நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Friday, December 29, 2006

அனைவரும் சமமா?

சில மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கும்முகமாக சக்தியில் "கற்றதனால் ஆன பயனென்ன? எழுத ஆரம்பித்துப் பின் நண்பர் செந்தில்குமரன் அவர்கள் அதில் திருநங்கைகள் பற்றிச் சிலகுறிப்புக்களை இட்டிருந்ததால் அதன் தொடர்பாக எழுந்த எண்ணங்களை ஒரு இடுகையாக இட்டிருந்தேன். அதில் அரச இயந்திரமான ஒரு மாநகராட்சி அலுவலகம் வரிவசூலிக்க அரவாணிகளைப் பயன்படுத்தியவிதம்பற்றியும் சுட்டியிருந்தேன். இன்று வெளிவந்திருக்கும் ஆனந்தவிகடனில் "தமிழ்மண்ணே வணக்கம்" பகுதியில் எழுதியிருக்கும் தமிழ்நாடு திருநங்கைகள் சங்கத் தலைவர் ஆஷா பாரதி அவர்களும் மேற்சொன்ன விடயத்தை விமர்சித்திருக்கிறார். மேலும், அரவாணிகள் சுய உதவிக்குழுக்கள் அமைப்பதற்கு அனுமதி கிடைத்திருப்பதிலிருந்து, நம் நாட்டில் அரசியலமைப்புச் சாசனம் சொல்வதுமாதிரி உண்மையிலேயே அனைவரும் சமமா? என்பதுவரை அவர் முன்வைத்திருக்கும் கருத்துக்களை இங்கிருக்கும் இவ்விடயத்தில் ஆர்வமுள்ளவர்களின் பார்வைக்காக விகடனிலிருந்து எடுத்து இட்டிருக்கிறேன். விகடனுக்கு நன்றி.

பார்வையற்ற ஒருவர் வீதியில் போனால், கைப்பிடித்து அழைத்துக்கொண்டு போக உங்கள் நல்ல மனசு முன்வருகிறது. கால் ஊனமான ஒருவர் நடந்து போவதைப் பார்த்ததும், கண்களில் கருணை பொழிய உங்கள் டூ&வீலரில் இடம் தருகிறீர்கள்.ஒவ்வொருவருக்குள்ளும் உறைந்துகிடக்கும் மனித நேயத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் பயன்படுத்திக்கொள்கிறீர்கள். மிக மிகப் பாராட்டுதலுக்குரிய விஷயம் இது. ஆனால்...

‘ஏய்... ஒம்போது!’ ‘ஹே, உஸ்ஸ§ வருதுடா..!’ &இப்படி வார்த்தைகளால் தினம் தினம் துகிலுரியப்பட்டு அவமானத்துக்கு ஆளாகும் அரவாணிகளைப் பற்றி எப்போதேனும் உங்கள் மனிதாபிமான மனம் சிந்தித்திருக்கிறதா? இயற்கையின் அச்சுப்பிழையாகப் பிறந்துவிட்ட ஜீவன்களைப் பற்றி நீங்கள் அக்கறை கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை... ‘ஏன்தான் இந்தப் பொறப்பு பொறந்தோமோ?’ என்று அரவாணிகளைக் கூனிக் குறுக வைக்கிற அலட்சியப் பார்வை பார்க்க வேண்டாமே, ப்ளீஸ்! இரக்கத்துக்குக் கூடத் தகுதியற்றவர்களாக மாறுவதைப் போன்ற வாழ்க்கைத் துயரம் வேறென்ன இருக்க முடியும், சொல்லுங்கள்?

சீராட்டிப் பாராட்டி வளர்த்த வீடும், உறவுகளும் திடீரென்று தூக்கியெறிவதும், துரத்தியடிப்பதும் விலங்குகளுக்குக்கூட நடைபெறாது. ஹார்மோன்களின் விபரீத விளையாட்டில் ‘ஜோக்கர்’ ஆக்கப்பட்ட ஜீவன்களைப் புரிந்துகொள்கிற பக்குவம் செம்மொழி பேசும் தமிழ்ச் சமூகத்துக்கு எப்போது வரும்? ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதிலும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது’ என்று பாலியல் திரிபையும் ஓர் ஊனமாகவே பார்த்த தமிழ் இலக்கியத்தின் முதிர்ச்சி, தமிழர்களின் வாழ்வில் இன்னும் வரவே இல்லை.

மூளைக் குறைபாட்டோடு பிறந்த ஒரு குழந்தையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ள குடும்பம், ஆணாகப் பிறந்து பெண் தன்மையுடன் வளரும் ஒரு குழந்தையைச் சகித்துக்கொள்ளக்கூடத் தயாராக இல்லை. வெறுக்கும் பெற்றோர், கேலி செய்யும் நண்பர்கள் என எல்லோரையும் துறந்து வேறு வழியின்றி தன் அரவாணி சமூகத்தைத் தேடி வெளியூர், வெளி மாநிலம் சென்று பிச்சையெடுப்பதிலும், பாலியல் தொழில் செய்வதிலும் மொத்தமாகத் தொலைந்து போகிறார்கள் அரவாணிகள்.

‘பேடி, அலி, உஸ்ஸ§, ஒம் போது’ என வார்த்தைகளால் காயப்படுத்தாமல் ‘அரவாணி’ என்று கௌரவமாக அழைக்க வேண்டும் எனச் சமூகத்துக்கு வேண்டுகோள் வைத்து, எங்க ளுக்குப் பெயர் சூட்டியவர் ரவி என்கிற ஐ.பி.எஸ். அதிகாரி. 1997&ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம், கூவாகம் திருவிழா மேடையில், ‘அரவானின் மனைவி களான இவர்களை இனி அரவாணி என அழைக்க வேண் டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார் அந்தக் காவல்துறை உயர் அதிகாரி. ஆனால், சமூ கத்தில் அரவாணிகளை அதிகம் துன்புறுத்துவதில் காவல்துறை யினருக்கும் கணிசமான பங்குண்டு. விபசார கேஸ் முதல் கஞ்சா கேஸ் வரை வழக்குப் போட ஆட்கள் சிக்கவில்லையென்றால், அரவாணிகள்தான் ஆபத்பாந்தவர்கள். அவர்கள் மீது அக்கறை கொண்டு கேள்வி கேட்க இங்கே என்ன நாதி இருக்கிறது?

திரைப்படங்களில் குதிரைகளை, நாய் களை, பறவைகளைப் பயன்படுத்தினால், ‘அந்த ஜீவராசிகளைத் துன்புறுத்தவில்லை’ என்று ப்ளூகிராஸ் சங்கத்திடம் சான்றிதழ் வாங்கித் தந்தால்தான் அந்தப் படத்தை வெளியிட முடியும். கண்களில் விளக்கெண் ணெய் விட்டுக் கொண்டு விலங்குகள் துன்புறுத்தப்படுகின்ற னவா என்று பார்க்கிற சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கு, அர வாணிகளை வைத்து எடுக்கப்படும் அருவருப் பான நகைச்சுவைக் காட்சிகள் மட்டும் கண்களில் படவே படாது. அப்படி விலங்குகளின் மீது காட்டுகிற அக்கறையைக்கூட அரவாணிகளுக்குக் காட்ட முடியாமல் இறுகிப் போயிருக்கிறது நம் சமூகத்தின் மனம்.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரை, அவமானப்படுத்தும் நோக்கத் துடன் அந்தச் சாதியின் பெயரைச் சொல்லித் திட்டினால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். ஆனால், ‘டேய் ஒம்போது’ என்று எல்லோரும் திரும்பிப் பார்க்கும்படி கூப்பிட்டால், அதற்குப் பெயர் நகைச் சுவை. ஒரு பெண்ணை வார்த்தைகளில் கிண்டல் செய்தாலே ‘ஈவ் டீஸிங்’ வழக்கில் கடுமையாகத் தண்டிக்க முடியும். ஆனால், அராவணி களின் உடலைத் தொட்டுப் பலருக்கு முன்னால் பாலியல் தொந்தரவு செய்தாலும், அது அனைவருக்கும் சிரிப்பு வரவழைக் கும் பொழுதுபோக்கு. சாதிப் பாகுபாடு பார்ப்பது, அவமதிப்பது மனித உரிமை மீறல்! அதை வலியுறுத்த அரசு, நீதிமன்றம், அறிஞர்கள், அமைப்புகள் எனப் பல ஆதரவுக் குரல்கள் உள்ளன. ஆனால், இன்னும் மனிதர் களாகவே அங்கீகரிக்கப்படாத அரவாணிகளின் உரிமை பற்றிப் பேச எத்தனை பெரிய மனிதர்கள், அரசியல் கட்சிகள், மனிதநேய சிந்தனையாளர்கள் இருக்கி றார்கள்?

கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் வேலை பார்ப்பதற்கும் அரவாணியாக இருப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், இங்கே எவ்வளவுதான் கூர்மையான அறிவுத்திறன் கொண்டவ ராக இருந்தாலும், அவர் அர வாணியாக இருந்தால் வேலை பார்க்கிற சூழல் அவரை ஒப்புக் கொள்வதில்லை. கரியாலி ஐ.ஏ.எஸ். அவர்கள் இரண்டு அரவாணிகளுக்கு அரசு சார்பு நிறுவனத்தில் உதவியாளர் வேலை வாங்கித் தந்தார். கொஞ்ச நாளிலேயே அந்த வேலை வேண் டாம் என்று வந்துவிட்டனர் அவர்கள். ‘படித்தவர்களும் மனிதத் தன்மையோடு இருப்ப தில்லை’ என்பதே அவர்கள் சொன்ன காரணம்.

சமூகம் தருகிற நிர்பந்தங்களால்தான் அரவாணிகள் தவறான பாதையில் போகின்றனர். 2,000 ரூபாய் வாடகை தரக்கூடிய வீட்டுக்கு 4,000 ரூபாய் தருவதாக இருந்தாலும், அரவாணி களுக்கு வீடு மறுக்கப்படும் தேசத்தில் எங்கே போய் வாழ்வது?

மத்தியப் பிரதேசத்தில் கமலா ஜான் என்கிற அரவாணி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அதை எதிர்த்து வழக்குத் தொடுத் தார்கள். ஷப்னம் என்கிற அரவாணி அதே மாநிலத் தில் சட்டமன்ற உறுப்பின ராக மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட வழக்கிலும் சட்டம் அரவாணிகளைச் சமமாகப் பாவிக்கவில்லை. அரவாணிகளுக்கு எந்தச் சட்டப் பாதுகாப்பும் இல்லை என்பதுதான் பெரிய சோகம். ‘எங்களை ஏன் இப்படிப் படைத் தாய்?’ என்று கோயிலுக்குச் சென்றும் கடவுளைக் கேட்க முடியாது. காய்ச்சல் என்றால் மருத்துவமனைக் குப் போக முடியாது. உரிமை கேட்க நீதிமன்றமும் போக முடியாது. படிக்க பள்ளிக்குப் போக முடியாது. ஆத்திர அவசரத்துக்குக் கழிப்பிடம்கூடப் போக முடியாது. அரவாணிகள் எங்கு போனாலும் அவர்களைக் கறுப்பு நிழல்கள் போலத் துரத்திக்கொண்டு இருக்கின்றன அவமானங்கள்.

மேல் நாடுகளில் அரவாணிகளுக் குச் சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. அங்கே அவர்கள் ஒரு நிறுவனத்தில் படித்து வேலை பார்ப்பதில் பிரச்னை கள் இல்லை. சின்னச் சின்ன அவ மானங்களைத் தவிர, அவர்களும் அங்கே மனிதர்களாக மதிக்கப்படு கிறார்கள். ஆண், பெண் போல ‘பால் மாறியவர்கள்’ என மூன்றாவது ஒரு பிரிவாக அரவாணிகளைச் சட்ட பூர்வமாக அங்கீகரித்திருக்கிறது ஜப்பான் அரசு. நமது அரசாங் கங்களோ பலவீனமானவர்களைப் பலியாடுகளாக்கும் தந்திரத்தை அரவாணிகள் விஷயத்திலும் செய் கின்றன. மும்பை மாநகராட்சியில் வரி வசூல் செய்ய அரவாணிகளைப் பயன்படுத்தினர். அவர்களுக்குச் சமூக அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதல்ல நோக்கம். ‘அரவாணிகள் ஆபாசமாகப் பேசுகிறவர்கள்; அவர் கள் கடைகள், வீடுகள் ஏறி தினம் தினம் வருவதை யாரும் விரும்ப மாட்டார்கள். உடனே வரி கட்டி விடு வார்கள்’ என்கிற குயுக்தியான நோக் கத்தில் ஒரு அரசே செயல்பட்டது.

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் போல அரவாணிகளும் சுய உதவிக் குழுக்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது போதாது! இன்னும் அங்கன்வாடி பணியாளர்களாக, அலுவலக உதவி யாளர்களாக, சுய தொழில் முனை வோர்களாக அரவாணிகள் பணிபுரிய சமூகமும், அரசும் ஆவன செய்ய வேண்டும். இப்போது அரவாணி களின் பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வந்துகொண்டு இருக்கின்றன. அதற்கு, நம் சமூகம் பண்பட்டு வருகிறது என்பதல்ல காரணம்! உலகமே கண்டு அஞ்சுகிற எய்ட்ஸ் நோய்தான் காரணம். பாலியல் தொழிலாளர்களாக இருக்கிற அரவாணிகளைத் தவிர்த்து எய்ட்ஸ் விழிப்பு உணர்வுப் பிரசாரம் செய்ய முடியாது. அந்த வகையில் ஒதுக்கப் படுகிற பணம், அரவாணிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு தருகிற அம்சமாக மாறி வருகிறது. மனிதர் களுக்கு நன்றி கூற முடியாமல், எய்ட்ஸ§க்கு நன்றி தெரிவிக்க வேண்டிய துர்பாக்கியசாலிகளாக இருக்கும் அரவாணிகள் இந்தச் சமூகத்தின் முன் வைக்கிற கேள்வி ஒன்றே ஒன்றுதான்...

‘அனைவரும் சமம்’ என்று சொல்கிற அரசியல் சாசனத்தின் அர்த்தம் மிகுந்த வார்த்தைகளில் உள்ள ‘அனைவரும்’ என்ற சொல்லில் அர வாணிகளும் இருக்கிறார்களா, இல்லையா?

நாகரிகம் அடைந்தவர்கள் பதில் சொல்லட்டும்!

Monday, December 04, 2006

தேடும் முகவரிகள் (மீள்பதிவு எண் 2)

அவன் என் காதலன் இல்லை, என்றாலும் அவனோடு நான் இருந்த நாட்களைத் திரும்பிப் பார்க்கும்போதெல்லாம் ஒரு மெல்லிய சோகம் உள்ளே ஊர்ந்து நகர்கிறது. அவன் என் சகோதரன் இல்லை, என்றாலும் ஒரு ரத்த பாசத்திற்கு இருக்கும் உணர்வுகளில் கொஞ்சம் எனக்கு அவனோடு இருந்தது. அவன் என்னோடு படித்தவனும் அல்ல, இருந்தாலும் என் ஆண் நண்பர்களின் பட்டியலில் அவன் பெயருக்குத்தான் முதலிடம் கொடுக்க
வேண்டும். அவன் என் வாழ்க்கையில் ஒரு சிறு வெளிச்சம். என் எல்லைக்குள் எதிர்பாராது வந்த ஒரு சின்ன ஆச்சரியம். கூட இருந்தபோது தொடமுடியாமல் போனவனும், தொட நினைக்கும்போது, கூட இல்லாது போனவனும் அவன். காரணம் சாதி. எந்த சாதிப் பாகுபாடுகள் இந்த சமூகத்தை ஒரு சல்லடையைப் போல் துவாரங்கள் இட்டு வைத்திருக்கிறதோ, எந்த சாதீயக் காரணிகள் இங்கு மனிதம் தழைக்க விடாமல் தன்
வேலையைச் செய்து வருகிறதோ, அதே சாதிப் பிளவுகள்தான் ஒரு களங்கமற்ற பிள்ளைப்பருவத்து அன்பிலும்கூட என்னையும் அவனையும் கைகள் கோர்த்து விளையாட அனுமதிக்கவில்லை. முட்டையிலிருந்து வெளிவந்த சிறுபறவையாய், திணிக்கப்பட்டிருந்த எல்லாமிலிருந்தும் வெளிவந்து பார்த்தபின், சாதிகளின் பெயரால் விளைந்த சமூக அவலங்கள் உணர்ந்தபின், எல்லோரும் ஒன்றுதான் என்பது தெளிந்தபின் இப்போது நினைக்கிறது மனம், அவனோடு கைகுலுக்கிப் பேச ஒரு தருணம் வேண்டுமென்று. எங்கிருக்கிறானோ தெரியவில்லை.


அவன் ரமேஷ். என்னைவிடவும் மூன்று வயது சிறியவன். மழை நன்கு பெய்து விவசாயம் மிகச் செழிப்பாய் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த தலித்துகள் எல்லாம் அங்கிருந்த தோட்டங்களில் பண்ணையம் கட்டும் வேலை செய்தார்கள். பண்ணையம் கட்டுதல் என்பது ஒரு குறிப்பிட்ட தோட்டத்தில் வருடக் கணக்கில் ஒரு குடும்பமே உழைப்பது. பெருமாள் முருகனின் "கூள மாதாரி" படித்தவர்களுக்கு ஆடு மேய்க்கும் தலித் சிறுவர்களின் வாழ்க்கை தெரியும். தாங்கள் பண்ணையங்களில் வேலை செய்ததோடு, படிக்க வேண்டிய வயதில் இருந்த தங்கள் பிள்ளைகளையும் ஆடு மேய்க்கச் சேர்க்க வேண்டிய வறுமையில் பல தலித் குடும்பங்கள் இருந்தன. ஆடு மேய்க்கும் அச் சிறுவர், சிறுமிகளுக்கு இரண்டு வேளை சோறும், பண்டிகைக்குத் துணியும் தந்து வருடம் ஒரு கூலியை அவர்களின் பெற்றோருக்குத் தருவது பண்ணையச் சொந்தக்காரர்களின் வழக்கமாக இருந்தது. இது காலையில் 7 மணிக்கு வந்து இரவில் வீடு திரும்பும் சிறுவர், சிறுமியருக்கு. சில சிறுவர்கள் தாங்கள் ஆடு மேய்த்த தோட்டத்திலேயே இரவும் தங்கினால் அவர்களுக்கு மூன்று வேளை உணவும் தரப்பட்டது. இந்த உணவு அவர்களுக்குப்
பெரும்பாலும் பழைய சாதமாகவும், எப்போதாவது சூடானதாகவும் இருக்கும். டவுன் பஸ்ஸே வந்திருக்காத எங்கள் ஊருக்குள் அப்போது குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு தவிர வேறெந்த சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வும் வந்திருக்கவில்லை. எனவே குழந்தைகளை வேலை வாங்குவது மலர்களில் ஆணியடிக்கும் வன்முறை என்பதும் யாருக்கும் புரியாமல் அது ஒரு சாதாரண நிகழ்வாகவே கருதப்பட்டது.

எங்கள் தோட்டத்தில் ஆடுகள் இருந்தும் அதை மேய்ப்பதற்குச் சிறுவர்கள் அமர்த்தப்படவில்லை. ஊரில் யாருக்கும் வராத பரிந்துணர்வு எங்கள் வீட்டில்
மட்டும் இருந்தது என்று இதற்கு அர்த்தம் இல்லை. எல்லாப் பகுதிகளிலும் நான்கு புறமும் வேலி போட்ட மேய்ச்சல் நிலங்கள் இருந்ததால் ஆடுகள், மாடுகள் எல்லாம் எங்கும் வெளியில் ஓடாமல் சமத்தாக மேய்ந்து கொண்டிருக்கும் என்பதால் அதற்கென்று ஒரு தனி ஆள் அமர்த்தப்படாமல் மற்ற வேலைகளுக்கு இருந்தவரே அதையும் கண்காணித்துக் கொள்வார். இப்படிப்பட்ட காலம் ஒன்றில்தான் 11 வயது ரமேஷ் ஒருநாள் எங்கள் வீடுதேடி
வந்தான் தனக்கு ஆடு மேய்க்கும் வேலை வேண்டுமென்று. பருந்தைக் கண்டு பயப்பட்டுத் தன் தாயின் சிறகில் பதுங்க வரும் கோழிக்குஞ்சொன்றின் மிரட்சி அவன் கண்களிலும் வார்த்தைகளிலும் இருந்தன. அவன் வாழ்க்கை ஒரு பருந்தாகவே அவனைத் துரத்தியிருக்கிறது. பிறந்து சில வருடங்களிலேயே தாயும் தந்தையும் சண்டையிட்டுக் கொண்டு வேறுவேறு துணைகளைத் தேடிக் கொண்டதில் இவன் தன் பாட்டி மற்றும் சித்தப்பா
பராமரிப்பில் வளர்ந்து, பின் அவர்களாலேயே ஆடு மேய்க்கத் தோட்டம்தோட்டமாகச் சேர்த்துவிடப்பட்டிருக்கிறான். பாட்டி, சித்தப்பா இருவரும் இவன் பேரைச் சொல்லிப் பணம் வாங்கிக் கொண்டே இருந்ததால் தனக்குப் பிடிக்காத இடத்திலேயே தொடர்ந்து வேலை செய்திருக்கிறான். இவனைப் போலவே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மற்ற நண்பர்களிடம் விசாரித்து எங்கள் தோட்டத்தில் ஆடு மேய்க்கும் வேலை காலியாக இருப்பதைத் தெரிந்து, எப்படியும் சேர்ந்துவிட வேண்டுமென்று யாருக்கும் தெரியாமல் வந்திருந்தான்.
ஏதாவது பிரச்சினை வருமோ என்றெல்லாம் தயங்கிய பின்னும், அவன் சித்தப்பாவை அழைத்துப் பேசி வருடம் ஒரு கூலி கொடுப்பதென்றும், மூன்று வேளை சாப்பாடு கொடுத்து எங்கள் இடத்திலேயே தங்கவைத்துக் கொள்வதென்றும் ஒப்பந்தமாகி ரமேஷ் எங்களிடம் சேர்ந்தான். ஒரு தலித் சிறுவனுக்கு உதவி அவனை வாழ்க்கையில் உயரத்துக்குக் கொண்டுபோக வேண்டும் என்ற நோக்கமெல்லாம் அந்த முடிவில் இருந்திருக்க முடியாது.
வலிய வந்த ஆளை ஏன் போகச் சொல்ல வேண்டும், பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் எங்கள் வீட்டுப் பெரியவர்களின் கணக்காகவும் இருந்திருக்கும். அவன் வரவில் மிக மகிழ்ந்த ஆள் நான். விளையாட நான் எப்போது அழைத்தாலும், வரும்வண்ணம் வெகு அருகில் ஒருவன் இருக்கிறான் என என் மனம் கணக்குப் போட்டது.

அவன் ஒரு வித்தியாசமான அழகு. தொட்டுப் பொட்டு வைத்துக் கொள்ளும் கறுப்பில் முட்டைக் கண்களுடனும், வெள்ளை வெளேரென்ற பெரிய பற்களுடனும் குள்ளமாக இருப்பான். காலையில் எழுந்து சாணம் அள்ளுவது, ஆடு மாட்டை ஓட்டிக்
கொண்டுபோய் அடைப்புக் காட்டுக்குள் விடுவது, பின் மதியம் அவற்றிற்குத் தண்ணீர் தாகம் தணிக்க ஓடைக்கு ஓட்டிக் கொண்டுபோதல், சாண எரிவாயு அடுப்புக்கு சாணம் கரைத்து விடுதல், மீண்டும் மாலை ஆடு மாட்டைத் திரும்ப ஓட்டி வருதல் என்பன அவனுக்கு இடப்பட்ட பணிகள். ஒவ்வொன்றிற்கும் நடுவே இடைவெளி இருக்கும். அதில் அவன் விருப்பம்போல் ஓணான் பிடிக்கவும், தேன் கூட்டைக் கலைக்கவும், டிவி பார்க்கவும்
நேரம் இருந்தது. ஆனால் அவனுக்கு எல்லாம் தனியாக வழங்கப் பட்டிருந்தது. வீட்டிற்கு வெளியே உள்ள வண்டிச்சாலை எனப்படும் சிறு கூடத்தில் வீட்டுப் பெரியவர்களில் ஒருவர் கட்டிலில் படுத்திருக்க, இவன் கட்டிலுக்குப் பக்கத்தில் தரையில் தனிப் பாய், தலையணை கொண்டு தூங்குவான். ஹாலில் இருந்த டிவி அவன் பார்ப்பதற்கு வசதியாய் அந்தச் சிறுகூடத்திலிருந்து பார்த்தாலும் தெரிகிற வண்ணம் திருப்பி வைக்கப்பட்டது. முன்பு வேலை
செய்த இடத்தில் நல்ல சாப்பாடு கிடைக்கவில்லை என்று அவன் சொன்னதாலோ என்னவோ நாங்கள் சாப்பிடும் உணவையே அவனுக்கும் கொடுத்தார்கள் எங்கள் வீட்டில். நான் கொஞ்சம் கொஞ்சமாக அவனைக் கவனிக்க ஆரம்பித்தேன். பள்ளியிலிருந்து வந்த பின்னும், விடுமுறை நாட்களிலும் அவனைக் கவனிப்பதே என் வேலையாக இருந்தது. மிகச் சுத்தக்காரன். காலையில் எழுந்ததும் பல் தேய்க்காமல் காபி குடிக்க மாட்டான். உலகமே இயங்காது போயிருந்தாலும் ஒருநாளும் குளிக்காமல் இருக்க மாட்டான். அவன் குச்சி ஒடித்துப் பல்தேய்க்கும் அதே வேப்ப மரத்தில் நானும் ஒடித்துத் தேய்த்துப் பார்த்தும் அவன் பற்களின் வெண்மையை என் பற்கள் பெறவில்லை. வேலைகளை யாரும் சொல்லிச் செய்ய
வேண்டிய நிலைமையில் வைத்துக் கொள்ள மாட்டான். ஆடு மாடுகளை எக் காரணத்திற்கும் அடிக்க மாட்டான். ஆட்டுக் குட்டிகளை அடிக்கடி ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல் மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சுவான். என்ன சாப்பிடக் கொடுத்தாலும் அதில் ஒரு துண்டு எங்களின் "ஜிம்மி" நாய்க்குப் போடாமல் தின்ன மாட்டான்.


அவனும் கூச்சங்கள் விலக்கி எங்களோடு கலந்தான். என் தவறுகளை அம்மாவிடம் போட்டுக் கொடுப்பான். குளிக்க மறக்கும் பெரிய மாமாவை "அழுக்கோட படுத்தாத் தூக்கம் வருங்களா?" என்று உரிமையோடு அதட்டுவான். வீட்டு ஆண்கள் இருவர் எதற்கேனும் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தால் யாரேனும் ஒருவரை " அந்த மாட்டுக்குக் கழுத்து வீங்கீருக்கு, வந்து பாருங்க" என்று சமயம் பார்த்து அழைத்துக் கொண்டு போவான். அவனைக் கேட்காது தோட்டத்திலிருந்து வெளியாட்களுக்குத் துரும்பும் கொடுத்து விட முடியாது. "அன்னைக்கு வாங்கீட்டுப் போன ரண்டு மம்மட்டியவே அவங்க இன்னும் திருப்பித் தரலயே" என்று திருப்பிக் கேட்பான். அவனின் நடவடிக்கைகளில் நாங்கள் எங்களை இழந்தோம். என் பின்னால் சுற்றிக் கொண்டிருந்த "ஜிம்மி" கூட அவன் பின்னால் சுற்றத் தொடங்கியது. வீட்டிற்கு வரும் உறவினர்கள் அவனிடமும் நலம் விசாரித்தே திரும்புவர். எல்லா மழைநாளின் மாலைநேரத்திலும் பஜ்ஜி அல்லது போண்டா சுடும் வழக்கம் அம்மாவுக்கு உண்டு. அப்படிச் சுடும் உருளைக்கிழங்கு போண்டாவை மட்டும் அவன் எதிர்பார்க்கும் பதத்திற்கு அம்மாவால் சுடவே முடியாது. "இன்னும் கொஞ்சம் வெந்திருக்கனுங்க" " நெறைய வெந்திருச்சுங்க" இந்த இரண்டில் ஒரு விமர்சனம் இல்லாமல் சாப்பிட மாட்டான். அவன் சொல்லும் "ஸ்டைல்" எல்லோருக்கும் சிரிப்பை
வரவைக்கும். எந்த விஷயத்திற்கும் பெரிதாக ஆச்சரியப்படமாட்டான். புதுத்துணி, புதுச் செருப்பு என்று என்ன வாங்கித் தந்தாலும் வழக்கமாகச் சிறு பிள்ளைகளுக்கு வரும் குதூகலம் அவனுக்கு வராது. ஒரு ஞானியைப் போல் சாதரணச் சிரிப்பு மட்டுமே வரும். யார்மீதோ இருக்கும் எரிச்சலைத் தன்முன்னிருக்கும் எளியவர்கள்மீது காட்டுவது இயல்பான வாழ்வில், அவன் வேலைகள் சிலசமயங்களில் குறைகூறப்பட்டுச் சிலரின் பாரங்கள் அவன்மீது
இறக்கப்படும். வலிக்காமல் இருந்திருக்கமுடியாது அவனுக்கு. ஆனாலும் ஒருவர் செய்வதை வீட்டிலேயே இன்னொருவரிடம் சொல்லி அந்த இன்னொருவரின் மௌனத்திலோ அல்லது ஓரிரு ஆறுதல் வார்த்தைகளிலோ தன் காயங்களுக்குத் தானே மருந்திட்டுக்கொள்வான்.


ஒரு வருடம்தான் ஆகியிருக்கும் அவன் வந்து. பல வருடங்கள் பழகிய நெருக்கம் எங்களுக்கும் அவனுக்கும் முளைவிடத் தொடங்கியது. அப்போதுதான் எங்கள் பகுதியில் அறிமுகமாகியிருந்த அறிவொளி இயக்கப் புத்தகங்கள் பள்ளியில் தேர்ந்தெடுத்த மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு, வீட்டுக்கருகில் உள்ள படிக்காத சிறுவர், சிறுமியருக்குச் சொல்லிக் கொடுக்குமாறு அறிவுறுத்தப் பட்டோம். ரமேஷ¤க்கு டீச்சராகும்
ஆவலில் நானும் அப்புத்தகங்கள் பெற்று வந்தேன். இரவு "சித்ரமாலா", "சித்ரஹார்", ஒளியும் ஒலியும்" ஆகியன இல்லாத செவ்வாயும், வியாழனுமே அவன் என்னிடம் படிக்கத் தேர்ந்துகொண்ட நாட்கள். அது எங்கள் இருவரின் நட்பை மேலும் இறுக்கியது. ஆனால் அது நீடிக்கவில்லை. எல்லா இடங்களிலும் அவன் உழைப்பு மூலம் பணம் பெற்று வந்த அவன் சித்தப்பா எங்களிடமும் பணம் கேட்டு வந்தார். அவன் உழைப்புக்கான கூலி அவன்
எதிர்காலத்திற்கும் பயன்பட வேண்டும் எனச் சொல்லி கூலியில் ஒரு பகுதியை அவன் பெயரில் வங்கிக் கணக்கு ஏற்படுத்திப் போட்டு வைக்கும் யோசனையை எங்கள் வீட்டில் முடிவு செய்து அவனின் சித்தப்பாவிடம் சொன்னார்கள். அவர் ஒத்துக் கொள்ளாததோடு வேறு இடத்தில் ரமேஷைச் சேர்க்கப் போவதாகவும் கூறினார். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் ரமேஷை அழைத்துப் போவேனென்றே நின்றார். ரமேஷ் என்ன
செய்வதென்று தெரியாமல் குழம்பி நின்றான். அவர் சித்தப்பா தன்னுடன் வந்தால் அவனுக்கு அவன் அம்மாவைக் காட்ட முடியும் என்று சொன்னபோது அவன் அவருடனேயே போக விரும்புவதாய்த் தரையைப் பார்த்துக் கொண்டே சொன்னான். தாயைப் பார்ப்பதை விட ஒரு
குழந்தைக்கு வேறு என்ன பெரிதாகத் தோன்ற முடியும்? ஒரு வருடத்திற்கான கூலியை வாங்கிக் கொண்டு அவன் சித்தப்பா நடந்தார். ரமேஷ் பின் தெடர்ந்தான் ஏற்கனவே விழுந்த மழைத் துளிகளின் சுவடுகளில் விழுவதன்றிப் புதுஇடம் தேடிவிழத் தெம்பற்ற ஒரு குழந்தை மழைத்துளியாக. அவனையும் அழைத்துக் கொண்டு வெளியூர் வேலை தேடிப் புறப்பட்ட அவன் சித்தப்பா பற்றிப் பின் செய்திகள் வரவில்லை. எங்கு போனாலும்
பிழைத்துக்கொள்ளும் சாமர்த்தியம் ரமேஷ¤க்கு உண்டென்று எங்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார்கள். அதன்பின் வேறு ஆள் எதுவும் ஆடுமேய்க்க அமர்த்தவில்லை.


வருடங்கள் உருண்டோடின பின்னும் என்னால் மறக்க முடியவில்லை அவனின் வாக்கியங்களை. 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வந்த அன்று நான் பள்ளிக்குப் போய் மதிப்பெண் பார்த்துவிட்டுத் திரும்பிய மாலையில் வீட்டிற்கு வந்தவுடன் அவனிருக்குமிடம்தேடி ஓடினேன். ஆடுகளைப் பட்டிக்குள் அடைத்துக் கொண்டிருந்தான். அவனாக எதுவும் கேட்கவில்லை. இருந்தும் சொன்னேன், "ரமேஷ் நாந்தாண்டா முதல் மார்க். 500 க்கு 439." அவன் சலனமின்றிச் சொன்னான்,"பொய் சொல்லாதீங்க" அதிர்ச்சியில் உறைந்துபோய்க் கேட்டேன், " ஏண்டா நம்பமாட்டேங்குறே?"
அவன் திருப்பிக் கேட்டான், "நீங்கெல்லாம் படிச்சதுக்கு மொதல் மார்க் வாங்க முடியுங்களா?" அப்போது அவன் என்னைக் குறைத்து மதிப்பிட்டதற்குக் கோபம் கொண்டேன் என்றாலும் இப்போது உணர்ந்து கொண்டிருக்கிறேன், "ரமேஷ்களின் புத்திக் கூர்மைகளுக்கு வாய்ப்புக் கிடைக்காத இடங்களில் செல்வநாயகிகள் ஜெயிப்பதில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?" என்பதை.