நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Tuesday, February 27, 2007

துகள்களின் வெளி

கடந்த ஒருவாரமாக வலைப்பதிவுகளில் பின்னவீனத்துவ வகுப்புகளுக்கு விடாமல் போய்வந்தேன் என்பதையும் வசந்தனின் அறிவியல்பூர்வவகுப்பில் அவரால் நாந்தான் முதல்மாணவியாக அறிவிக்கப்ட்டேன் என்பதையும் பெருமையுடன் அனைவருக்கும் தெரிவித்துக்கொண்டு எனக்குப் பின்னவீனத்துவத்தைப் புரியவைக்கும் வகையில்
அழகாகவும் அருமையாகவும் வகுப்புகள் எடுத்த டிசே, அற்புதன், சுசிந்தன், கும்பரோ பூஜே, வகுப்புகளிலேயே மிகப் பின் நவீனமாக ஒலிப்பதிவு மூலம் சொல்லிக்கொடுத்த வசந்தன், எனக்கு வாழ்த்துச்சொல்லிப் பெருமைப்படுத்திய சயந்தன் எல்லோருக்கும் என் நன்றியைக் கீழேகாணும் கவிதை எழுதித் தெரிவித்துக்கொள்கிறேன்:)) இது எல்லாம் ஒரு கவிதையா என்று யாரும் திட்டவந்தால் அந்தப்பழி பாவமெல்லாம் என் ஆசான்களையே சேரும்:))


பறத்தலும் இருத்தலும் இயல்பாயில்லை
வடிவங்களுக்குள் அடைபட்டுக்கிடக்கிறது சுதந்திரம்
வட்டமாய் சதுரமாய் செவ்வகமாய் நாற்கரமாய்
பலமாதிரிகளுக்குள் திணிக்கப்பட்டிருக்கிறதென்றாலும்
வட்டமே பிரதானப்படுத்தப்படுகிறது இங்கு

ஒருசுடுகாட்டுப் பாடகனின் ராகலயிப்புக்களாய்
தனிமையில் கரைகின்றன விளிம்புகளின் விருப்பங்கள்
குற்ற உணர்வு எதுவுமின்றி
தம்மைத் தக்கவைக்கும் எத்தனங்களோடு
வட்டங்களை ஆள்கின்றன மையங்கள்
வருடங்கள் சுருட்டி யுகங்கள் முடிகின்றன
மையங்களின் நிறங்கள் மாறுகின்றன
விளிம்புகள் மட்டும் விளிம்புகளாகவே

ஒரு தவசியின் மௌனத்தோடு தம் விடுதலைவிண்ணப்பங்களை
மையங்களுக்கு நீட்டி அவை நகரும் திசையெங்கும்
இழுபடும் வஸ்துக்களாய் இருந்ததுபோதும் விளிம்புகள்
நூற்றாண்டுகளின் அடிமைத்தகிப்பை வெளியே துப்பட்டும் அவை
வெம்மையின் எரிப்பு மையங்களைக் கருக்கும்வரை
படரும் நெருப்பில் வட்டங்கள் மறைந்து வடிவங்கள் இழந்து பின்
துகள்களால் நிறையும் இப்பூமி

நீரில்மிதந்தும் காற்றில் அலைந்தும்
பிரபஞ்சத்தின் எத்திசையில் நகரவும்
இலகுவாகலாம் துகள்களின் சுதந்திரம்

ஆனால் வாழ்க்கையை வட்டங்களாகவே வாழ்ந்துகொண்டிருந்த
நீங்கள்
துகள்களின் வெளியைச் சூனியம் என்பீர்கள்.

Monday, February 26, 2007

எனக்குப் பணம் வேணும்

"நிலாவைப்பற்றியும், நட்சத்திரங்களைப்பற்றியும் என்னிடம் கேள்விகள் கேட்பதும், தானே உருவாக்கிய கதைகளைச் சொல்வதுமாய் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்த என் மூன்றரை வயது மகள் திடீரென இவற்றையெல்லாம் பேசுவதை நிறுத்தியிருந்தாள். யோசித்தபிறகு காரணம் தெரிந்தது. நான் அவளைப் பள்ளியில் சேர்த்துவிட்டேன். பாடப்புத்தகங்களின் சுமையில் அவள் இந்தக்கதைகளை மறந்துபோயிருந்தாள்"
- அப்துல்ரகுமான் -

"மற்ற பிள்ளைகள் எல்லாம் தலைகுனிந்து பாடத்தில் நிலைகுத்தியிருக்க ஒருவன்மட்டும் தன் பிஞ்சுக்கைகளால் கண்கள் தேய்த்து அழுதுகொண்டிருந்தான். கனிவோடு தூக்கிநிறுத்திக் கரணம் கேட்கிறேன். "உங்களின் கட்டம்போட்ட சட்டை பார்த்துச் செத்துப்போன என் அப்பா ஞாபகம். அவரும் கட்டம்போட்ட சட்டைதான் போடுவார்". தலைதடவி அமரச்செய்து முடிவுசெய்கிறேன் "இனிமேல் பாடம் நடத்த மட்டுமல்ல சட்டைபோடவும் அட்டவணை போடவேண்டும் நான்".

-கரும்பலகையில் எழுதாதவை எனும் நூலில் ஒரு ஆசிரியக்கவிஞர் -



குழந்தைகளின் உலகம் அழகானது. இரண்டு இலைகளுக்கு இடையே முளைவிடும் சிறுதளிரின் உற்சாகத்துடன்தான் ஒவ்வொரு குழந்தையும் இந்தப் பூமிக்கு வருகிறது. குழந்தைகள் அவர்களின் பெற்றோருக்குப் பெயர்சொல்லும் வாரிசுகள் மட்டுமல்ல. மிகவிரைவாய் ஓடிமறைந்துவிடும் காலச்சுழற்சியில் இரண்டு அல்லது மூன்று பத்தாண்டுகளுக்குப் பிறகு ஒரு தேசத்தின் வளர்ச்சியில் பங்கெடுக்கிறவர்கள். அந்த
தேசத்தின் அடையாளத்தை உலகுக்குச் சொல்கிறவர்கள். இன்னும் சொல்லப்போனால் முந்தையோரிடமிருந்து வாழ்க்கையை வாங்கிப் பத்திரமாக வைத்திருந்து நாளை இன்னுமொரு கைகளுக்குச் சேர்ப்பிக்கிறவர்கள். இவர்கள் முக்கியமானவர்கள். எனவே இவர்களின் நலனை மேம்படுத்துவதில் ஒரு சமூகத்துக்கு, ஒரு அரசுக்கு
நிறையப் பங்கிருக்கிறது.

ஏழெட்டுப் பிள்ளைகளைப் பெற்றுப் பாதிக்குமேல் காலனுக்குப் பறிகொடுத்து மிஞ்சியவற்றை மட்டும் தக்கவைத்துக்கொண்ட கதைகள் நம் முப்பாட்டன், பாட்டன் தலைமுறைகளில் சாதாரணம். இப்போது அளவோடு பெற்றுக் கருத்தோடு வளர்க்கும் முறைக்கு இத்தலைமுறை தாவிவிட்டாலும் குழந்தைகள் நலனில் நாம் இன்னும் குறிப்பிட்டதூரம் போகவேண்டியிருக்கிறது. அடிப்படைக்கல்விகூடப் பெறமுடியாமல் வறுமையின் காரணமாய் டீக்கடை, வொர்க்சாப், பண்ணைநிலங்கள், பணக்காரரின் வீடுகள் என வேலைசெய்து களைக்கும் குழந்தைகள், உருக்கும் வெய்யிலில் ஊர்கூடிநிற்க உறுமிமேளம் கொட்டிப் பின் சவுக்கால் தன் தோல்கீறித் தகப்பன்கள் சொட்டும் ரத்தத்தைத் தரையில் மல்லாந்து படுத்து நெஞ்சில் ஏந்தும் பிஞ்சுகள், நாகரீகக்கனவான்களாய்ப் பேருந்தில் ஏறிஅமர்ந்து நாம் செய்தித்தாள் விரிக்கையில் இடுப்பில் சிறுகுழந்தை சுமந்தபடித் தட்டேந்தி நிற்கும் தளிர்கள், பெரியமனிதர்களின் வக்கிரங்களுக்குப் பலியாகி நொய்டாவில் தொலைந்துபோகும் மழலைகள் என்ற சோகக்குறிப்புகளற்ற சமூகம் நம் கனவு.

இப்படியொரு சமூகத்தைக் கட்டியமைப்பதில் தனிமனிதர்கள், அரசு என்ற இரு கரங்களும் இணைந்து செயலாற்றவேண்டியிருக்கிறது. இந்திய சமூகத்தில் குழந்தைகளின் நலனுக்கான திட்டங்களும், கொள்கைகளும் சீரியமுறையில் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் தன் அதிர்ப்தியைச் சொல்லி மேலும் கணிசமான தொகை ஒதுக்கப்படவேண்டும் என வலியுறுத்தி வருகிறார் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ரேணுகா சௌத்ரி. அவர் கோரிக்கை நியாயமானது.


தம் பணிகளில் ஒன்றாக இந்தியக்குழந்தைகளின் பிரச்சினைகளைக் கண்டறிந்தும், அவை களையப்படுவதில் முனைந்தும் வருகிற யுனிசெப் அமைப்பு பல்வேறு செய்திகளைச் சுட்டிக்காட்டுகிறது. சமீபகாலங்களில் பொருளாதாரத்துறையில் ஒரு வேகமான வளர்ச்சியை இந்தியா தகவல்தொழில்நுட்பம் போன்ற துறைகளில் எட்டிப்பிடித்தாலும் அது பரவலாக்கப்பட்ட சீரான சமூக வளர்ச்சியிலும் முன்னெடுக்கப்படவேண்டும் என்கிறது
அவ்வமைப்பு. இதுகுறித்தான யுனிசெப்பின் குறிப்புகள் கீழே:-

Economic growth in India has been strong over the past decade, especially in the information technology sector. But this rising tide has not lifted all boats. Significant disparities remain, based on class, caste, gender and geography. The new United Progressive Alliance coalition government, which came into power
in May 2004, has pledged to emphasize social development as part of its National Common Minimum Programme. It seeks to eliminate some of the inequalities in Indian society by reducing poverty, increasing public spending on education, speeding the delivery of health services and improving nutrition and food security.

Issues facing children in India

1. Polio remains a serious threat, notwithstanding a massive campaign to eradicate it. Children continue to die of vaccine-preventable diseases such as measles.

2. Malnutrition affects nearly half of all children under age five.

3. Anaemia affects the vast majority of pregnant women and teenage girls, stunts children’s growth and is a leading cause of maternal death and babies with low birth weight.

4. Estimates of the number of people in India living with HIV/AIDS range from 2.2 million to 7.6 million. Diarrhoea, often caused by unsafe drinking water or poor sanitation, is the second leading cause of death among children. Access to clean drinking water has improved in recent years, but 122 million households
lack toilets.

5.School enrollment is increasing, but retention and completion rates remain low in part because of the poor quality of the education system, which emphasizes memorization over problem-solving.

6. Women face many forms of gender discrimination. A national preference for male children has led to an increasing gap in gender ratios of children under age six, a trend that may be attributed to female foeticide. Despite a national campaign by the government, birth registration rates are low, especially in the poorest regions.

7. The December 2004 tsunami struck India’s southeast coast and the Andaman and Nicobar islands, killing thousands and causing widespread destruction.


Activities and results for children

1. Thanks to more than a billion doses of polio vaccines and a massive public education campaign, UNICEF and its partners have made significant progress toward wiping out polio.

2. UNICEF helped deliver 49 million doses of vitamin A supplements in 2004, and has partnered with the government to distribute iron and folic acid tablets to teenage girls.

3. To reduce malnutrition and child mortality, UNICEF is raising awareness of the importance of breastfeeding infants.

4. India’s new government reinstated a ban on the sale of non-iodized salt, a move that will combat iodine deficiency.

5.Reducing the spread of HIV/AIDS is an urgent priority. UNICEF has helped train hundreds of health-care teams in preventing mother-to-child transmission.

6. School enrollment has increased over the past decade, and the gender gap in enrollment rates has been dramatically reduced. Literacy rates have improved as well.

7.The government has made school sanitation and hygiene an integral part of its national sanitation and water supply programmes.

பிரச்சினைகளையும், அவற்றிற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் ஒருசேரச் சொல்கின்றன மேலுள்ள குறிப்புகள். இச்சூழலில் ரேணுகா சௌத்ரி முன்வைத்திருக்கும் முக்கியமான பிரச்சினையும் குழந்தைகளுக்கான சரிவிகித உணவின்மையே ஆகும். ஏழைக்குடும்பங்களில் இருந்து படிக்கும் குழந்தைகளுக்கு அரசுப்பள்ளிகளின் சத்துணவுத்திட்டம் பயனளிப்பவை. ஆனால் அது ஒவ்வொருநாளும் சத்துள்ள ஒரு சரிவிகித உணவாக அமையும்
வண்ணம் முறைப்படுத்தப்பட்ட ஒன்றாகத் தெரியவில்லை. வாரத்தில் இரண்டு அல்லது மூன்றுநாட்கள் முட்டைகள் என்றெல்லாம் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அவை ஒரு கடைசிக்குடிமகனை வந்து சேருகிறபோது இடையில் பல ஊழல்களையும், தரகர்களையும் தாண்டி நீர்த்துப்போய்ப் பெயருக்கு வந்துசேர்பவையாக உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காய்கறி சிறிதளவு, பால் சிறிதளவு, இறைச்சி, பருப்புவகைகள் என்ற சமச்சீரான
உணவாக இது தற்சமயம் இல்லை. இந்நிலையில் இந்த malnutrition பிரச்சினைக்கு மட்டும் இந்தியாவில் சரியானதொரு திட்டம்தீட்டிச் செயல்படுத்த இப்போது அதற்கு ஒதுக்கப்படுவதைவிடவும் 32 மடங்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்கிறார் ரேணுகா சௌத்ரி.


இவைதவிர சுத்தமான குடிதண்ணீர் மற்றும் கழிவறை போன்ற சுகாதாரப்பிரச்சினைகளும் இன்றுவரை ஒரு சவாலாகவே இருந்துவருகிறது. ஓவொரு பட்ஜெட்டிலும், திட்ட அறிவிப்பிலும் முன்னெடுக்கப்பட்டாலும் அது வேண்டிய பலனை அடையமுடியாவண்ணம் விழிப்புணர்வின்மை, லஞ்சம் போன்ற மிகப்பெரும் முட்டுக்கட்டைகள்
நமக்கு உண்டு. எனக்குத்தெரிந்து ஒரு கிராம ஊராட்சித் தலைவர் நொந்துகொண்ட விடயங்கள் பல. திறந்தவெளிக் கழிப்பு மூலமான சுகாதாரக்கேடைத் தடுத்து நிறுத்த கிராமங்களில் ஊருக்கொரு பொதுக்கழிவறை கட்டிக்கொடுத்தும் அது தண்ணீர் வசதி, சுத்தப்படுத்தும் வசதியின்றிச் சும்மா கிடப்பது, தனிப்பட்ட குடும்பங்கள் கழிவறை கட்டிக்கொள்ள மானியத்துடன் கடன் வழங்கினாலும் அந்தப் பணத்தைப்
பெற்றுக்கொண்டு ஆனால் திட்டத்தைச் செயல்படுத்தாத மக்கள் மனநிலை, அந்தந்த ஊருக்கு என்னென்ன உதவிகள் உண்மையிலேயே தேவைப்படுகின்றன என்பதை ஒரு ஊராட்சித்தலைவரிடம் கேட்டு வரையறுக்காமல் மேல்மட்டத்தில் பொத்தாம்பொதுவாகத் திட்டங்களைத் தீட்டி அனுப்பிவிடுவது என்பன போன்ற பல குறைகளை
ஊராட்சித்தலைவரின் பார்வையில் அறியமுடிகிறது.

ஒரு அரசு எவ்வளவுதான் நல்ல திட்டங்களை எடுத்தாலும், அதைச் சரியாக அதே அக்கறையில் செயல்படுத்தும் அதிகாரிகள், அதைப் பயன்படுத்திக்கொள்ளத்தேவையான மக்கள்¢ன் விழிப்புணர்வு இரண்டும்கூட முக்கியமாகின்றன. இந்த அடிப்படைப்பிரச்சினைகள் தவிர்த்துக் குழந்தைகளுக்கான நல்ல அறிவுமூலங்களை அவர்கள்¢ன் மொழியிலேயே கொடுப்பதும் ஒரு நாகரீக சமூகத்திற்கு அவசியம். குழந்தைகளுக்கான நல்ல
புத்தகங்கள், பதிப்பகங்கள், நூலகங்கள், விளையாடுமிடங்கள், பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்த ஆசிரியர்கள், வகுப்புகளின் பிரிவுகள், பாதுகாப்பு, பாடம் மற்றும் போதிக்கும் முறைகளில் மாற்றம், குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பில் தீவிரம், கட்டாயமாக்கப்பட்ட இலவச அடிப்படைக்கல்வி என்று சிறப்பான செயல்திட்டங்கள் நடமுறைக்குவருவது நம் தேசத்தின் சமூகவளர்ச்சியில் ஒரு மைல்கலாக இருக்கும்.


இப்படியான ஆர்வத்தில் "ஒதுக்கப்பட்ட மூவாயிரத்து சொச்சம் கோடிக்குப்பதிலாகப் பத்தாயிரம் கோடி என் துறைக்கு வேணும், குழந்தைகள் நலனுக்கு நாம் நிறையச் செய்யவேண்டியிருக்கிறது" எனக் கேட்கும் ரேணுகாசௌத்ரியின் கோரிக்கை நியாயமானதே! ஆனால் பெறப்படும் ஒவ்வொரு ரூபாயும் குழந்தைகளின் நலனுக்காக மட்டுமே போய்ச்சேருவதும் முக்கியமானது!

தகவல்களுக்கும், குறிப்புகளுக்கும் நன்றி:-

Times of India
www.unicef.org

Thursday, February 22, 2007

நான் ரசித்த பயணம்

முன்குறிப்பு:-
நண்பர் கானாபிரபாவிற்கு சமர்ப்பணம் இப்பதிவு. கூடப்படித்த ஒரு நண்பன் பொன்னாம்பூச்சி பிடித்துத் தீப்பெட்டியில் போட்டுப் பள்ளிக்குக் கொண்டுவந்தான் என்பதற்காக அதேமாதிரித் தானும் கொண்டுபோக விரும்பிய மனதும், மயில் தோகையின் சில இறகுகளைப் புத்தகத்தில் ஒளித்துவைத்து அது குஞ்சு பொறிக்கும் எனச்சொன்ன தோழியைப்பார்த்துத் தானும் மயிலிறகு தேடி அலைந்த மனதும் முற்றிலும் கரைந்துவிடாமல் இன்னுமிருக்கிறதுபோலும். எனவேதான் சமீபத்தில் கானாபிரபா மாட்டுவண்டிகள் பற்றிய இடுகை ஒன்று எழுதியதிலிருந்து நான் எப்போதோ திசைகளின் பயணச்சிறப்பிதழுக்காக எழுதிய இக்கட்டுரை நினைவில் வந்து நின்றுகொண்டேயிருந்தது. கணினியில்
ஒவ்வொரு இடமாகத்தேடி இன்று கண்டுபிடித்தேவிட்டேன். உங்களை இதைப்படிப்பதிலிருந்து காப்பாற்ற கணினி எவ்வளவோ முயன்று ஒளித்துவைத்துப் பார்த்தது. கடைசியில் நானே வென்றேன். வேறுவழியில்லை, படியுங்கள்:))


"எல்லோர்க்கும் அன்புடன்" என்ற கடிதங்களின் தொகுப்பு நூலில் கல்யாண்ஜி தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் "உதிர்ந்த மாஞ்சருகுகளுக்கு அடியே அமுங்கிக் கிடக்கும் ஒரு கிளிச்சிறகு போல" என்றொரு உவமையைக் கையாண்டிருப்பார். அப்படித்தான்
தற்போதைய இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ரயில், விமானப் பயண அனுபவங்களுக்கு அடியில், அசைபோட்டால் தாலாட்டும் அற்புத நினைவுகளாய் அமுங்கிக் கிடக்கின்றன அந்த மாட்டுவண்டிப் பயண நாட்கள்.


பேருந்துகள் ஊருக்குள் வந்துபோகும் முன்னேற்றமோ, இருசக்கர வாகனங்களின் படையெடுப்போ, மகிழுந்துகள் வைத்துக்கொள்ளுமளவு வசதியோ இல்லாதிருந்த காலத்தில் மக்களின் பயணங்களுக்குக் கைகொடுத்தவை மாட்டு வண்டிகள். ஈரோடு மாவட்டத்தின் மையப் பகுதியில் மானாவாரி விவசாயம் செய்து வாழும் மக்களுக்கு மத்தியில் பாவாடை சட்டை போட்ட பள்ளிச்சிறுமியாய்த் திரிந்தவரைக்கும் மாட்டுவண்டிப் பயணங்களை என்னால் அனுபவிக்க முடிந்தது. விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு அப்போது டிராக்டரை விடவும் மாடுகள் கொண்டு நிலத்தை உழுவது பொருளாதார ரீதியாகச் சிக்கனமானதாகவிருந்தது. எனவே வீட்டுக்கு வீடு மாடுகள் இருந்ததால் வண்டிகளும் கூடவே இருக்கும். "மாடுகள்" என்ற வார்த்தை பொதுவாய்ப் பயன்படுத்தப்பட்டாலும் உழுவதற்கும், வண்டி இழுப்பதற்கும் பசுமாடுகளைப் பயன்படுத்துவது அதிகம் விரும்பப்படாதவை. "காளைகள்" மற்றும் "எருதுகள்" என்று சொல்லப்படும் ஆண்பால்
விலங்கினங்களே இந்த வேலைகளைச் செய்பவை. வண்டிகளில் இருவகை உண்டு. விவசாயத்திற்குத் தேவையான பொருள்களையும், விளைபொருள்களையும் சுமந்து செல்ல கூடாரம் அற்ற மொட்டைவண்டிகளும்*, ஆட்கள் பயணம் செல்ல மழை, வெயிலில் இருந்து
காக்கும் கூடாரம் வேயப்பட்ட சவாரி வண்டிகளும்* அவை. இந்த விவரங்கள் எல்லாம் தமிழ்சினிமா பார்க்கும் நமக்குத் தெரிந்தே இருக்கும் மாட்டுவண்டிப் பயனத்தையே மேற்கொண்டிராதவர்கள் உட்பட.


கூட்டுப்புழுப் பருவமான குழந்தமைக் காலம் கழிந்து பட்டாம்பூச்சியாய்ப் பறந்துகொண்டு தெருவில் திரிந்து விளையாட ஆரம்பித்தபோது அதிசயமாய்த் தெரிந்தன மாட்டுவண்டிகள். சைக்கிள்கூட மிதிக்க வேண்டும், ஆனால் எதுவும் செய்யாமல் ஏறி உட்கார்ந்தால் எருது
நம்மையும் சேர்த்து இழுத்துக்கொண்டு போகிறதே என்ற அப்பருவத்திற்கேயுரிய அறியாமை கலந்த பிரமிப்பைத் தந்தன அவை. தோட்டத்திலிருந்து வீட்டிற்கு எதையாவது சுமந்துகொண்டு வரும் மொட்டைவண்டி திரும்பித் தோட்டம் போகையில் வண்டியிலிருந்து
பொருட்கள் இறக்கப்படும் காலஇடைவெளிக்குள் அவசரமாகக் காரணம் யோசித்து அம்மாவிடம் அதைப் பதட்டமின்றி நிதானமாகச் சொல்லி இயல்பென்று நம்பவைக்கும் சாதனையைச் செய்து முடித்து வண்டியில் ஏறி உட்கார்ந்திருப்பேன் தோட்டம் போக. சந்தைக்கோ, வேறு சோலிக்கோ (வேலைக்கோ) பக்கத்து ஊரில் போய்ப் பேருந்து பிடிப்பதற்கு சவாரி வண்டியில் கிளம்பும் அப்பாறய்யனுடன் அந்த ஊர்வரைக்கும் போய் அவரைப் பேருந்தில் ஏற்றிவிட்டுத் திரும்ப வரும் வேலையில் வண்டியோட்டும் தங்கராசண்ணனுடன் இணைந்துகொள்ளத் திட்டம் போட்டுத் தோற்றுவிடும் நாட்களில் ஏற்பட்ட சோகங்களை எப்படி நான் எழுதிச் சொல்ல? வீட்டிலிருந்து கிளம்பும் வண்டி எதுவானாலும் ஏறிச் சிறிது தூரமேனும் சென்றுவிட்டுப் பின் அங்கிருந்து இறங்கி நடந்து வரும் அளவு அப்போது அந்தப் பயண மோகத்தில் ஆழ்ந்து கிடந்தேன்.


எல்லாவற்றிற்கும் சிகரம்போன்ற அனுபவம் ஒன்றுண்டு. கருவேலமரங்களில் வெள்ளைப் பூக்களாய்க் கொக்குகள் அமர்ந்திருக்கக் கீழே அலையடித்துச் சிரித்துக்கொண்டிருக்கும் அப்போதைய மழைக்கு நிறைந்த குளம். குளத்தோரக் காட்டுவெளியொன்றில் களையெடுக்கும் வேலைக்குக் கைக்குழந்தையுடன் வரும் தாயொருத்தி மரத்தில் தூளிகட்டிக் குழந்தையைத் தூங்கவைத்துக் களையெடுக்கப் போனபின்னும் காற்றுக்கு ஆடும் அத்தூளி. காற்றுக்கு ஆடினாலும் தாயே ஆட்டுவதாய் நினைத்துத் தூங்கும் அக்குழந்தை. விதைத்த தானியங்கள் முளைத்து வளர்வதில் அவ்வருட வருமானம் கணக்குப்போட்டபடி கவலையற்றிருப்பார்கள் உழவர்கள் அன்று குடித்தது வெறும் கஞ்சிதான் ன்றாலும். அப்படியான மாதங்களில் ஒன்றில் வரும் கோட்டைமாரியம்மன் சாட்டுத் திருவிழா. அதற்கு ஊரே புறப்பட்டுப்போகும் மாட்டு வண்டிகள் கட்டிக்கொண்டு. அந்தப்பகுதியில் சாமிநம்பிக்கை கொண்டவர்கள் அடிக்கடி போகும் வழிபாட்டுத் தலங்களில் ஒன்று கோட்டை
மாரியம்மன் கோயில். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை அங்கு சாட்டுத் திருவிழா கொண்டாடப்படும். அக்கம்பக்க ஊர்களிலிருந்தெல்லாம் மக்கள் கூட்டம் வந்து சேரும். அதன் வழிபாட்டு முறை வித்தியாசமானது. சாட்டுத் திருவிழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து துவங்கும் சுற்று வட்டார ஊர்களில் அது தொடர்பான கொண்டாட்டங்கள். பெண்கள் காலையில் எழுந்து பச்சைத்தண்ணீரில் குளித்து
முடித்து ஈரம் உலராமலே சேலையில் முன்பக்கம் மடித்துக்கட்டியவாறு வீடுவீடாகப் போய் மடிப்பிச்சை எடுத்து வருவார்கள். அதில் சேரும் தானியங்களைப் பெரும்பாலும் இரந்துவருவோர்க்குத் தானமாக வழங்குவார்கள். பிறகொரு நாள்குறித்து ஊரேசேர்ந்து சாட்டப்பட்டிருக்கும் மாரியம்மனுக்காகத் தங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைப்பார்கள். இவையெல்லாம் முடிந்தபின் திருவிழாவின் மூன்று நாட்களில் ஏதோவொரு நாளுக்குக் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கும் ஊரே சேர்ந்து போய்வருவார்கள்.


அப்படி ஊர்சேர்ந்து போவதே மக்களின் சின்னச்சின்ன மகிழ்ச்சிகள் கொண்ட சேர்ந்துவாழும் வாழ்வியல் கலாசாரத்தின் ஒரு குறியீடு. எல்லோருக்கும் வசதியான நாள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பயணம் முடிவு செய்யப்படும். பின்னர் கூட்டத்திற்குத் தகுந்தபடி மாட்டு
வண்டிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். குறைந்தது ஐந்திலிருந்து அதிகபட்சம் பத்து வண்டிகள் வரை இருக்கும். சவாரி வண்டிகளுக்கு முன்னுரிமை கொடுக்கபட்டு, போதவில்லையெனில் மொட்டை வண்டிகளும் ஏற்றுக்கொள்ளப்படும். நிலமில்லாத
விவசாயத்தொழிலாளர்கள், நிலமுள்ள விவசாயிகள் என்ற வேறுபாடுகள் பெரும்பாலும் இந்தக் கொண்டாட்டங்களில் ஏற்றத் தாழ்வுகளைப் புகுத்தியதில்லை. அவர்கள் எந்த வண்டியிலும் ஆள் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு சேர்ந்துகொள்வார்கள். சாப்பிடுவதற்கு வசதியாகக் கட்டுச்சோறு, முறுக்கு போன்ற நொறுக்குத் தீனிகள் தயாரிக்கப்படும். பயணம் புறப்படும்நேரம் மாலையாகவும், திரும்பி வந்துசேரும் நேரம் அடுத்தநாள் அதிகாலையாகவும் இருக்கும். பொழுது கிளம்பையில் அவிழ்த்துவிடும் ஆடுமாடுகளைக் கவனித்துப் பொழுது சாய்கையில் அவற்றை ஓரிடம் சேர்த்தபின்தான் ஓய்வென்பது உழவனுக்கு. எனவே அவர்கள் திருவிழாப் பயணத்திற்குத் தோதான நேரம் இரவுதான்.


அடிவானத்தில் மஞ்சள் கரைத்து சூரியன் உறங்கச் செல்கையில் எம்மக்கள் கோட்டை மாரியம்மனை நோக்கி உற்சாகமாகக் கிளம்புவார்கள். துவைத்து நீலம்போட்ட வெள்ளைவேட்டி சட்டைகளில் ஆண்களும், நீண்டநாட்களுக்கு முன்பிருந்தே
கோயிலுக்குச்செல்லவென்று எடுத்து வைத்திருந்த சேலைகளில் பெண்களும் குதூகலத்தோடு கூடுவார்கள். வண்டியில் பூட்டுவதற்கு முன் எல்லா எருதுகளுக்கும் தீவனம் வைக்கப்பட்டதா என்பது பரிசோதிக்கப்படும். ஒவ்வொரு வண்டிக்கும் எருதுகள் இழுக்குமளவு சரியான
பாரம் பார்த்து ஆட்களின் எண்ணிக்கை பிரிக்கப்படும். குழந்தைகள் இக்கணக்கில் வருவதில்லை. அவர்கள் விரும்பும் வண்டி அவர்களுக்கு வழங்கப்படும். கொஞ்சம் கூடஇருந்தாலும் குழந்தைகளின் இருப்பை எருதுகளும் பாரமென்று நினைப்பதில்லை. ஏறி உட்கார்ந்தவர்கள் முன்பாரம்* பின்பாரம்* ஏற்படாவண்ணம் (load balancing) சரியாக நகர்ந்து அமரச் சொல்லப்படுவார்கள். புழுதிமண்சாலைகளில் புறப்படும் வண்டிகள் கோவிலை அடையும்முன் வாகனப் போக்குவரத்துள்ள தார்ச்சாலைகளிலும் பயணிக்க வேண்டியிருக்குமென்பதால் எந்த வாகனசப்தம், ஒலிப்பான்சப்தம், விளக்குவெளிச்சத்திற்கும் மிரளாத அனுபவமுள்ள எருதுகளின் வண்டி முன்செல்ல, மற்றவை பின்தொடரும்.
தங்களின் மக்கள், பேரன்பேத்திகளை கோயிலுக்கு வழியனுப்பிவைத்துவிட்டு உறங்கப்போகும் பெரியவர்களை மட்டும் கொண்ட ஊர் முத்துக்களைப் பிரிந்த கொலுசாக மௌனமாக இருக்கும்.


கேலியும், கிண்டலும், சிரிப்பொலிகளும் நிரம்பிய அப்பயணத்தைப் பார்க்க நிலவு மெல்லக்கிளம்பிவந்துகொண்டிருக்கையில் பயணம் பாதிதூரம் கடந்துவிட்டிருக்கும். தார்ச்சாலைகளில் எதிர்ப்படும் வாகனங்களுக்கு இவ்வண்டிகள் ஒதுங்குவதைவிட அவ்வாகனங்கள் ஒதுங்கிச்செல்வதே அதிகமாக இருக்கும். ஏதாவது ஏடாகூடமாய் வேகம்கூட்டி உரசுவதுபோல் வரும் வாகன ஓட்டுனர்களை இப்பாமர மக்களின் கோபம் பதம்பார்க்கும். புலியை முறத்தால் விரட்டிய மறத்தமிழச்சிகளின் வாரிசுகளாய் ஆண்களுக்கு ஆதரவாய்ப் பெண்களும் அம்மாதிரி சமயங்களில் பின்வகுத்து நிற்பார்கள். சில மணிநேரங்களைப் பயணத்திற்குக் கொடுத்துக் கோயிலை அடைந்தவுடன்
ஒரேஇடத்தில் வண்டிகளை நிறுத்தி எருதுகள் அவிழ்க்கப்பட்டு வண்டிகளிலேயோ அல்லது பக்கத்திலுள்ள மரங்களிலோ கட்டப்படும். கையோடு கொண்டுவந்த தீவனத்தை அவற்றிற்கு வைத்தபின்பே அவ்விடம்விட்டு நகர்வார்கள் ஆண்கள். அந்த நேரத்தில் அலைமோதும் கூட்டத்தைப் பார்த்தபடி கோயிலில் மாரியம்மன் அமர்ந்திருக்க அமராவதி ஆறு எதிரே ஓடிக்கொண்டிருக்கும். நன்கு மழைபெய்து ஆற்றில் தண்ணீர் நிறைய ஓடும் காலத்தில்தான் கோட்டைமாரியம்மன் சாட்டப்படும். பரந்துவிரிந்த அகலத்தில் ஓடும் அமராவதி ஆற்றில் குளிக்கச்செல்வார்கள் பலரும் அந்நேரத்தில். ஓடும் ஆற்றில் பிரதிபலிக்கும் நிலவு பிடித்து விளையாட நீண்ட தொலைவு தண்ணீருக்குள் செல்லும் நானும் என்சோட்டு நண்பர்களும் தொடர்ந்த மிரட்டல்களுக்குப் பின் கரையேறி வருவோம்.


தங்களுடன் வந்து, குளிருக்குப் பயந்து ஆற்றில் இறங்காதவர்களைச் சீண்டியபடி விதவிதமான வேண்டுதல்களையும் நிறைவேற்றி முடிப்பார்கள். சேற்று வேசமிட்டுக் குளித்தல், அடியளந்து தெண்டலிடுதல், பழம் வாங்கிச் சூறையிடுதல், கண்ணடக்கம் வாங்கி
மாரியம்மனுக்கு சாத்துதல் என்று அவரவர் கோரிக்கைகள் முடிந்து உணவும் முடித்த பின் கடைகளுக்குச் செல்வார்கள். அம்மாதிரிக் கோயில்களில் வியாபார லாபம் கருதி திருவிழாக்களுக்கு மட்டும் நிறையக் கடைகள் போட்டிருப்பார்கள். பலூனிலிருந்து கண்களுக்கு அணிய வண்ணக் கண்ணாடிகள் வரை வேண்டியது கேட்டுப் பெறும் ஆண்குழந்தைகளைவிட கூடுதலாக வளையல், பாசி, சடைவில்லை, ரிப்பன் என்று நீளும் பட்டியலோடு பெண் குழந்தைகள் நிற்பார்கள். முடிந்த அளவு வாங்கிக் கொடுத்தும், முடியாதவற்றிற்குச் சமாதானங்கள் சொல்லியும் அந்த வேலை முடிந்தபின் பெண்கள் பாத்திர பண்டங்கள் வாங்கத் தொடங்கினால் சுவாரசியம் ஆரம்பிக்கும். யானைவிலை சொல்லும் கடைக்காரர்களை மடக்கிக் கோழி விலைக்கு வாங்கும் சாதுர்யம் நம் பெண்களுக்கு அதிகம். அந்த சாதுர்யம் தெரிந்தே ஒரு கள்ளச் சிரிப்போடு விலையை உச்சாணியிலிருந்து துவங்கும் கடைக்காரர்கள் உண்டு. ஒட்டுப் பொட்டிலிருந்து வீட்டுக்கிழவிக்கு வெற்றிலை கொட்டும் சிறு உலக்கைவரை வாங்கி முடித்தபின் வண்டி வந்து சேர்வார்கள். அந்த வியாபாரத்தில் அவரவர் தேவை தீர்த்துக்கொள்ளும் வாழ்வு மட்டுமின்றி அடுத்தவர்களுக்கு வாங்கிக்கொடுத்து மகிழும் பண்பாடும் இருக்கும். இந்தக் களேபரங்களுக்குள் மூழ்க விரும்பாதவர்கள் வண்டிகளில் காத்திருப்பார்கள். சிலர் ஒரு உறக்கம் போட்டு எழுந்திருக்கப் போதுமான
அவகாசம் பொதுவாய் அச்சமயங்களில் பெண்களால் ஆண்களுக்கு வழங்கப்படும். ஆட்கள் எல்லோரும் திரும்ப வந்துவிட்டார்களா என்ற கணக்கெடுப்புக்குப் பின் வந்தபாதையில் திரும்பத்தொடங்கும் வண்டிகள்.


சிறிது தூரத்திற்கு மீண்டும் கலகலப்பு இருக்கும். வாங்கிய பொருட்களின் விலை பற்றியதாகவோ, அவற்றின் அழகு பற்றியதாகவோ, யார்யார் என்னென்ன வாங்கினார்கள் என்பதாகவோதான் உரையாடல்கள் அமையும். அதற்குப்பின் சிலதினங்களாய்ச் சேர்த்துவைத்த ஆசைகளோடு இன்று பலமணிநேரங்களாய்ப் பறந்துதிரிந்த கொண்டாட்ட மனமும், கூடவே அலைந்த உடலும் களைப்பை உணரத்தொடங்குகையில் அனைவரும் அமைதியாவார்கள். ஒரு மழைப்பருவத்துவிதைப்பு அறுவடையில் முடிந்தபின் அக்கடாவென இருக்கும் வயலைப்போல் கொஞ்சம் சும்மா இருப்பார்கள் எல்லோரும். அந்த அமைதியில் எருதுகளும் தூங்கத் துவங்கிவிடுமோ என்ற அச்சத்தில் வண்டி ஓட்டுபவர்கள் சிலரை வம்புக்கிழுப்பார்கள் வண்டிக்குள். வரவழைக்கப்படும் உற்சாகம் இயற்கையாய் இருக்காதெனினும் தூரம் கடக்கும் வேலையில் ஒரு கைகொடுக்கும் என்பது உண்மை. மெல்லநடக்கும் எருதுகளைத் துரத்தாமல் அவற்றின் போக்கில் விட்டுவிட்டுப்
பீடி குடித்துக்கொண்டு வருவார்கள் சில ஓட்டுனர்கள். வாங்கிய பொம்மைகளைக் கைகளில் பிடித்தவாறே தங்களின் கடலளவுக் கனவுகள் நிறைவேறிய நிம்மதியில் யார் மடியிலேனும் படுத்துத் தூங்கிப்போன குழந்தைகள், வாய்ப்பேச்சுக்கு வராவிட்டாலும் வழித்துணையாகக்
கடைசிவரை இருக்கும் நிலவு என்று சில கவிதைகளைக் கொண்டபடி ஊர்வந்து சேரும் வண்டிகள். குழந்தைகளையும், பொருட்களையும் வாரியணைத்தபடி எல்லோரும் வீட்டுக்குள் போகையில் அடுத்தநாளுக்காய்க் கிழக்கு வெளுக்கத் துவங்கியிருக்கும். இதோ! இருபது
ஆண்டுகளுக்குப்பின் உலகின் எதோ ஒரு மூலையில் எறிந்துகிடக்கும் என் வாழ்க்கையைப் பொறுக்கி எடுத்துக்கொண்டே திரும்பிப் பார்க்கிறேன், இப்போது பயணங்களில் என் ஊர் மக்கள் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்துவதில்லை. நம் தேசத்து உழவர்களின்
வாகனங்கள் மாறிவிட்டன, ஆனால் வாய்க்கும் கைக்கும் பத்தாமலே போகும் அவர்களின் வாழ்க்கை?


பின் குறிப்பு:
* குறியிட்ட சொற்கள் கொங்கு நாட்டில் பேசப்படும் வழக்குசொற்கள்

Tuesday, February 13, 2007

ஒரு மரணமும் சிலகுறிப்புகளும்

எப்போதும் கால்களில் சக்கரங்களோடு ஓடுகிற வாழ்க்கை ஆகிப்போய்விட்டது நமக்கு. ஏதோ ஒரு கதையில் யாரோ சொன்னதுபோல் "சாலையில் அடிபட்ட குழந்தை இறந்தசெய்தி கேட்டதும், எல்லாத் தாய்மார்களும் பதறிப்போனார்கள், ஓடிப்பார்த்தார்கள், அவரவரும் அது தன் பிள்ளையாய் இருந்துவிடக்கூடாதென்று நினைத்துப் பயந்தார்கள். அப்படியில்லை என்று உறுதி செய்துகொண்டபின்தான் அடிபட்ட குழந்தைக்காய்க் கவலைப்படத் தொடங்கினார்கள்" என்கிற வரிகளில் பொதிந்துள்ள உண்மை வலியது. பெரும்பாலான நேரங்களில் ஒரு சுயநல நதியாய்ச் சுழித்துக்கொண்டோடும் வாழ்வில் நுரைகளிலிருந்து மீண்டு கரைக்கு வரும் நேரங்களும், அங்கிருந்து அதே நதிகுறித்துச் சிந்திக்கச் சொல்லித்தருகிற தருணங்களும் சொற்பமானவை. அப்படியொரு தருணத்தை வழங்கியிருக்கிறது தேன்கூடு சாகரனின் மரண நிகழ்வு. ஒரு நல்ல மனிதரின் அகாலமரணம் தந்த அதிர்ச்சியிலிருந்து அதை எழுதிஎழுதியேனும் மீண்டுவர முயலும் முனைப்புக்களாகப் பல நண்பர்களின் இடுகைகளைப் பார்க்கிறேன்.

எனக்குத் தேன்கூட்டையோ, சாகரனையோ பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு பூவாய் உட்கார்ந்து எழும் பட்டாம்பூச்சியின் உறிஞ்சுகுழலில் ஒட்டிக்கொண்டு கூடவரும் மகரந்தத்துகள்கள் மாதிரி இங்கு பலரும் இட்டிருக்கும் அவர் குறித்த
செய்திகளைப் படிக்கப்படிக்க அவர் மரணத்தின் பாதிப்பு எனக்குள்ளும் பரவத் தொடங்குகிறது. சிரிக்கிற அம்மாவை மட்டுமே பார்க்கப் பிடித்திருந்த நாட்களில், எந்த இழவுவீட்டிலும் அழும் அம்மாவைச் சகிக்க முடியாமல் முந்தானை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியேகூட்டிவந்த செயலைச் செய்தபோது அந்த மழலையின் அறியாமையில் எனக்கு இருந்த வயது 3 ஆகத்தானிருக்கும். இதோ அதே வயதில் சாகரன் மகள் வருணிகா. எப்படி எடுத்துக்கொள்வாள் அவள் இதை? அப்பா வாங்கித் தந்த பொம்மைகள், துணிமணிகள்
எல்லாம் இருக்க அந்தப் பொம்மைகளோடு விளையாடி முடித்த களைப்பில் உட்கார விரும்பி அப்பாமடி தேடிப் பின் அது கிடைக்காத சோகத்தைச் சொல்லக்கூடத் தெரியாத வயதில் இருக்கும் அக்குழந்தையின் உணர்வுகளை எப்படி மொழிபெயர்ப்பது? அடுத்தநாள்,
அடுத்தவாரம், அடுத்த மாதம், வருடம் எனத் தன் கணவருடன் சேர்ந்து எத்தனை காலத்திற்கான கனவுகளைச் சுமந்தபடி இருந்தாரோ அந்த மனைவி!

இந்த வலைத்திரட்டிகளை உருவாக்கி நிர்வகிப்பதெல்லாம் எவ்வளவு பெரிய வேலை என்று நினைத்துக்கொள்வதுண்டு. அதை உருவாக்குவதற்காகச் செய்யவேண்டிய உழைப்பும், பிறகு பயன்பாட்டில் விடுகிறபோது ஏர்படுகிற குறைகளைக் கண்காணித்தும் களைந்தும், பாராட்டுகள் வருகிறபோது புன்னகைத்தும், பழிகள் வந்தாலும் பொறுமைகாத்தும் மிகக் கவனமாகச் செயல்படவேண்டிய வேலை இது. அப்படி ஒரு வேலையை விரும்பி எடுத்துக்கொண்ட இந்த 28 வயது இளைஞர் அதோடு நிற்காமல் வேறுபல முயற்சிகளில்
நண்பர்களுக்காகத் தம் உழைப்பைக் கொடுத்தும், ஊக்கப்படுத்தியும் வந்திருக்கிறார் என்பதைப் பரஞ்சோதி, நண்பன் எல்லாம் சொல்வதைக் கேட்க அவர்மீதான மதிப்பு கூடுகிறது. வெறும் திறமையாளராக மட்டுமின்றி மற்றவர்களைப் புரிந்துகொள்கிற, நேசம் பாராட்டுகிற சிறந்த
மானுடப் பண்புகளுக்கும் உரியவராக இருந்திருக்கிறார் என்பதைக் காசி போன்றவர்களின் பின்னூட்டங்கள் எடுத்துக்காட்டுவதைப் பார்க்கும்போது சாகரனின் மரணம் தரும் வலி இன்னுமொரு இனம்தெரியாத ஆழத்துக்குள் இழுத்துப்போகிறது.

வீடுகட்டி முடித்ததன் பின்னால் மீந்த கற்களை மனதில் அடுக்கிக்கொண்டவர்களாய் அடுத்தவீட்டுடனும் அந்நியமாய் வாழப்பழகிக்கொண்ட காலகட்டத்தில், நான் இருக்கும் வெளியொன்றில் எனக்கு மிகஅருகில் சத்தமில்லாது தன் சுவடுகளைப் பதித்துக்கொண்டிருந்த ஒரு சகமனிதரை அவரின் சாவிற்குப்பின்னால்தான் அறிந்துகொண்டிருக்கிறேன். செய்யஒன்றுமற்று வெறுமனே வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த நாளொன்றிலோ, சில மணித்திலாயங்கள் சுளையாய்க் கையிலிருந்த போது அவற்றைச் செலவழிக்கத் தெரியாது தூக்கத்திற்குக் கொடுத்திருந்த பகலொன்றிலோ சாகரன் பற்றித் தெரிந்துகொண்டிருக்கலாம். மொழிக்கான அவர் உழைப்புக்கும், ஆர்வத்துக்கும் அதே மொழிபேசுபவள் என்னும் முறையில் ஒரு வணக்கம் சொல்லியிருக்கலாம். குறைந்தபட்சம் ஒரு வாழ்த்து அல்லது நன்றியாவது. இப்போது சொல்லத் தோன்றுகிறது, ஆனால் சாகரன் இல்லை.

புன்னகைபுரிந்துவிடமுடியும் தூரத்தில் இன்னொருவர் இருந்தும் நம் உதடுகளைத் திறக்காத மௌனத்திலும், இன்னொருவரிடம் சேர்க்கச் செய்திகள் இருந்தும் உள்ளங்கைதொட்டு உணர்த்திட நீளாத விரல்களின் சோம்பலிலும் நாம் தவறவிடும் தருணங்களில் நமக்குத்
தெரியாமலே தீர்ந்துகொண்டிருக்கிறதா வாழ்க்கை???

இன்று அடக்கம் செய்யப்பட இருக்கும் தேன்கூடு சாகரனுக்கு என் அஞ்சலி.