கூப்புட்டான்னு நெனச்சுக்கங்க (அட அட.... தப்பா எழுதிப்போட்டு நான் எப்படிச் சமாளிக்கறன்னு பாருங்க)


ஆத்தாவை ஒரேமுட்டா புரட்சிகர ஆத்தான்னும் சொல்லீடமுடியாது, அப்பிடியில்லைன்னும் சொல்லீர முடியாது:)) ஆத்தா கதை வந்தது உங்க அறிவுறுத்தலுக்குப் பின்னாடிதாங்க பதி:))

கார்த்திகேயன்,
அய்யங் கதையத் தவறாம படிச்சு உற்சாகந் தர்றீங்க, மகிழ்ச்சி.

தீபா,

வாங்க, கோயமுத்தூர்ல படிச்சீங்களா நல்லது, ஆமா உங்க அடுத்த மொழிபெயர்ப்புக் கதை எப்ப? அதுக்காகவே அடிக்கடி அங்க வந்து பாக்கறேன்.


இண்டி,

வாங்க.

எல்லோருக்கும் நன்றி.

 
At 10:49 PM, August 20, 2009, Anonymous Anonymous said...

//நெஞ்சு முழுக்கா ஈரத்தோட//

பேப்பிக்கு மத்தரமில்ல. எனக்குமு நெஞ்செல்லா என்னமோ பண்ணிபோட்டுது.

 
At 3:47 AM, August 21, 2009, Blogger பதி said...

//சில ஊடுகள்ல ரெண்டு ஆத்தாலையுமே கூப்புடும்போது பொதுவா ஆத்தான்னும் கூப்புடுவாங்க.//

ஓ.. சரி சரி...

//ஆத்தா கதை வந்தது உங்க அறிவுறுத்தலுக்குப் பின்னாடிதாங்க பதி:)) ///

நன்றிங்க !!!!

ஆனா, எனக்கு இதை படிக்கும் போது எங்க ஆத்தாவை விட அவங்க அம்மா நியாபகம் தான் வந்தது... நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் வரை அவர் இருந்தார்..

அய்யங்கதை, ஆத்தா கதையெல்லாம் படிச்சவுடனே மனசுக்குள்ள ஒரு ஆத்தா கதை draft'a இருக்குது !!!!

எழுதுனா சொல்லுறேன் !!!!! :-)))

 
At 6:11 AM, August 21, 2009, Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

பேப்பி, ஆத்தா, அப்புறம் பேச்சு வழக்கு

என்னவென்று சொல்வது

பிரமிக்க வைத்த பதிவு.

 
At 11:29 AM, August 21, 2009, Blogger செல்வநாயகி said...

சின்னம்மிணி, அமிர்தவர்ஷினி அம்மா,

நன்றி வாசிப்புக்கு.

பதி, எழுதுங்க எழுதுங்க:))

 
At 6:13 PM, August 21, 2009, Blogger பழமைபேசி said...

அருமைங்க... நாலுவாட்டிப் படிச்சுப் போட்டம் போங்க....

 
At 6:07 AM, August 22, 2009, Blogger கோமதி அரசு said...

முறுக்கு வெந்து எடுக்கும் போது குருவி
கூப்பிடற சத்தம் நின்னவுடன் முறுக்கை
எடுக்கவேண்டும் என்று என் மாமியார் சொல்வார்கள்,அதற்கு அர்த்தம் இப்போதுதான் தெரிந்தது.

//சல சலங்குது ஒரு குருவி// என்ற பழமொழி பாடல் மூலம்.
நன்றி செல்வநாயகி.

 
At 8:21 AM, August 23, 2009, Blogger கதிரவன் said...

வழக்கம்போல ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க செல்வநாயகி

 
At 1:38 PM, August 23, 2009, Blogger செல்வநாயகி said...

பழமைபேசி, கோமதி அரசு, கதிரவன்,

நன்றி.

 
At 8:29 AM, August 31, 2009, Blogger ரௌத்ரன் said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க..கொஞ்ச நீளம் தான்..ஆனா படிக்க சுவாரஸ்யமா இருக்கு நடை...

 
At 9:29 AM, August 31, 2009, Blogger செல்வநாயகி said...

ரௌத்ரன்,
நன்றி.

 
At 6:45 PM, September 01, 2009, Blogger கோபிநாத் said...

கலங்கடிச்சிட்ங்க ;)))

அப்படியே ஆத்தா கூடவே இருந்தது போல இருந்துச்சி. அட்டகாசமான எழுத்து நடைங்க ;))

வாழ்த்துக்கள் அக்கா ;))

 
At 9:41 PM, September 01, 2009, Blogger  வல்லிசிம்ஹன் said...

செல்வா,
என்ன சொல்றது. எங்க சீனிம்மா(அம்மம்மா) நினைவு தான் வந்திடுத்து.
ஆத்தா அருமை யாருகிட்ட வரும். முத்தாய்ப்பு புருசன் வீட்டு ஆத்தாதான்.
எங்க (புகுந்த)பாட்டிக்கும் என்னைப் பார்த்தால் வாயில வேலை ஆணைகள் பிறந்துகிட்டே இருக்கும்.:)

என்ன வார்த்தை சொன்னாலும் போதாது. இந்தப் பேச்சும் நடையும் அதை எழுதிக் கொடுக்கும் பாங்கிம் எங்களுக்கு எப்பவும் கிடைக்கணும்

 
At 9:57 PM, September 01, 2009, Blogger செல்வநாயகி said...

வல்லிம்மா,
கோபி,
வரிசையாக எலாக் கதைகளையும் படித்துக்கொண்டு கூடவே வருவதற்கு நன்றி:))

 
At 11:14 PM, September 01, 2009, Blogger செந்திலான் said...

வாய்ப்பே இல்ல.அற்புதம் ஆத்தாக்களை அப்படியே வடிச்சுருக்கீங்க.நான் நாலு ஆத்தக்களுக்கு நடுவுல வளந்தேன்.ரெண்டு பேபி களும் இருக்காங்க (சின்ன பேபி ,பெரிய பேபி ).தொடரட்டும் தொடரட்டும்.அப்படியே நம்ம கடந்த காலம் கண் முன்னாடி வருது போங்க.நானும் இந்த மாதிரி ஆத்தா கேளான் நெறயவே சாப்டுருக்கேன்.இப்ப ஆத்தாவும் இல்ல கேளான் பொடச்ச மூல காட்டுல கோயமுத்தூர் பூடும் (பார்த்தீனியம்) தென்ன மரமும் தான் நிக்குது போங்க.

 
At 11:44 PM, September 01, 2009, Blogger செல்வநாயகி said...

செந்திலான்,
காளான் மொளைக்காத பூமியில் புதைந்து மறைகின்றன ஆத்தாக்களின் பெருமூச்சு:((
நன்றி.

 
At 12:32 PM, April 15, 2010, Blogger ரோகிணிசிவா said...

ponga kathai mudunjathuku appuram than ourinjuthu , ithu kathainu
so realistic

 
At 12:36 PM, April 15, 2010, Blogger செல்வநாயகி said...

ரோகிணிசிவா, நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பதற்கும், கருத்துக்களைப் பகிர்வதற்கும் நன்றி.

 

Post a Comment

<< Home