நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Tuesday, May 23, 2006

கடல்கடந்துவந்து பெற்றதும் இழந்ததும்....


அவ்வப்போது மூட்டை கட்டிக்கொண்டேயிருக்கும் நாடோடி வாழ்க்கையில் இப்போது வசித்துக்கொண்டிருப்பது அமெரிக்காவின் விஸ்கான்சின்
மாநிலத்தின் "கிரீன்பே" என்னும் ஊர். ஆர்ப்பாட்டங்கள், அவசரங்கள் இல்லாத அமைதியான வாழ்வியல்முறையைக் கொண்டிருக்கும்
மக்களைக்கொண்ட இந்த ஊரை "கிராமம்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் அமெரிக்காவின் இரைச்சல்மிகு நகரங்களிலெல்லாம் இருந்துவிட்டு இங்கு வந்து சேர்ந்திருக்கிற நம் மக்கள். கேளிக்கை கொண்டாட்டங்களிலிருந்து விலகி ஏதோ ஒரு அமைதிக்கு ஏங்கும் மனதுடையவர்களுக்கு இந்த ஊர் பிடிக்காமல்போக வாய்ப்பில்லை. பார்ப்பதற்குச் சிறிய ஊராக இருந்தாலும் அமெரிக்காவின் தினசரிச்
செய்திகளில் அடிக்கடி வந்துபோகும் பெருமையும்கொண்டது. "கிரீன்பே பேக்கர்ஸ்" என்னும் புகழ்பெற்ற கால்ப்பந்தாட்ட அணியின் பிறப்பிடம் இது.
சுற்றி வளைத்திருக்கும் மிச்சிகன் ஏரியும் இதன் இன்னொரு சிறப்பு. டிஸ்யூ பேப்பர் தொழிற்சாலைகளும், இன்னபிற சிறு மற்றும் பெரும்தொழில்களும் அங்கங்கு அமைதியாக ஓரளவுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிவருகின்றன. நிறைவான வேலைவாய்ப்புகள் மட்டுமின்றிக்
குறைவான வாடகைகளில் கிடைக்கும் நல்ல வீடுகளும் இருப்பதால் நடுத்தர மக்களுக்கு இங்கு வாழ்வது சுமையாக இல்லை. இன்னுமொரு
இனிக்கும் செய்தி சொல்லவேண்டுமென்றால் கார் பார்க்கிங்கிற்கு எங்கும் எப்போதும் "இடம் கிடைக்காது" என்ற கவலையே இல்லை. வேறு
மாநிலங்களில் இருந்தபோது சிரமப்பட்டுக் கற்றுவைத்திருந்த "பேரலல் பார்க்கிங்" முறை இங்கு வந்தபின் மறந்தேபோனது. அதற்கு
அவசியமேயில்லாத அளவு இடவசதி பரந்து கிடக்கிறது. மிக அருகில் மிருகக்காட்சி சாலைகளும், பூங்காக்களும் இருப்பது குழந்தைகளோடு
இருப்பவர்களின் பிரச்சினைகளுக்கு மருந்து. இதை எல்லாம்விட என்னைக்கவர்ந்த விடயம் இந்த ஊரில் உள்ள "ஒனிடா பழங்குடியினர்" வாழ்வு. இரண்டு தலைமுறைகளில் மற்றவர்கள் தலைநிமிர்ந்து பார்க்குமளவு தங்களை முன்னேற்றிக்கொண்ட ஒரு இனம். தங்களுக்குத் தேவையானவற்றைத் தாங்களே உழைத்துப் பெற்றுக்கொண்ட திறமை. தங்களுடைய தனித்தன்மைகளை முழுவதுமாக விட்டுக்கொடுத்துவிடாத அவர்களின் போராட்ட குணம்.

இப்படிப் பன்முகங்கள் கொண்ட கிரீன்பேயில் தெற்காசியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. தமிழர்களும்
கணிசமாக உள்ளனர். வழக்கமான விருந்துகள், பிறந்தநாள் விழாக்கள் என்று மட்டுமே கூடிக்கொண்டிருந்த நண்பர்களில் சிலருக்கு இங்கு தமிழ்
நிகச்சிகளை ஏற்பாடு செய்யவெண்டுமென்ற ஆர்வம் பிறந்து இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்கத் தன்னார்வத்தில் சிறிய அளவில் துவக்கப்படிருக்கும் இம்முயற்சி தொடர்ந்து செல்லவேண்டுமென்ற ஆர்வம் எல்லோர் மனதிலும் அரும்பியிருக்கிறது. குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தருவது, தமிழ் நூல்கள் வாசிப்பது, வாசிப்பதைப் பகிர்ந்துகொள்வது என்று திட்டங்கள் வகுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. முதன்முதலாக ஒரு
பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் துவக்கலாமென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நண்பர்கள் தமிழில்
பேசவேண்டுமென்று ஆர்வத்தோடு இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். குழந்தைகளும் பெருமளவில் இருப்பதால் எளிய தமிழ்ப் பாடல்களைப்
பாட இசையறிந்தவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். சாப்பாடு சம்பிரதாயங்களின்றி தாய்மொழியில் பேசியும், கேட்டும் இருக்க மட்டுமே
என்று முடிவாகியிருக்கும் அம்முதல் சந்திப்பில் இடம் பெறும் பட்டிமன்றத்தின் தலைப்பு "கடல்கடந்து வந்து பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?" என்பது.

கடல்கடந்து வாழ்கின்றவர்களே தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் அறிந்ததைப் பொருத்தமான உண்மைகளோடு அலசினால் நன்றாக
இருக்கும் என்ற யோசனையில் இப்படி ஒரு தலைப்பு. ஆயிரம் கேள்விகளோடும், சமாதானங்களோடும், அவ்வப்போது துளைத்தெடுக்கிற
குற்றவுணர்வுகளோடும், ஏற்பட்டுப்போன பள்ளங்களைக் கைவசமுள்ள மண்ணிட்டு நிரப்பும் அவசர நிறைவுகளோடும் புலம்பெயர் வாழ்வுக்குள்
புகுந்திருக்கிறவர்களுள் நானும் ஒருத்தி. இந்த விவாதத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் தமிழர்கள்தான் கலந்துகொள்கிறார்கள். அதிலேயே
உலகம் முழுதும் வாழும் புலம்பெயர்ந்த நண்பர்களின் கருத்துக்களையும் பதிவு செய்ய முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அப்படி அனைவரும்
சந்திக்கும் தமிழ்மணத்தில் கேட்காமல் வேறு எங்கு இதைக் கேட்பது? நண்பர்களே! நீங்க என்ன நினைக்கறீங்க? கடல்கடந்து வந்து நாம் பெற்றது
அதிகமா? இழந்தது அதிகமா?

Sunday, May 07, 2006

சும்மாதான் இருக்கிறேன்!




சத்தமான அழுகை முடிந்தபின்னும் விசும்பலை நிறுத்தாத குழந்தை மாதிரி இன்னும் முழுதுமாய் விட்டுப்போகாமல் இருக்கிறது இங்கு குளிர். நல்ல வெயிலென்று வெளியில்போய்ப் பின் திடீரென வீசத்துவங்கும் குளிர்காற்றுக்கஞ்சி நினைத்த தூரம் நடக்க முடியாது திரும்பிவருவதும் நிகழ்கின்றன, எனினும் நடத்தலை நிறுத்துவது விருப்பமாயில்லை. வாழ்வின் தத்துவத்தை இதனோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் சரியென்றுதான் தோன்றுகிறது. இயக்கமற்று இருக்க உயிர்ப்புள்ள மனிதனாலும் மனதாலும்
முடிவதில்லை எப்போதும்.

விடுதலையின் அருமையை உணர வீட்டிற்குள்ளேயே முடக்கிப்போடும் குளிர்காலம் உதவியாய் இருக்கிறது. சென்ற வருட வசந்தகாலமும் இப்படித்தான் இருந்திருக்கவேண்டும். ஆனால் அப்போது மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த இந்தியப் பயணம் குறித்த உற்சாகம் இங்கிருந்த எதையும் ஆற அமரக் கவனிக்கும் பொறுமையை வழங்கியிருக்கவில்லை. எங்கிருக்கிறோமோ அங்கு அப்போது மனத்தாலும் இருக்க முடிபவர்களுக்கு வாழ்வு இன்னும் கொஞ்சம் இனிமையானதாக இருக்கும். ஏறியமர்ந்து
கிளம்பி ஓடும் ரயிலிலும், விட்டுவந்த மனிதர்களைப் பற்றிய சிந்தனைகளில் மூழ்கிக்கிடக்கையில் ரசிக்கப்படாமல் தவறிப்போய்விடுகிறது ஒருகையால் அவிழும் கால்சட்டையைப் பிடித்துக்கொண்டும் மறுகையால் ரயிலில் செல்பவர்களுக்குக் கையசைத்து மகிழும் பாதையோரச்சிறுவனின் பாசாங்கற்ற மனமும் சந்துப்பல் சிரிப்பும். இப்படி எத்தனையோ?

அன்றாட அலுவல்களைத் தவிர வேறெந்தத் திட்டமிடல்களோ அவற்றின்பின்னால் பிடரி தெறிக்க ஓடும் நிர்ப்பந்தங்களோ
இன்றி இருப்பது இயற்கையோடு இயைந்து கிடக்க ஒத்துழைக்கிறது இப்போது. பனியைக் குடித்துக்குடித்துச் சலித்துக்கிடந்த மரங்கள் மெல்லத் துளிர்க்கின்றன. வெய்யில் அடிக்க அடிக்க ஒவ்வொரு இலையும்
வெட்கப்பட்டுக்கொண்டே வெளிவருகிறது.மாதக்கணக்காய்ப் பூமிக்குக் கிழே முச்சடக்கி இருந்த புற்கள் மூழ்க்கிக்கிடந்தாலும் அழுகிப்போகாதிருந்த வேர்களைத் தட்டியெழுப்பி மேலே கொஞ்சம் கொஞ்சமாய் எட்டிப் பார்க்கின்றன. பல மௌனப் பனி இரவுகளுக்குப்பின் பச்சையை விரித்துக் கலகலவென்றிருக்கும் நிலம் காதலனுடனான அமைதியான தனிமைப்பொழுதில் எதையோ ரசித்து எதற்காகவோ வாய்விட்டுச் சிரிக்கும் கன்னிப்பெண்ணொருவளை நினைவூட்டி நிற்கிறது. நிலத்தைப்
பெண்ணோடு ஒப்பிட்டு ரசிக்க முடிந்த ஒருவன்தான் நிலமகள் என்றும் பூமித்தாய் என்றும் பெயர்சூட்டி மகிழ்ந்திருப்பானோ?

புறப்பட்டுவிட்டார்கள் மனிதர்கள் பச்சையைப் பார்த்தபடி பாட்டும் கேட்டபடி காலையிலும் மாலையிலும் நடக்கவும், ஓடவும். உடற்பயிற்சி உடைகள்தான் நிரம்பியிருக்கின்றன இப்போது இங்கு துணிக்கடைகளில். "March wind brings April shower; April shower brings May flowers" என்ற வரிகளோடு பொது நூலகங்களில் குழந்தைகளுக்கான கதை சொல்லும் நேரங்கள்
துவங்கியிருக்கின்றன. "வால்மார்ட்" போன்ற கடைகளுக்கு வெளியே பாலோடும், தயிரோடும் மட்டுமின்றிச் செடியோடும்,
செடித்தொட்டியோடும் செல்லும் பலரைப் பார்க்க முடிகிறது. மனிதனுக்குத்தான் முறையான வசந்தகால ஆரம்பத்தேதி
தேவையாயிருக்கிறது. அகம் உணர்த்துகிறதா இல்லை புறம் புரியவைக்கிறதா எனத் தெரிந்துகொள்ளமுடியவில்லை இந்த அணில்களுக்கும், பறவைகளுக்கும். எங்கும் ஓடியாடியபடி உள்ளன அவை. எங்கிருந்தனவோ இந்த முயல்கள் இவ்வளவுகாலம்? பட்டுப்பாதம் எடுத்துவைத்துப் பதுங்கிப்பதுங்கி நடந்துகொண்டிருக்கின்றன புல்வெளிகளில். அவற்றிற்குக் குடைபிடித்தபடி நகர்கின்றன மேகங்கள்.

சுற்றிலும் நிகழும் இச்சூழ்நிலை மாற்றங்கள் தரும் இதமான மனநிலையில் ஏதாவது செய்யலாம்தான். தூரத்துத் தோழியைத் தொலைபேசியில் பிடித்து அங்குள்ள பச்சை நிலவரம் பற்றி விசாரித்துக்கொண்டே தமிழனுக்கும் இந்தப் பசுமை நிறத்துக்குமுள்ள தொடர்பு பற்றிப் பேசலாம். தலைவாழை இலைபோட்டுச் சோறிட்டுத் தாம்பூலம் தந்து வாய் சிவக்க வைத்து,
பச்சை மட்டைகளால் பந்தலிட்டுத் தோரணமாய்ப் பசும் மரங்கள் அழகுக்குக் கட்டிவைக்கும் கலாசாரம் பேசலாம். பசுஞ்சாணமிட்டு மெழுகிய வாசலில் கோலமிட்டு மகிழ்ந்த நாட்களை நினைவுகூறலாம். நீண்ட நாட்களாய் எழுத நினைத்துத் தள்ளிப்போட்டுக்கொண்டுவரும் ஒரு கவிதையை எழுதி முடிக்கலாம். விரும்பி வாங்கிவைத்துப் போடாமல் கிடக்கும் ஒரு
உடையைப் போட்டுக்கொண்டு அழகு பார்க்கலாம். ஆனால் எதுவும் செய்யாமல் சும்மாதான் இருக்கிறேன் நான் சுற்றிப் படரும் பசுமையும், இயற்கையின் எழிலும் எனக்குள் எறியும் ஒவ்வொரு கல்லுக்கும் கிளம்பும் அலை வளையங்களை மட்டும் எண்ணிக்கொண்டு, படத்திலிருக்கும் பெண்ணைப்போல!