நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Friday, August 31, 2007

மதம் தின்னும் மனிதன்

இருந்த இடத்திலிருந்தும் சுவாசிக்கும்போதும் கண்ணுக்குப்புலனாகாத ஆக்சிஜனைப்போல் விரவியிருக்கிறது அது வாழ்வைத் துளைகளாகப் பகுத்தபடி. பிறந்து பெயரிடப்பட்டபோதும் கடைசியில் மடிந்து அடக்கமாகும்போதும் அது பெயரின் தொனியாகவும், சடங்குகளாகவும் தன் பாரத்தை அழுத்திய, அழுத்தும் ஒரு பாறையாய் இருக்கும். இடைப்பட்டகாலத்திலும் அப்பாறையைப் புரட்டிஎறிந்து நகரும் நெம்புகோல் இருப்புக்கான சாத்தியங்களும் எளிதானவையல்ல. எங்கிருந்தோ உருட்டப்படும் அப்பாறை தன் வட்டத்திற்குள்ளும் வந்துவிழுந்தாலும் கிடைக்குமொரு சந்தில் மெல்ல ஊர்ந்து அப்பால் நகர்ந்துவிடுவதே
எறும்புகளுக்கான சாத்தியம். மதங்களை விட்டு விலகியிருப்பதும் அப்படியே.

தனக்கான அடையாளத்தை மதங்களாலும் சாதிகளாலும் காட்டிக்கொள்வதில்லை மண்ணும் மலையும் கடலும் காடும். ஆனால் அவற்றை ஆக்கிரமிக்கிற மனிதன் புகுத்துகிறான் அவற்றிற்கும் அப்படியொரு அடையாளத்தை.
இசுலாமிய நாடென்கிறான். இந்துக்களின் பூமி என்கிறான். கிறித்துக்களின் புண்ணியத்தலம் என்கிறான். மதச்சார்பின்மைகளை முகவரி அட்டைகளாகப் பறிமாறிக்கொண்டே வலுத்தவன் வாழும் இடங்களில் இளைத்தவனை அடிக்கிறான். எல்லாக்காயங்களும் வெளித்தெரிந்துவிடுவதுமில்லை. கொசுக்கடித்த தடயத்தைக் கத்திகளால் கீறிக்கொண்டு தன்னை இப்படி இரத்தம் பெருக வதைத்துவிட்டான் இன்னொருவன் என்று ஊர்கூட்டிக்கொண்டே பார்க்கக் கண்களற்ற இடமொன்றில் வைத்து இன்னொருவனுக்குத்தான்
உள்குத்து விட்டதை இறுக மூடிமறைத்துக்கொள்ள எந்தக் கடவுளும் கற்றுத்தந்ததாகத் தெரியவில்லை. இவனின் இத்தனை வித்தைகளைப் பார்த்தபடியும் சும்மாயிருக்கத்தான் கடவுளென்றால் கடவுள் என்று ஒன்று இருக்கிறதாவெனவும் தெரியவில்லை. கடவுள் என்பது ஒரு அனுபவம் என்றால் பார்க்கும் மரங்களிடை, கத்தும் குயிலினிடை, வீசும் காற்றினிடை, வாழும் மனிதரிடை உணர்வதில் இல்லாத அமைதியில்லை. அவ்வமைதியின்
ருசியறிந்தவனுக்கு சாமிக்குச் சாத்தும் வடைமாலையோ விரதங்களோவும் கட்டாயமில்லை. ஒன்று நடப்பதற்கும், நடக்காமைக்கும் எங்கும் நேர்ந்துகொள்ளவேண்டிய கவசங்களுமில்லை. இந்தக் கவசமின்மையையேகூட தனக்கொரு ஆதாயத்திற்கென்று வெளிச்சமிட்டுப் பறைசாற்றிக்கொள்ளும் வேசங்களுமில்லை.

குழந்தைகளின் ஆசிரியை வழியில் சந்தித்தால் ஒரு நூறு கதைகளைச் சொல்கிறாள். ஒரு அணிலின் பின்னால் ஓடிய குழந்தை மரத்தில் மோதியதென்றும், உண்டுபருத்த குழந்தை ஒன்றைத் தூரியில் வைத்து ஆட்டிவிடுவது எப்போதும் அந்த நோஞ்சான் குழந்தைதான் என்றும், அன்று இறந்துகிடந்த நாயொன்றைப்பார்த்த குழந்தைகள் விளையாடுவதை மறந்து எதையோ பேசியபடியிருந்தனவென்றும் குழந்தைகள் தெருவைக்கடக்கும்போது வரும் தபால்காரப்பெண்மணி கையசைக்க மறப்பதேயில்லை எனவும் பல கதைகளைச் சொல்லியபோதுதான் இதையும் சொன்னாள். அவள் கடவுள் உலகைப் படைத்த கதையைச் சொன்னபோது ஒருகுழந்தைமட்டும் தன் காதுகளைக் கொடுக்கவேயில்லை எனவும் பிறகு காரணம் கேட்டபோது "நான் ஜீசசைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய தேவையில்லை. எனக்கு வேறு கடவுள்" எனச்சொல்லிவிட்டதாகவும் நான்குவயதில் அப்படி அவள் பேசிவிட்டது தனக்கு ஆச்சரியமெனவும் அதைப்பற்றி அவள் அம்மாவிடம் பேசவேண்டுமெனவும் அங்கலாய்த்தபடி பேசிக்கொண்டிருந்தாள் ஆசிரியை. மழலைகளுக்குள்ளும் மதங்களின் கதவுகள்.

எதிர்பாராப்பிரச்சினையொன்றில் விழுந்த பெண்ணொருத்தி மீண்டும் எழுந்து திரும்ப உதவிக்கொண்டிருந்த குழுவுக்குத் தான் முழுமையாய் எழுந்து நின்றபின் வரிசையாய் நன்றி சொல்லிக்கொண்டுவந்தாள். "நீங்கள் செய்த உதவியால் உங்கள் குழந்தைகள் நாளை பலனடைவார்கள் என்பதே என் கடவுளின் வாக்கு. நீங்கள் செய்த உதவி அவர்களின் கணக்கில் சேர்க்கப்படும்" என்கிறாள். அவள் நகர்ந்தபிறகு உறுத்தலால் உந்தப்படும் இன்னொருத்தி சொல்லித்தீர்க்கிறாள் தன் மனதை " கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே எனும் மதத்திலிருந்து வந்தவள் நான் என". மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உதவிகளிலும் மனிதநேயம் தாண்டி மதாபிமானங்களும் எட்டிப்பார்த்துக்கொள்கின்றன தலைநீட்ட இயலும் சந்துகளில்.

குண்டுவெடிக்கையில் துடித்துச்சாகும், தீவைப்புக்களில் கருகிச்சாகும், ஊர்வலங்களில் கொலையுண்டுசாகும் மதங்களின் பெயராலான கோரங்களுக்கு "அதோ ஐயப்பன்வீட்டில்தான் அந்தப் பாய் 5 ஆண்டுகளாகக் குடியிருக்கிறார். இந்த மேரிதான் பாத்திமாவுக்கு வைத்தியம் பார்த்தாள்" எனச்சொல்லும் சமாதானங்கள் பதிலாவதில்லை. கங்குகள் எங்காவது பாதுகாக்கப்படுகின்றன தேவையாகும்போது தீயாக்குவதற்கு.

மதங்களை எதிர்ப்பவன், அல்லது மதங்களைக் கடப்பவன் அவற்றைக் காப்பவர்களுக்கு எதிரியாகிறான். மதங்களின் கைகளுக்குள் கடவுள் எனும் புனித உறையிட்டுப் பாதுகாக்கப்படுகின்றன துப்பாக்கிகள். அவற்றின் பசி இலக்கு எப்போதும் எதையாவது பலிகேட்டபடி சுழல்கின்றன.

எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தாக்கப்படுவதும், அவருக்குப் பகிரங்கமாகக்கொலைமிரட்டல் விடப்படுவதும் அப்படியொரு பசியின் தற்போதைய இரை. தம் கறைகள் அத்தனையும் மறைத்தபடி தஸ்லிமாவுக்கு மட்டும் தம் கருணையைக் கரைபுரண்டு ஓடவைக்கும் இந்துத்துவப் பேனாக்களின் நீலிக்கண்ணீர் தனிக்கதை.

உலகம் இருக்கும் கிரகத்தைவிட்டு இன்னொரு கிரகத்திற்கு இடம்பெயர்ந்தாலும் அங்கும் மதங்களையும் அதன் சண்டைகளையும் அப்படியேதான் எடுத்துச்செல்வானா மனிதன்?

Friday, August 03, 2007

நர்மதா பேசினாள்

செத்துப்போனவர்கள் கனவில் வருவது இது முதல்முறை அல்ல
பலமுறை நடந்தாகிவிட்டது
மென்காற்றில் ஒரு இலை அசைவாய்
தலைகாட்டும்போதே சிலர் கலைந்துபோனார்கள் கனவோடு சேர்ந்து

கொட்டப்படும் கூழாங்கற்களாய் நான் மொழிகொண்டலைந்தபோதும்
தம்மில் அலையடிக்காமல் மௌனமாய் என் கனவில்
வெறுமனே வந்துபோனார்கள் இன்னும் சிலர்

ஆனால் நான் நடந்துபழகிய
என் பன்னிரெண்டாம் மாத வயசில் செத்துப்போன அப்பச்சி அப்படியல்ல
அவர் ஆசையாய்ப்போடும் வெத்தலையை மடித்து
அவருக்கு வாய்க்குள் திணிப்பேன் என்னுடைய அவ்வயதிலென
அம்மாயி சொன்ன கதைமூலம் மட்டுமே அவரை அறிவேனென்றாலும்
அப்பச்சி கனவில் வரும்போது பேசியிருக்கிறார்
"உங்கம்மாவையெல்லாம் படிக்கவெக்காமப் போயிட்டேன்
ஆனாலும் உன்னை அவ படிக்கவெச்சுட்டா மவராசி" என்றார்
நானோ என் சம்பாரிக்கும் பணத்திலுங்களுக்கு என்ன வேண்டுமென்றேன்
"பல்லு உளுந்துருச்சு, வெத்தலையைக் கடிக்கமுடியறதில்லை
அதைக் கொட்டிப்போட ஒரு கொட்ரா வாங்கித்தா போதும்"
எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அப்பச்சிக்குப் பிறகு
இன்று கனவில் வந்த நர்மதாதான் பேசியிருக்கிறாள்
துறுதுறுவெனப் பார்ப்பதும் இரட்டைச்சடைகளை ஆட்டுவதும்
கொஞ்சம் மணலையள்ளித் தன் பாவாடையில்போட்டுப்பின்
அதைக் கீழேகொட்டி விளையாடுவதுமாயிருந்த நர்மதாவிடம்
நாந்தான் பேச்சைத் தொடங்கினேன்
அவளுக்கு ஊரெதுவெனக்கேட்டு
"ஒரிசாவின் ஓரமாய் ஒரு கிணறுதான் என் ஊர்
பாலீத்தீன் பைகளில் சுற்றி எறியப்பட்டவள்"
எனும்போது அவள் விளையாட்டுக்களை நிறுத்தியிருந்தாள்

சிசுவாய் இறந்துபோனவள் கனவில் வளர்ந்துவிட்டாள்
அவள் ஊர் கேட்டவுடன் சேர்த்தணைத்துக்கொண்டேன்
வறண்ட தொண்டையை ஈரமாக்கச் சிரமப்பட்டுச் சேர்த்துக்கூட்டிய
எச்சிலைவிழுங்கிக்கொண்டே ஏதாவது பேசவேண்டுமென
"நீ பிறந்திருந்தால் என்ன செய்திருப்பாய்" என்று கேட்டுவைத்தேன்
"இருக்கும் இராமாயணத்தைக் கடலில் எறிந்துவிட்டுப்
புதிய இராமாயணம் எழுதியிருப்பேன்" என்றாள்
பிறகென்ன நினைத்தாளோ
"அதில் தன்னை நிரூபிக்கத் தீக்குளிக்கச்சொன்ன கடவுளை
தீயிலிட்டுப்பொசுக்கிவிட்டு வாழ்வாள் ஒரு மனுசி" என்றும் சொன்னாள்

நர்மதா கொலையில்
செத்துப்போனது
நர்மதா மட்டுமல்ல



பின்குறிப்பு:-

இதோடு தொடர்புடைய இடுகை முந்தைய "உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா"

உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா

பெண் ஒருவரைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லிக்கொள்ள முடியாதபடி உலக அரங்கில் இப்போது இந்தியா தலைகுனிந்து நிற்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரிசாவில் நயாகார் என்ற ஊரில் ஒரு பாழுங்கிணற்றிலிருந்து நாற்பது பெண் குழந்தைகளின் சடலங்கள் மற்றும் எலும்புகளைப் போலீஸார் கண்டெடுத்திருக்கிறார்கள். ஒரிசாவின் தலைநகரான புவனேஸ்வரிலிருந்து தொண்ணூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த ஊர், இப்போது ‘உலகப் புகழ்’ பெற்றுவிட்டது.

அந்தப் பகுதியில் சுமார் முப்பது தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில்தான் அந்தப் பெண் குழந்தைகள் கொல்லப்பட்டு, அந்தப் பிணங்கள் கிணற்றில் வீசப்பட்டிருக்க வேண்டுமெனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஐந்து மருத்துவமனைகளின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கருவிலிருக்கும் குழந்தை ஆணா&பெண்ணா என்பதைக் கண்டறியும் கருவிகளை அந்த மருத்துவமனைகளில் எவ்வித அனுமதியும் பெறாமலேயே, தவறான காரணத்துக்குப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.


இந்தியாவில் பெண் சிசுக் கொலையில் முன்னணியில் நிற்கும் மாநிலங்களின் வரிசையில் ஒரிசா ஐந்தாவது இடம் வகிக்கிறது. அங்கே நகர்புறத்தில் ஆயிரம் ஆண்களுக்கு எண்ணூற்று அறுபது பெண்கள்தான் உள்ளனர் என 2001 சென்சஸில் கண்டறிந்துள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வை கிராமப்பகுதிகளுக்கும் பரப்புவதற்கு ‘மொபைல் க்ளினிக்’ என்கிற புதிய யுக்தியை அங்கே இப்போது கையாண்டு வருகின்றனர். கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் சோதனைக்குப் பயன்படுத்தப்படும் ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ கருவியை மாருதி வேனில் வைத்துக் கிராமங்களுக்குக் கொண்டு செல்கின்றனர். வீடு தேடிச் சென்று பரிசோதனை செய்து, பெண் குழந்தை எனத் தெரியவந்தால் உடனே கருக்கலைப்பு செய்யவும் அந்த வேனில் வசதி செய்யப்பட்டிருக்கிறது! ஒரிசாவின் கஜபதி மாவட்டத்தில் இந்த ‘மொபைல் க்ளினிக்’ மிகவும் பிரசித்தம்.

இந்திய அளவிலேயே, ஆயிரம் ஆண்களுக்குத் தொள்ளாயிரத்து முப்பத்து மூன்று பெண்கள்தான் உள்ளனர் என்ற தகவல் 2001&ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலமாகத் தெரியவந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் அதிகரித்துவரும் பெண் சிசுக் கொலைகள் தவிர, வேறென்ன இதற்குக் காரணமாக இருக்க முடியும்? கருவில் உள்ள குழந்தை பெண்ணா&ஆணா என்பதைக் கண்டறியும் கருவிகள் புழக்கத்துக்கு வந்ததனால்தான் பெண் சிசுக்களை கருவிலேயே அழித்துவிடும் வழக்கம் அதிகரித்துள்ளது.

இதன் பொருட்டே 1994&ம் ஆண்டில் இத் தகைய பரிசோதனைகளை இந்திய அரசு தடை செய்து, சட்டம் இயற்றியது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் ஒருகோடி பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டு விட்டதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் மருத்துவ இதழான ‘லான்செட்’ அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஏழாயிரம் பெண் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்படுவதாக யுனிசெஃப் அறிக்கை கூறி யுள்ளது. 2011&ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் ஆண்டுக்குப் பத்து லட்சம் பெண் சிசுக்கள் கொல் லப்படலாம் என்றும் அந்த ஆய்வுகள், கவலையை எச்சரிக்கையோடு வெளியிட்டுள்ளன.

பெண் சிசுக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இப்போது புதியதொரு திட்டத்தை இந்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. கருவுற்ற தாய்மார்கள் கட்டாயம் அரசாங்கத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதே அந்தத் திட்டம். கருவுறுகிறவர்கள் அனைவரும் குழந்தை பெறுகிறார்களா? அல்லது இடையில் கருக்கலைப்பு செய்து கொள்கிறார்களா? இதைக் கண்டறியவே இந்த முறையை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. முதலில் பத்து வட்டாரங் களைத் தெரிவு செய்து, அங்கே இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் அந்த வட்டாரங்களில் பிறக்கும் பெண் குழந்தை ஒவ்வொன்றுக்கும் ஏழாயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுவதோடு, ஒரு லட்ச ரூபாய்க்கு இன்ஷ¨ரன்ஸ§ம் செய்யப்படும். அந்தப் பெண் குழந்தைகள் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை அவற்றின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். அந்தக் குழந்தைகளுக்குப் பதினெட்டு வயதாகும்போது மேலும் ஒரு சிறு தொகை வழங்கப்படும்.

நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ள இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு 15 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக பெண்கள்மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ரேணுகா சவுத்ரி கூறியிருக்கிறார். இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியைப் பொருத்து, இது நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்படுமெனவும் அவர் கூறியிருக்கிறார்.

‘பெண்ணைத் தெய்வமாகப் போற்றுவதே நமது மரபு’ என்று கூறப்பட்டாலும் உண்மையில், பெண்ணை சுமை யாகக் கருதும் கொடுமையே இதுவரை நடந்து வந்திருக்கிறது. இதற்கு வரதட்சணையே மிகவும் முக்கியமான காரணம் என்று சொல்லலாம்.

பெற்றோர்களோடு ஆண் பிள்ளைகளே கடைசிவரை இருப்பார்கள் என்ற எண்ணத்தால், வயதான காலத்தில் தம்மைக் கவனித்துக்கொள்ளப் போகிறவர்களென்ற நம்பிக்கையில் ஆண் பிள்ளைகளையே பெரும்பாலும் பெற்றோர்கள் விரும்புகின்றனர். பெண் குழந்தைகளுக்கு எதிராக ஊறிப்போயுள்ள இந்த மனோபாவத்தை மருத்துவர்கள் என்ற பெயரில் செயல்படும் சில கொள்ளையர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உயிரைக் காப்பதற்காகப் படித்த படிப்பை ‘கருக்கொலை’ செய்வதற்காக அவர்கள் உபயோகிக்கிறார்கள்.

பெண் சிசுக்கொலை என்ற வழக்கம் இந்தியாவில் மட்டுமல்ல... தெற்காசிய நாடுகள் அனைத்திலும் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு 1979&ம் ஆண்டில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Ôஒரு குழந்தை திட்டம்Õ பெண் சிசுக் கொலையை அதிகப்படுத்துவதில் சென்று முடிந் துள்ளதாக அந்த நாடே ஒப்புக்கொண்டிருக்கிறது. 2010&ம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் திருமணத்துக்குப் பெண் கிடைக்காத பத்து லட்சம் இளைஞர்கள் சீனாவில் இருப்பார்களென செய் திகள் தெரிவிக்கின்றன. தற்போது சீனாவில் ஆண்களைவிடப் பெண்கள் பதினேழு சதவிகிதம் குறைவாக உள்ளனர். சில பிரதேசங்களில் இந்த இடை வெளி முப்பது சதவிகிதம் அளவுக்குக்கூட இருக்கிறது.

பெண் சிசுக் கொலையில் சீனாவும், இந்தியாவும்தான் முன்னணியில் இருப்பதாக, ‘பெண் குழந்தைகளுக்கான செயல்பாட்டு குழு’ என்ற அமைப்பு குறை கூறியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அது வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது உலகில் நூறு மில்லியன் பெண்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அதில் எண்பது சதவிகிதம் பெண்கள் இந்தியாவிலும், சீனாவிலும் குறைவாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில், குழந்தைப் பிறப்பில் 100 பெண் குழந்தைகளுக்கு 105 ஆண் குழந்தைகள் என்ற நிலை காணப்படுகிறது எனக் குறிப்பிடும் அந்த அறிக்கை, சீனாவில் 100 பெண் குழந்தைகளுக்கு 117 ஆண் குழந்தைகள்; இந்தியாவில் 100 பெண் குழந்தைகளுக்கு 120 ஆண் குழந்தைகள் என்ற நிலை இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இவற்றோடு பாகிஸ்தான், பங்களாதேஷ், தைவான், தென்கொரியா, இந்தோனேஷியா, வியட்நாம் முதலான நாடுகளிலும்கூட பெண் சிசுக் கொலை வழக்கத்தில் இருக்கிறது. உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ பாதி அளவு இந்த நாடு களில்தான் உள்ளது. இவற்றில் ஏற்படும் பாலின ஏற்றத்தாழ்வு உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கையில் எச்சரித்திருக்கிறார்கள்.

கருச்சிதைவு மட்டுமின்றி, பெண் சிசுக் கொலைக்கு மேலும் பல வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. விஷம் கொடுப்பது, கழுத்தை முறிப்பது, பட்டினி போட்டுக் கொல்வது, கிணற்றில் வீசுவது போன்ற முறைகளைக் கையாண்டும் பெண் சிசுக்கள் கொல்லப்படுகின்றன. மருத்துவமனைகளில் பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு இயற்கை மரணம் அல்லது இறந்து பிறந்ததாகச் சான்றிதழ் பெறும் நடைமுறையும் வழக்கத்தில் உள்ளது. உரிய பணத்தைக் கொடுத்தால் இப்படியான சான்றிதழ்களைத் தருவதற்கு மருத்துவர்கள் சிலர் தயாராக இருப்பதாகப் பெண் குழந்தைக்கான செயல்பாட்டுக் குழுவின் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கண்டறிவதைத் தடை செய்யும் 1994&ம் ஆண்டு சட்டத்தில் 2003&ம் வருடத்தில் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். ஆண் குழந்தை பிறப்பதற்கு உத்தரவாதமளிக்கும் விளம் பரங்கள் அதன்மூலம் தடை செய்யப்பட்டன. இந்த சட்டத் தின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்வதற்கென 2005&ம் ஆண்டு தேசிய அளவில் கூட்டப்பட்ட கூட்டத்தில் எட்டு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. பெண் சிசுக்கொலையைத் தடுப்பதற்காக தேசிய அளவில் கண்காணிப்புப் பிரிவு ஒன்றை ஏற்படுத்துதல், பெண் குழந்தைகளின் பெருமையைப் பரப்பும் நபர்களுக்கு விருது வழங்குவது, மதத் தலைவர்களோடு கலந்தாலோசித்து பெண் சிசுக்கொலையைத் தடுக்கும் பிரசாரத்தில் அவர்களை ஈடுபடுத்துவது, 2010&ம் ஆண்டில் மக்கள் தொகையில் ஆண்&பெண் எண்ணிக்கை சமமாக இருப்பதற்காகப் பாடுபடுவது உள்ளிட்ட பரிந்துரைகள் அந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

மாநில அளவில் ஆலோசனைக் குழுக்களை உருவாக் கவும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்களில் செய்யப்படும் பாலின நிர்ணய சோதனைகள் பற்றிய விவரங்களை இரண்டு ஆண்டுகள் வரை அழிக்காமல் வைத்திருக்க ஆணை யிடவும், அப்போது தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அவை சரிவர நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மத்திய அரசு இயற்றிய சட்டம் அமலுக்கு வந்து ஒன்பது ஆண்டுகளான பிறகும் அந்த சட்டத்தின் கீழ் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என தெரிவித்தார். அந்த சட்டத்தின்கீழ் மார்ச் 2005 வரை நாடெங்கும் 303 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும், எவரும் தண்டிக்கப்படவில்லை.

2006 மார்ச் மாதத்தில்தான் ஹரியானா மாநிலத்தில் நாட்டிலேயே முதன்முறையாக ஒரு டாக்டரும் அவரது உதவியாளரும் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டனர். இரண்டு வருட சிறைத் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் அவர்களுக்கு விதிக்கப்பட்டன.

மத்திய சுகாதாரத் துறையில் இந்த சட்டத்துக்கான கண்காணிப்புப் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ரட்டன் சந்த் பல மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டபோது, மாநில அளவில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுக்கள் சரிவர செயல்படாதது தெரியவந்தது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்ட மாநில அளவிலான அமைப்புகள் போதுமான பணியாளர்கள் இன்றி செயலிழந்து கிடக்கின்றன என்பதையும் அவர் கண்டறிந்தார். ஆனால், இந்த நிலைமை மாற்றப்படவில்லை.

நடைமுறை ரீதியான இத்தகைய சிக்கல்கள் ஒருபுற மென்றால், அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் இன்னொரு புறம் பெரிய சவாலாக இருக்கிறது. கரு நன்கு வளர்ச்சியடைந்த பிறகே அது பெண்ணா, ஆணா என்று பார்க்க முடியும் என்ற நிலை இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. ஆனால், இப்போதோ மிக ஆரம்ப கட்டத்திலேயேகூட அதைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். பாலினத்தை நிர்ணயிக்கும் இந்தப் பரிசோதனை முறையில் இப்போது மேலும் ஒரு ‘முன்னேற்றம்’ ஏற்பட்டிருக்கிறது. கருவுற்ற பெண்ணின் ரத்தத்திலிருந்து கருவின் அணுவைப் பிரித்தெடுத்து அதைக்கொண்டு அந்தக் கருவில் இருப்பது பெண்ணா&ஆணா என்று கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தமுறை புழக்கத்துக்கு வந்தால், பெண் சிசுக் கொலையைத் தடுப்பது மேலும் சிக்கலானதாகி விடும்.

பெண் சிசுக்கொலையைத் தடுப்பதற்கென தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டத்தை பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் இந்தியாவெங்கும் நடைமுறைப்படுத்தப்போவதாக அமைச்சர் ரேணுகா சவுத்ரி கூறியுள்ளார். ஆனால், ‘‘பெண் சிசுக்கள் பெரும்பாலும் கருவிலேயே அழிக்கப்பட்டு விடுகின்றன. எனவே, தொட்டில் குழந்தை திட்டம் அதைத் தடுப்பதற்கு பெரிய அளவில் உதவிடாது’’ என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

பெண்களே உயிரைக் காப்பவர்கள், உயிரைச் சேர்ப்பவர்கள் என்று போற்றிய பாரதி, ‘‘உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா’’ என்று பாடிச் சிலிர்த்தார். ஆனாலும், அந்தப் பெண் குழந்தைகளை நாம் கருவிலேயே தொடர்ந்து அழித்துக் கொண்டிருக்கிறோம்! ஒரிசாவில் நிகழ்ந்துள்ள பெண் சிசுக் கொலைகள், தேசிய அளவில் தினந்தோறும் நடக்கும் ‘இனப் படுகொலையின்’ அங்கம்தான். இதை ஒரு தேசிய அவமானமாக நாம் கருதவேண்டும். பெண் சிசுக் கொலையைத் தடுத்து நிறுத்தும் பிரசாரம், எய்ட்ஸ் விழிப்பு உணர்வு பிரசாரத்தை விடவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து மத்திய&மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றிகள்:-

இந்தக் கட்டுரையை எழுதிய ரவிக்குமார் எம்.எல்.ஏ
வெளியிட்டிருக்கும் ஆனந்த விகடன்
.