நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Sunday, August 16, 2009

நேற்றும் இன்றும்




நேற்றுவரைகூட அது அங்குதான் இருந்தது
தடித்த பருமனை உடலாகக் கொண்டு
எல்லாவற்றிற்கும் மௌனசாட்சியாய்

உண்ட உணவும்
செரிக்க நடக்காத சீமாட்டிப் பெண்ணுக்கு
கணுக்கால்வரை புடைத்து வெளித்தெரிந்த
பச்சை நரம்புகளின் முடிச்சுகளை நினைவூட்டி
துருத்தி நீண்டன
அதன் வேர்கள் மண்ணுக்குமேலும்


இலைபார்த்துக்கொண்டே
தளிராக நடந்த குழந்தைக்கால்களை
அந்த வேர்கள்தாம் ரத்தம் பார்க்கச் செய்தன
குடையாக விரிந்திருந்த கிளைகளில்
உயிரினம் எதுவும் அண்டவுமில்லை
கிளை‌களின் அந்த அடர்ந்த இருளுக்குள்
உயிர்குடிக்கும் பெரும்பேயொன்று
உலவுவதாகவும் கதைகள் இருந்தன
பூக்கவும் தெரியாத மரமதில்
சிரிக்காத மனிதர்களின் சித்திரங்களே தெரிந்தன
ஆள‌ரவமற்ற பொழுதின் துணைகளில்
அனாதைத் தவளைகளைத் துரத்திச்சேர்த்து
கருநாகங்கள் உண்டுமுடிக்கவும்
கவலைகளின்றி நிழல் தந்திருந்தது.


இப்படியாகச் சுயம்தரித்த‌ மரம்தான்
அவை போகையில் வ‌ருகையில் பார்த்துக்கொண்டிருந்து
புத்தம்புதிய பறவையும் ஆனது
இதனினும் உள்ள வசதிகள் கருதி

இப்போது நீங்களும் கேட்டுக்கொண்டிருக்கலாம்
பறவை வேடங்களில்
மரத்தின் பாடல்களை

7 Comments:

At 8:47 AM, August 17, 2009, Blogger thiru said...

தோழி,

எப்போதும் போல நல்ல படைப்பு. இன்னும் நிறைய எழுதுங்கள்.

 
At 11:00 AM, August 18, 2009, Blogger நேசமித்ரன் said...

அற்புதம்
அதுவும்கடைசி வரிகள் உண்மைதான் பறவை வேடம் பூண்டுதான் திரிகிறது மனசுகளும் மரங்களும் அவற்றில் ஒட்டியிருக்கும் மண்ணும் மண்ணாகிப் போகாத நினைவுகளும் உணர்வுகளும் ....
நன்றி செல்வ நாயகி

 
At 11:57 AM, August 18, 2009, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பூக்கவும் தெரியாத மரமதில்
சிரிக்காத மனிதர்களின் சித்திரங்களே தெரிந்தன //
இந்த இடம் ரொம்ப பிடிச்சது செல்வநாயகி, நல்லா இருக்கு..

 
At 9:48 PM, August 18, 2009, Blogger செல்வநாயகி said...

திரு, நேசமித்ரன், முத்து,

உங்களின் வாசிப்புக்கும், மறுமொழிகளுக்கும் நன்றி.

 
At 10:26 AM, August 19, 2009, Blogger செந்திலான் said...

//இப்போது நீங்களும் கேட்டுக்கொண்டிருக்கலாம்
பறவை வேடங்களில்
மரத்தின் பாடல்களை //

super

 
At 8:05 PM, August 19, 2009, Blogger செல்வநாயகி said...

நன்றி செந்திலான்.

 
At 2:01 PM, September 02, 2009, Blogger பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்குங்க செல்வநாயகி.

 

Post a Comment

<< Home