நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, February 22, 2006

இவன் மரணத்தைக் கொலை என்றும் சொல்லலாம்

'சத்தியத்துடன் சோதனை' இது தன் வாழ்வைப் பற்றி காந்தியடிகளுக்கு இருந்த எண்ணம். அதுபோல் பாரதியின் வாழ்க்கைக்கு என்னை ஒரு தலைப்பிடச் சொன்னால் 'விடுதலையுடன் சோதனை' என்றுதான் வைப்பேன்.

அவன் உண்மைகளைத் தேடினான். தான் சில உண்மைகளைக் கண்டதாகவும் முடிவுக்கு வந்தான். 'உண்மை தெரிந்து சொல்வேன்' என்று அவற்றை எடுத்துரைக்கவும் செய்தான். அதைவிட முக்கியம் அந்த உண்மைகளின் படி வாழ்ந்திடவும் முயன்றான். தான் நம்பிய உண்மைகளை எதார்த்த வாழ்வில் காண விழைந்தபோது தனக்குத் தன்னுடனே ஏற்பட்ட முரண்களும், பிறருடன் ஏற்பட்ட முரண்களும், காலத்துடன் ஏற்பட்ட முரண்களும் எதிர்நின்றபோது நிகழ்த்திய போராட்டங்களும் காயங்களுமே அவனது வாழ்க்கை!
ஒரு படைப்பாளி என்ற விதத்தில் அவனது ஆற்றல்களும் அவற்றைச் சுமந்து நிற்கும் இலக்கியங்களும் அவனை வெற்றி
பெற்றவனாகவும், காலத்தை வென்றவனாகவும் காட்டுகின்றன. அதே வேளையில் ஒரு மனிதனாகக் காணுகின்றபோது சுயம்தேடிய தன்னுடைய வாழ்வில் அடிக்கப்பட்டவனாக, வீழ்த்தப்பட்டவனாக, நொறுக்கப்பட்டவனாகக் காண நேருகிறது.

ஐந்து வயதாக இருக்கும்போதே ஏங்கவிட்டு விண்ணுலகடைந்த தாயின் நினைவில் கசிந்த சிறுவனை விளையாடவிடாமல் தடுத்த தந்தையின் கட்டளையைச் சொல்லித்தன் இளம்பருவம் தாயும், நட்புமற்றுக் கழிந்ததைக் கூறுகிறான். தான் விரும்பிய கல்வியைக் கற்கவிடாமல், வற்புறுத்தித் திணிக்கப்பட்ட கல்வியால் நொந்துபோய் 'அய்யரென்றும்,
துரையென்றும் அன்றெனக்கு ஆங்கிலக்கலை கற்பித்த பொய்யரே! இது கேளுங்கள்! பொழுதெல்லாம் உங்கள் பாடத்தில் போக்கி மெய்யயர்ந்தேன்; விழிகள் குழிவெய்தினேன்; வீறிழந்தேன்; உள்ளம் நொய்தேன்; சுதந்திரமிழந்தேன்' என்று அவன் தன் பள்ளிப்பருவத்தை எண்ணிக் கொந்தளித்துப் பேசுகிறான்.

நினைக்க நெஞ்சமுருகும் என்றும் பிறர்க்கு எடுத்துச் சொல்ல நா நனிகூசும் என்றும் தொடங்குகிறான் தன் திருமணம் பற்றி! பத்து வயதில் ஒரு கன்னியை நெஞ்சிடை ஊன்றி வணங்கியவனுக்கு, பன்னிரண்டாண்டில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார் தந்தை! அவனுக்கு விருப்பமில்லை. 'பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட' தன் திருமணம் குறித்துப் பாரதி,
"சாத்திரங்கள் கிரியைகள் பூசைகள்
சகுன மந்திரத்தாலி மணியெலாம்
யாத்தெனைக் கொலை செய்தனர்..." என்றுகூறி திருமணம் என்ற பெயரால் தான் கொலை செய்யப்பட்டதாகக் குமுறும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.

தாயின் முகம் நினைவறியாது இருந்த குழந்தை, தந்தையையும் இழந்தான். 'தந்தை போனான் பாழும் வறுமை சூழ்ந்தது; அஞ்சாதே! என்று சொல்ல உலகில் ஒருவரும் இல்லை, உடலிலும் வலிமையில்லை. மந்த மடையர்களிடம் பொருள் கொடுத்துப் பயின்ற மடமைக் கல்வியால் ஒரு மண்ணும் பயனில்லை, ஐயோ! எந்த மார்க்கமும் தோன்றவில்லையே என்று
திக்கற்றுப் புலம்பி, 'பாருக்குள்ளே நல்ல நாடு' என்று கொண்டாடிய வாயால், அவன் 'ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டினிலே' என்று அரற்றுகிறான்.

சுற்றத்தார் ஆதரவில் வாழ்ந்து உள்ளூர் ஜமீன்தாரிடம் கையேந்திப் பிழைக்க விரும்பாமல் ஓடிவந்து, பத்திரிக்கையாளனாகி , அரசியல்வாதியாகி அடக்குமுறைச் சட்டத்திற்கு ஆட்பட விரும்பாமல், உதவிபுரிய யாருமற்ற இடத்தில் அடைக்கலம் புகுந்து, ஏற்றிருந்த அரசியலும் ஒன்றுமற்று முடிந்துவிட, இயக்கம் முடங்கி அடங்கிய அவனது பரபரப்பான குறுகிய அரசியல் நாட்கள் அதிர்ச்சியானவை.

இந்தியா, கர்மயோகி, விஜயா என்று பத்திரிக்கை முயற்சிகள் ஒவ்வொன்றாய் முறிந்து விழ விழ, எழுதத் துடித்த கைகளுக்கு வந்த தடைகளும் எத்தனை!

'சொந்த நாட்டில் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோம்' என்று கொதித்தெழுந்தவன், கடலூரில் கைதி எண் 253 ஆகி, இடர்மிகு
சிறைப்பட்டு, சென்னை மாகாண கவர்னருக்கு,
"மேதகு தங்களுக்கு நான் மீண்டும் உறுதி கூறுகிறேன். நான் எல்லாவிதமான அரசியல் ஈடுபாடுகளையும் துறந்து விட்டேன். நான் எப்போதும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும் சட்டத்திற்கு உட்பட்டு வாழ்பவனாகவும் என்றென்றும் இருப்பேன்" என்று எழுதிக் கொடுத்ததும் நம்பியிருந்த இயக்கம் தேய்ந்துபோக, நிர்க்கதியான ஒரு போர்வீரன் கையற்று நின்ற அவலம் அதிரவைக்கிறது.

எந்த எட்டயபுரம் ஜமீன்தாரைக் கேலி செய்தானோ, உறவை மறுத்து விலகி வந்தானோ அந்தச் சின்னச்சங்கரன் - பெரிய சங்கரனாகிச் சீட்டுக் கவியெழுதி உதவி வேண்டிக் கெஞ்சியதும்,
"முன்பு கவிகேஸரி ஸ்ரீ ஸ்வாமி தீஷிதரால் எழுதப்பட்ட
சரித்திரம் மிகவும் கொச்சையான தமிழ்நடையில் பலவிதமான குற்றங்களுடையதாக இருப்பது ஸந்நிதானத்துக்குத் தெரிந்த
விஷயமே. அதைத் திருத்தி நல்ல, இனிய, தெளிந்த தமிழ்நடையில் நான் அமைத்துத் தருவேன்" என்று இராஜவம்சத்து வரலாறு எழுத மன்றாடுவதும் அதிர்ச்சி தருகிறது.

பூனூல் அறுத்தவனைத் திரும்பவும் போட வைத்து நொறுக்கியது சனாதனம்! சாதியிலிருந்து விலக்கி, ஊரிலிருந்து ஒதுக்கி, உணவு கொடுப்பதைத் தடுத்து, அவனை ஒடுக்கிப் பார்த்தது அவனது சொந்த சாதி. சாதியைக் கடந்து, மதத்தைக் கடந்து மனிதரை நேசித்தவனை வெறுத்து ஒதுக்கி அவனைப் பட்டினியிட்டு ஒடுக்கிப் பார்த்தன 'சாதிமத தர்மங்கள்'. ஊருக்கு
வெளியே கஞ்சி குடிப்பதற்கில்லாமல் கிடந்த அவனது நாட்கள் கொடுமையானவை!

ஒவ்வொரு இறகாகப் பிடுங்கப்பட்டுக் கிடந்தான் பாரதி
துடிக்கத் துடிக்க!ஒடுக்கப்பட்டு...நொறுக்கப்பட்டு....
இழந்து...இழந்து...இழந்து...
அவன் இறந்தான் என்பதா?
இல்லை,கொலை செய்யப்பட்டான் என்பதா?

............................பாரதிபுத்திரன் பாரதி குறித்துச் சொன்னவை 'தம்பி நான் ஏது செய்வேனடா' என்ற நூலிலிருந்து........................

Tuesday, February 14, 2006

நீயும் நானும்

தங்கை வளர்க்கும்
செல்லப்பூனையின் கால் தடங்கள்
எங்கெங்கு பதிந்ததெனத் தெரியாமல்
வீடெங்கும் வியாபித்துக் கிடக்கின்றன
நீயும் மனதில் அப்படியே


தெருமுனையில் நின்றுகொண்டிருந்த
பெண்ணின் இடுப்பிலிருந்த குழந்தை
பொக்கைவாய் காட்டிச் சிரித்ததற்கு
இணையான பிறிதொன்றைச்
சொல்லமுடியவில்லை
உன் அன்புக்கும் அப்படியே


நடமாட்டம் குறைந்த மலைப்பாதையில்
ஆரவாரமற்றோடும் சிற்றோடை
சீரான தாளகதியில் மெல்ல நகர்வதுபோல்
நீ எனைப் பின்தொடர்ந்த நிகழ்வுகளும்அழகானவை


பாறைகளின் இடுக்கில்முளைத்த செடியொன்று
வளர்ந்து பூத்திருப்பதைப் பார்க்கையில்
என் வாழ்விற்குள் வந்த
உன்னை நினைத்துக் கொள்கிறேன்.


நான் காதலர்தினம் கொண்டாடுவதில்லையெனினும்
பரிசுப்பொருட்களாலும் வாழ்த்து அட்டைகளாலும்
தங்களைப் பரிமாறிக்கொள்கிற
காதலர்களைக் கடக்க நேர்கையில்
ஞாபகம் வந்து தொலைக்கிறது
சொற்களைத் தவிர்த்த கவிதையொன்றால்
என்னிடம் நீ பகிர்ந்துகொண்ட காதல்

ஒரு வாழ்த்து!!

அமெரிக்கா வந்து வாழவேண்டிவந்தபோது நீச்சல் தெரியாமல் குளத்தில் குதித்தது போல்தான் தொடங்கின அந்நாட்கள். பல நேரங்களில் வெறுமையை விதைத்த இவ்வாழ்விடம் சிலநேரங்களில் அதன் அருமையையும் உணர்த்தியது. கணவர் வேலைக்குச் சென்றுவிட கணிணி, புத்தகங்கள் இவைதாண்டியும் தொடர்பென்றால் இங்கிருக்கும் சில இந்தியத்தோழிகள் என்று போய்க்கொண்டிருந்த நேரத்தில், முதன்முதலாய் முழுக்க முழுக்க அறிமுகமற்ற அந்நியர்களுடன் (மருத்துவரைத் தவிர) மூன்றுநாள் வாழும் நிலை மருத்துவமனையில் பிரசவத்திற்குச் சேர்ந்தபோது ஏற்பட்டது. ஊரிலிருந்து உதவிக்கு யாரும் வரமுடியாது விசா பிரச்சினை. தவிப்போடு அருகில் கணவர். சுகப்பிரசவம் என்று 20 மணிநேரம் காத்திருந்து பின் கணநேரத்தில் குழந்தையை ஆபத்தில்லாமல் காப்பாற்ற அவசரகதியில் அறுவைசிகிச்சை. வலி புரட்டிப்போட்டது உடலை மட்டுமின்றி மனதையும். அந்நேரத்தில் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டே குழந்தையைத் தூக்கியது மட்டும்தான் தெரியும். அசதியும் மருந்துகளும் தந்த ஆழ்ந்த நித்திரைக்குப்பின் விழிக்கையில் கையில் மாத்திரைகளுடனும் இதழ்களில் புன்னகையோடும் செவிலி. வாங்கி வாயில்போட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்தால் "good job". பின் கழிவறைக்கே சென்று சிறுநீர் கழிக்க விருப்பம்கொண்டு நடக்க உதவி கேட்டபோது, வந்த இன்னொருவரிடமிருந்து "you are doing great job". குழந்தைக்குப் பாலுட்டினால் " good job", மாலையில் அறைக்கு வெளியே நடக்கும்போது எதிர்ப்பட்ட ஒருவரிடமிருந்து "I am proud of you, you are great". மூன்று நாட்களும் அதிகம் கேட்ட வார்த்தைகள் "good job". மருந்துகளால் உடம்பு தேறிவிடும் என்றாலும், மனம் உற்சாகமடைய இவ்வார்த்தைகளும் அவை சொல்லப்பட்ட விதமும் பெரிதும் உதவின அன்று.

அதற்கு முன்பு எப்படியிருந்தேன் என்பது எனக்குச் சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் அதற்குப் பின் என்னிடமிருந்து அதிகம் வெளியேறும் ஆங்கில வார்த்தைகளில் ஒன்றாய் "good job". இவ்வளவு பீடிகை எதற்கென்றால் இப்பதிவு அப்படி ஒரு வாழ்த்துச் சொல்லவே. இணையத்தில் எழுத ஆரம்பித்து வேறு தளங்களுக்கும் பயணித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு, வேறெங்கும் எழுதாவிட்டாலும் தத்தம் வலைப்பதிவுகளிலேயே மொழியோடும் கருத்தோடும் அற்புதமாய் விளையாடும் நண்பர்களுக்கு, அவர்களின் பதிவுகளிலேயே போய் பின்னூட்டமிடாதிருந்தாலும் யாருக்கும் தெரியாது கைதட்டியிருக்கிறேன். அதிலும் பெண்பதிவர்களென்றால் மனம் இன்னும் கனிகிறது. ஆழமாக சிந்திக்காதவர்களின் பார்வையில் பெண்களுக்கு இன்று தடைகள் அதிகமில்லாததுபோல் தோன்றலாம். ஆனால் அவை பார்த்தவுடன் தெரிந்துவிடும் அளவில் நிறுத்தியிருக்கும் கார்மீது கொட்டிக்கிடக்கும் பனிமணலாயின்றி அருகில்வரும்வரை கண்ணுக்குத்தெரியாமல் காண்ணாடிகள்மீது அப்பிக்கிடக்கிற பனிப்படலமாய் (நன்றி - சுந்தரவடிவேலின் சமீபத்திய பதிவு ஒன்று) இறுகியிருக்கின்றன.திருமணத்திற்கு முன் தத்தம் தனித்திறமைகளில் பிரகாசிக்கும் பெண்கள் எல்லோருக்குமே திருமணத்திற்குப்பின்னும் அப்படியே தொடரமுடியாமல்போவதன் காரணங்களை அலசினால் பார்க்கலாம் இச்சமுதாயத்தில் இன்னும் ஆழமாக இருக்கிற ஆணாதிக்க வேர்களை, அவை பெண்களைச்சுற்றிப் பின்னியிருக்கும் வலைகளை. இவ்வலைகளைச் சுமந்துகொண்டே ஓடும் வலுவுடனோ அல்லது அவற்றை அறுத்தெரிந்துவிட்டோடும் துணிவுடனோதான் அவர்கள் வெளிவரமுடியும்.

இணையத்தில், தமிழ்ப்பதிவுகளில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெண்களின் ஆர்வமும், தேடலும்கூட அப்படியானவைகளில் ஒன்றுதான். வெவ்வேறு சூழல்களில் இருந்துகொண்டு அவர்களுக்குக் கிடைத்திருக்கும் இணையம் என்னும் துடுப்பைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒடுக்கப்படுபவர்களுக்காகவும், உரிமை மறுக்கப்படுபவர்களுக்காகவும் அப்படி ஏதுமற்றவர்கள் குரல்கொடுப்பதும் மகிழ்ச்சிதான் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களே அவர்களின் பிரச்சினைகளைப் பேசும்போதுதான் அதற்கான சரியான தீர்வுகளையும் கண்டடைய முடியும். அவ்வகையில் பெண்களின் உண்மையான பிரச்சினைகள் பற்றி அவர்கள் இன்னும் நிறையப் பேச வேண்டியிருக்கிறது. பேச விழைபவர்கள் தங்களுக்கெதிரான தாக்குதல்களிலிருந்தும், அரசியலிலிருந்தும் தற்காத்துக்கொண்டு தொடர்ந்து தம் இருப்பை நிலைநாட்டுவதும் முக்கியமானதாக இருக்கிறது. அப்படித் தொடர்ந்து இங்கிருக்கும் தோழியர் அனைவருக்கும் ஒரு "good job" சொல்லவேண்டும்போல் தோன்றியதால் இப்பதிவு. நேரமின்மை காரணமாகவும், தாக்குதல்களில் விளையும் சோர்வு காரணமாகவும் இடைவெளி விட்டிருக்கின்ற பெண்பதிவர்கள் மீண்டும் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ள இப்பதிவு. பலவருடங்களாய் இணையம் மூலம் எழுத்தை வளர்த்தெடுத்து சமீபத்தில் மூன்று நூல்களை ஒரே சமயத்தில் சிங்கப்பூரில் வெளியீடு செய்திருக்கின்ற ஜெயந்தி சங்கருக்கு மகிழ்வோடு வாழ்த்துச் சொல்லவும் இப்பதிவு.

இன்னொருமுறை இதை எழுதமாட்டேன்....

இன்னுமொருமுறை இப்படி முன்னுரை எழுத நேர்ந்துவிடக்கூடாதென்ற சிந்தனையோடே இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.பிறகென்ன? முடிவெடுத்து வலைப்பதிவொன்றையும் ஆரம்பித்து, முன்னுரையோடு இன்னும் மூன்று பதிவுகளையும் போட்டுவிட்டுக் காணாமல்போய் வாழ்வின் முக்கியமான திருப்பங்களுக்குள் தொலைந்திருந்துவிட்டுத் திடீரென எதிர்பாராத தருணங்களில் என்னையே நான் கண்டெடுக்கும் அற்புதம் வாய்க்கையில் அந்நினைவுகளை அப்படியே சேமித்துக்கொள்ள எழுத எண்ணும்போது ஏற்கனவே தொழில்நுட்பத் தகராறுகள் செய்துகொண்டிருந்த வலைப்பக்கம் முழுதுமாய்க் கண்ணை மூடிவிட்டதால் இப்போது மீண்டும் புதிய பதிவுக்குப் புதிய முன்னுரை எழுதும்போது எனக்கு வந்திருக்கும் பயம் இயல்பானதுதானே?

எழுதும் நேரம் இல்லாதபோதும் தமிழ்மணத்தைப் பார்வையிடும் நேரம் அவ்வப்போது கிடைத்துக்கொண்டிருந்ததே மகிழ்ச்சியாக இருந்தது. நிறையப் பதிவுகள் நிறையச் சிந்திக்க வைத்தன. "man may come; man may go; but the brook goes on for ever" மாதிரி அதன்பாட்டுக்குப் போய்க்கொண்டேயிருக்கிறது "தமிழ்மணம்". இன்னும் சொல்லப்போனால் புனிதங்கள் என்றெல்லாம் மாயச்சாயம் பூசிக்கொள்ளாமல் சண்டைகளோடும், சமாதானங்களோடும் வாழ்வின் எதார்த்தங்களைக் கொண்டிருக்கிறது இது. பல புதிய பதிவர்களைப் பார்க்கிறேன். ஆர்வத்தோடு பல தடங்களில் பயணங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. நினைத்துப் பார்த்தால் வலைப்பதிவு என்பது எவ்வளவு வசதியென்ற ஆச்சரியம் வருகிறது. குடத்தில் ஊற்றிவைத்த நீரில் சோப்புக்கரைக்கப்பட்டால் மேலெழும்பும் நுரைக்குமிழ்கள் போலவே மனம் அசைக்கப்படும்போது ஏற்படும் அதிர்வுகளும் சொற்ப ஆயுள் கொண்டவை. அவற்றை உடனுக்குடன் பதிந்துவைக்கும் வசதியல்லவா இவை! ஊறப்போட்டு உருவம்கொடுக்குமளவு வளர்வதற்கான பயிற்சிப்பட்டறையும் இவை!

எனக்குள் எழுந்தடங்கும் நுரைக்குமிழ்களுக்கும் நீண்ட ஆயுள்தேடும் முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டதுதான் என் முந்தைய "நிறங்கள்" வலைப்பதிவு. செல்வராஜ் போன்ற நண்பர்கள் அதற்குத் தொடர்ந்து உயிர்ப்பைக் கொடுக்கப் போராடியும் அது "தினமலரில்" தன் பெயர் வெளிவந்த கையோடு ஆயுளை முடித்துக் கொண்டது:)) ஆனாலும் தொடர்ந்தெழும்பும் நுரைக்குமிழ்களை என்ன செய்வது? எனவே இப்போது மீண்டும் "நிறங்கள்" வேறு வடிவத்தில். இதற்கிடையில் மின்னஞ்சலில் என்னைத் தட்டியெழுப்பி மீண்டும் எழுத இழுத்த நண்பர்களின் அன்பை நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன் இந்நேரத்தில்.