நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Friday, January 29, 2010

நம் இசை வேறுவேறானது




இசையின் வெளியைப் பருகி உறைந்தேன்
தேனில் துவண்ட வண்டென ஆனேன்
என்றென் அனுபவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன்
அந்தப் பாடக நண்பன் நம்புவதாயில்லை
இடைவெளியின்றி
ஒட்டிப் பொருத்திய உதடுகள் துணுக்குற
அடித்தொண்டை கனைத்தொரு ஒலியை எழுப்பி
என்ன ராகமென்று கேட்டான்
பட்டுத் துணிகளால் பொத்தி வைத்திருந்த
தன் இசைக்கருவிகள் காட்டி
ஒன்றையேனும் வாசித்துக் காட்டென்றான்
தப்பட்டை லயத்தை எழவுவீட்டில்கூடப்
பார்த்திருக்க வக்கற்றவனுக்கு
இசையின் பரிபூரணத்தை எப்படி உணரவைப்பது?

******************


அவற்றின் நிறப்பொடிகள் கைநனைக்க
பட்டாம்பூச்சிகளை அனுப்பியிருந்தேன்
தட்டான்கள் வந்துசேர்ந்ததாகக் குறிப்பு வருகிறது
எல்லாவற்றையும் மாற்றிவிட
இடையில் யாரேனும் இருந்துகொண்டேயிருக்கிறார்கள்
*******************


முற்றி வெடித்த வெள்ளைச் சோளக் கதிரில்
உட்காரவும் முடியாமல் விடவும் முடியாமல்
பறந்து பறந்தேனும்
சில சோளங்களை ருச்சிபார்த்துக் கொண்டிருக்கிறது
நீலவால்க் குருவி
ஒரு மழை வருவதற்குள்ளாகவோ
அல்லது
வெட்டப்படுவதற்குள்ளாகவோதான் எல்லாமும்
****************


வானம் பகலிலும் இருட்டாக இருந்தது
சூரியன் பூமிக்கு வந்துவிட்டதாய்ச்
செய்தியில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்
எல்லோரும் வானத்திற்குக் குடிபெயர
வாகனங்கள் வந்துகொண்டிருந்தன
முதல் வாகனத்தில் கடவுள் ஏறிக்கொண்டார்
பிறகு மதங்கள்வாரியாகவும்
மதங்களுக்குள் சாதிகள்வாரியாகவும்
மக்கள் ஏறிக்கொள்ள வரிசை அமைந்தது
இனி மற்றதெல்லாம் சுலபம்தான்.

***************


Thanks for the picture:- 2.bp.blogspot.com

Wednesday, January 27, 2010

சுய விலாசம்




அறிவின் ஒளி சுடர்விட நின்றாள் ரூபி
"குருப்பிரம்மா குருவிஷ்ணு குருதேவோ"
வாயில் வரும்வரை விடவில்லை விஸ்வநாதன்
செங்கல் எடுத்துத் தந்துகொண்டிருந்தாள் மேஸ்திரிக்கு
சும்மாடு கூட்டிய தலையோடு
கண்ணப்பன் மகள் ருக்காள்
குதிரையில் நின்றிருந்த அவன் கைகளுக்கு எட்டாமல்
மூச்சுப்பிடித்துக் காலுந்தியதில்
உள்ளாடையில்லாப் பாவாடை நனைத்தது
முட்டிய மூத்திரச் சொட்டு
பதனாறு தொடங்கையில் தாலியும்கட்டி
சிண்டும் நண்டுமாய்ப் பிள்ளைகளை விட்டு
வேலைக்குப் போன கருங்கல் லாரியில்
தலை நசுங்கி முழியும் பிதுங்கினாள்

ரூபியின் நாவில் சரஸ்வதி அமர்ந்தாள்
சகல தெய்வங்களும் இவளையும்
இவள் சகல தெய்வங்களையும்
காலம் முழுக்கக் கட்டியணைத்து
கல்வியின் மேன்மைக் கனங்கள் அழுத்த
சுய விலாசத்தை எழுதிப்பதிகிறாள்
"விஸ்வநாத ஐயர்" மகள் தான் என


பளிச்சென்று தெரிகிறது
ரூபியின் சுயவிலாசத்தில்
முகவரியற்றுச்செத்துப்போன ருக்காளின்
பாவாடை நனைத்த மூத்திரக்கறை

Friday, January 01, 2010

நான் நீங்களாகாத வரை...




பார்பராவை சமீபமாகத்தான் தெரியும். அடுக்கடுக்காய்க் குடும்பங்கள் நிறைந்திருந்த அந்தப் பொந்தில் புதிதாய் வந்து சேர்ந்துகொண்டபோது யாரையும் அறிந்திருக்கவில்லை. யாரையும் சட்டென்று போய் அறிந்துகொள்ள ஆர்வமுமில்லை. வாழ்வில் நாம் உள்ளம் தொடும் உறவுகள் பலதைத் திட்டமிட்டுக்கொண்டு அறிந்துகொள்வதும் இல்லை. நல்ல வெய்யிலில் சைக்கிள் டயர் ஒன்றைக் குச்சி கொண்டு தட்டிக் கூடவே ஓடும் சிறு பிராயத்தில் எதிர்பாராமல் வரும் ஐஸ்காரனுடன் கூடவே நாலணாவும் கையில் இருந்து விடுவதைப்போலத்தான் சில மனிதர்களைச் சந்திப்பதும், ஒட்டிக்கொள்வதற்கென்று சில காரணங்களை அவர்களிடத்தில் கண்டடைவதும். பார்பராவைச் சந்திக்கவும் எந்தத் திட்டமிடுதலும் இருக்கவில்லை. சாமான்கள் வந்துகொண்டிருந்த திறந்த கதவுக்கு வெளியே வெளிர்நீலச் சட்டையும் பளீரென்ற சிரிப்புமாக நின்று கையசைத்தார். "நான் உன் அண்டை வீட்டுக்காரி, உன்னைச் சந்திப்பதில் மகிழ்ச்சி, ஏதேனும் உதவி வேண்டுமா?"...அந்தக் கண்ணாடிக் கதவுகளுக்கு வெளியேயும், உள்ளேயும் அவசரமாய் ஓடிக்கொண்டேயிருந்த மனிதர்களுக்குள் பார்பரா இப்படி நின்றுவிட்டு நடந்தார். "எனக்கும் அப்படியே பார்பரா, நன்றி". அன்றைய பேச்சு அவ்வளவுதான்.

பிறகான நாட்களில் பேசிக்கொள்ளாமலேயே தெரிந்துகொண்டது பார்பராவுக்குச் சின்னச் சின்ன வயதுகளில் ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள் என்பது. வெளியிலே குளிருக்கிதமான ஆடைகள் அணிவித்து விளையாடிக் கொண்டிருப்பார். அம்மாவைக் கத்தி அழைத்துக்கொண்டு துரத்தித் தொட்டுக்கொண்டிருப்பார்கள் அவர்கள். பனிகொட்டத் தொடங்கியிருந்த ஒரு நண்பகலில் வீடு வந்து சேர்ந்தபோது கைகளில் அளவுக்கு மீறிய பளு இருந்தது. வாசல் கதவு திறக்கத் திணறிக்கொண்டிருந்தபோது உள்ளே எங்கிருந்தோ பார்த்து ஓடி வந்து கதவைத் திறந்தார். கூடவே ஒரு மன்னிப்புக் கேட்டார் கையில் சிகரெட் வைத்துப் புகைத்துக் கொண்டிருந்ததற்காக. பிறகு அடிக்கடி கண்ணாடி வழி பார்த்தால் வெளியே புகை பிடிப்பதற்கென்றே வந்து நடந்துகொண்டிருக்கும் பார்பராவைப் பார்க்க முடிந்தது. யாரேனும் அவ்வழி கடக்க நேரிடுகிறபோது அவர் வெளிவிடும் புகை கடப்பவர் நாசியேறுமேவெனப் பதைபதைத்து மன்னிப்புக் கேட்பதையும் கூடவே. தன் சக்கர நாற்காலியுடன் தன்னந்தனியே படியேற முடியாதவருக்கு ஓடிச் சென்று உதவுவது, வண்டியை நிறுத்துவோருக்குப் பின்னாடியிருந்து போதும் எனச் சாடை செய்வது என இன்னபிற காலத்தினால் செய்யும் உதவிகள் எனவும் இருந்தார் அப்படிப் புகைபிடிக்கும் நேரங்களில்.

போகப் போகப் புரிந்தது பார்பாராதான் ஓடிஓடி மனிதர்களை நேசித்துக் கொண்டிருந்தாரே தவிர பார்பராவுக்கு யாரும் அப்படி இல்லை என்பது. ஊருக்கு நிழலாகும் மரங்களுக்கு ஏது நிழல்? பார்பரா தனியாகத்தான் இருக்கிறார். இந்தத் "தனி" என்பது ஒரு பெண்ணுக்கு எந்தத் தனியாகவும் இருக்கலாம். உறவினர்களும், நண்பர்களும் குறைவுதான். பொறுக்கப் பருக்கைகளற்ற இடத்தில் காகங்களும் கரைவதில்லை.

மாதங்களாய் வாழ்ந்ததில் பார்பரா என்னும் நல்ல மனுசியைத்தான் தெரிந்து வைத்திருந்தேன். ஒன்றுக்கும் ஆகாத ஒரு வெட்டிப் பொழுதில் அந்த இந்தியத் தோழி பார்பராவைப் பற்றிய தன் கதைகளைச் சொன்னாள். கதை சொல்வதில், அடுத்தவர் பற்றிய புனைவுகளை வரைவதில் தேர்ந்த கதை சொல்லிகள் எங்கும்...எங்கெங்கும்... மிகுந்த சுவாரசியங்களோடு அவள் சொல்லி முடித்த கதைகளுக்குப் பின்னால் பார்பராவின் பழக்கத்திலிருந்து என்னைப் பிரித்து விடும் எத்தனங்கள் இருந்தன. மௌனத்தோடு விடைபெற்றுக் கொள்கையில் அவளுக்குச் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட முடியவில்லை. நாகரீகப் போலிப் பெருஞ்சுமை கழட்ட முடிந்தால் பல நிமிடங்கள் பாக்கியம் பெற்றவை.

மிக நெடிய புகைப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாது போராடிய நண்பன் அபாயத்தை நோக்கி உடல் அடியெடுத்து வைப்பதான எச்சரிக்கைக்குப் பிறகு மருத்துவ உதவிக்குப் போயிருந்தான். ஒரு முறை, இருமுறை, பலமுறை கவுன்சிலிங் பலனேதும் தந்தபாடில்லை. இடையிலே எப்போதோ கற்றுக்கொண்ட கேவலம் ஒரு உடல்பழக்கத்தை விடுவதற்கு இத்தனை ஆலோசனைகளா? ஆமாம். பழக்கங்களில் இருந்து விடுபடல் அவ்வளவு எளிதல்ல. மீண்டும் ஒருமுறை குழந்தைப் பருவத்தை அனுபவிப்பதாகச் சொன்னான். மருத்துவர்கள் அவனை நடத்திய விதம் அப்படித்தான். எப்படியும் எந்த இதத்திற்கும் வளைந்து கொடுக்காத பழக்கத்திற்கு, ஒரு போதைக்கு மருந்தாய் இன்னொரு போதையை மருத்துவர்களே பரிந்துரைத்தார்கள். நிக்கோடின் சிகரெட்டுக்குப் பதில் நிக்கோடின் கம் என்று சில நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதன் ஆபத்து எந்த விதத்திலும் அவன் பழக்கத்திற்குக் குறைந்ததல்ல என்றாலும் குணப்படுத்தலின் ஒரு படியாய் அப்போதைக்கு வடிவம் மாற்றப்பட்டது. மீண்டும் மீண்டும் மருத்துவ மனைப் படையெடுப்புகள், ஆலோசனைகள். கடைசியாகவும் எல்லாம் எடுத்துவிட்ட பின்பு ஒருநாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நா வறண்டு, வாய் உலர்ந்து எதையாவது தந்தே ஆகவேண்டுமெனக் கிறுகிறுத்து ஆடுகிற மூளையைச் சரிக்கட்டியே ஆக ஒயின் ஒரு பெக் என்று அவன் மருத்துவ முன்னேற்றம் போய்க்கொண்டிருக்கிறது. சிகெரெட் கம்பெனிக்காரன் காசு சம்பாதிக்கிறான். சிக்கிக் கொள்பவன் இந்தப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்.

அவனோடு உரையாடிவிட்டு வரும் வழியெங்கும் மனம் அசைபோட்டுக்கொண்டு வந்தது....."ஒரு ஏழு வருட உடல் பழக்கத்தை உதறிவிட முடியாது விடுதலையாவதில் இத்தனை சிரமங்கள் இருக்கும்போது மனப்பழக்கங்கள் அதுவும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஊறிப்போன கசடுகளைக் கழுவுதல் எளிதா என்ன? அப்படிக் கழுவ வேண்டுமெனில் போதையிலிருந்து மீண்டவன் போதையில் கிடப்பவனை அணுகவேண்டிய வழிமுறைகள் என்னென்ன? போதைக்குத் திட்டமிட்டே அடிமைப்படுத்துபவனுக்கும், அதில் ஒரு ஈசலைப் போல் விழுந்துகிடப்பவனுக்கும் வேறுவேறு வழிமுறைகள் அறியாத மருத்துவம் எதை நோக்கிய பயணம்? சுற்றிக் கொண்டிருந்த மனதைக் கூட்டிக்கொண்டு வந்து படுக்கையில் விழுந்தபின்பு ஒரு சுற்றுத் தூக்கம் முடிந்திருக்கும். சுவர்களைத் தாண்டி இருளைப் பிளந்து சீரான இடைவெளிகளில் அதிர்வதும் அடங்குவதுமாய் இருந்தது பார்பராவின் இருமல்.

அப்போதுதான் கேட்டுவிட்டு வந்திருந்த நண்பனின் நிகழ்வும், பார்பராவை நம்பி யாருமற்றுக் கண்களில் உலகைத் தேடி வளரும் பிஞ்சுகளும், விபரீதக் கனவுகளுமாய்க் கண்களில் வந்துபோய்க் கொண்டிருந்தன மீதித் தூக்கத்தில். காலையில் கதவு திறந்து சந்தித்துக்கொண்டபோது பார்பரா மீண்டும் புகைத்துக் கொண்டிருந்தார். "எப்படியிருக்கிறீர்கள் பார்பரா?".....அவரிடமிருந்து புன்னகை. பதில்களற்ற பதில் ஒன்றைச் சொல்ல புன்னகையே உகந்தது. "நீங்கள் இந்தப் புகைப்பழக்கத்தைக் கைவிட முயற்சிகள் எடுத்துக்கொள்ளலாமே பார்பரா, நேற்று இரவு நிறைய இருமிக் கொண்டிருந்தீர்களே?".... "மன்னிக்கவும், தூக்கம் பாதிக்கப்பட்டுவிட்டதா? முயல வேண்டும்தான்....நன்றி...ஆனால்.....வேண்டாம்...என் பிரச்சினை உனக்குப் புரியாது, வருகிறேன் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்க வேண்டும்" பார்பரா மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன். சரிதான் பார்பரா...நான் நீங்களாகாத வரை எனக்குப் புரியாதுதான்....பார்பராவிடம் முதன்முறையாக மன்னிப்புக் கேட்கத் தோன்றியது. என்றாலும் இன்னொருநாள், பிறகொருநாள், அதற்கும் பிறகொருநாள் என உங்களிடம் பேசிக்கொண்டுதானிருக்கப் போகிறேன் இந்தப் போதையை நிறுத்துவதற்காக. என்னால் காத்திருக்க முடியும் உங்களை நானும், என்னை நீங்களும் புரிந்துகொள்ளும் புள்ளி வரும்வரை...